சனி, 16 ஏப்ரல், 2011

பினாயக் சென்னும் , இந்திய இறையாண்மையும்




பன்னாட்டு நிறுவனங்களுக்கு இந்தியாவின்   மாபெரும்  கனிமவளங்களை விற்க மத்திய,மாநில அரசுகள் ஒப்பந்தம் போட்டனஆனால் அங்கு  வசிக்கும்  பழங்குடியின  மக்களுக்கு உரிய நிவாரணம்  எதையுமே  தராமல்  அவர்களை வன்முறையாக வெளியேற்றியதுஇதுபோன்ற அரசின் மக்கள் விரோத  போக்குகளுக்கு  எதிராக தொடர்ந்து போராடி வந்தார் மக்கள் மருத்துவர் பினாயக் சென்
அதனால் அவருக்கு மாவோயிஸ்ட்  இயக்கத்தோடு  தொடர்பிருப்பதாக கூறி கைது செய்தது சத்தீஸ்கர் அரசு. அந்த வழக்கில்  பினாயக் சென்னுக்கு மாவோயிஸ்டு இயக்கத்தினருக்கு உதவி செய்ததாகவும் , அரசுக்கு எதிராக கூட்டு சதி செய்ததாகவும் கூறி   சத்தீஸ்கர் விசாரணை நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. இந்த மோசடியான   தீர்ப்பிற்கு  நாடுமுழுவதும் கடும் கண்டனம் எழுந்தது. உலகம் முழுவதும் உள்ள மனித உரிமை ஆர்வளர்கள் இந்த தீர்ப்புக்கு எதிராக பல போராட்டங்களை நடத்தினர். ஆனாலும் மத்திய  அரசோ, மாநில அரசோ அசைந்து கொடுக்கவில்லை.

இந்த விசாரணை நீதிமன்ற உத்தரவை எதிர்த்து    ஜாமீன்  வழங்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் பினாயக்  சென் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிபதிகள் ஹெச்.எஸ். பேடி, சி.கே. பிரசாத் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. இந்தியா    ஜனநாயக நாடு, இதில் ஒவ்வொருவரும் ஏதேனும் ஒரு இயக்கத்திலோ அல்லது அரசியல் கட்சியின் ஆதரவாளராக இருக்க உரிமை உண்டு. மாவோயிஸ்ட் ஆதரவாளராக இருப்பதாலேயே இவரைக் குற்றவாளியாகக் கருத முடியாது. மேலும் வெறுமனே ஆதரவாளராக மட்டுமே இவர் உள்ளார். இதைக் குற்றம் என்று கூற முடியாது. ஆதரவு என்ற நிலையைத் தாண்டி வேறெந்த நடவடிக்கையிலும் விநாயக் சென் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் ஏதும் இதுவரை தரப்படவில்லை. மாநில அரசு எவ்விதமான உரிய ஆவணத்தையும் தாக்கல் செய்யவில்லை . எனவே அவருக்கு ஜாமீன் வழங்குவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

பினாயக்  சென் சார்பாக, பிரபல வழக்கறிஞர் ராம் ஜேத்மலானி ஆஜரானார். பினாயக் சென் மீது எவ்வித குற்றச்சாட்டையும் மாநில அரசு இதுவரை தெரிவிக்கவில்லை என்றார். மேலும் பியுஷ் குஹா என்பவரை 30 முறை சிறைக்குச் சென்று சந்தித்தார் என்பதும், மாவோயிஸ்ட் இயக்கம் தொடர்பான நோட்டீஸ்கள் அவரிடம் இருந்ததாகக் கூறுவதும் சரியான விளக்கமாக இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். இதை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டனர்.

நாடுமுழுவதும் நாட்டின் வளங்களை கொள்ளை அடித்துக்கொண்டும் , இமாலய ஊழல்களில் உழன்று கொண்டும் இருக்கும்  பலரும் சுதந்திரமாக சுத்திக்கொண்டிருக்க, அடித்தட்டில் உள்ள அரசின் வன்முறையால் பாதிக்கப்பட்ட  மக்களின் உயிர்வாழும் உரிமைக்காக போராடிய ஒரு நல்லவருக்கு ஆயுள் தண்டனை அளிக்கப்படுகிறது. ஊழல் செய்வது ,லஞ்சம் வாங்குவது , மோசடி செய்வது, தொழிலாளர்களை சுரண்டுவது, கருப்பு பணத்தை பதுக்குவது, என்ற எதுவே  இந்திய இறையாண்மையை பாதிக்காது. இது தான் இந்திய இறையாண்மையின்  லட்சணம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்