புதன், 30 மார்ச், 2011

தியாகி.பகத்சிங்கின் 80 வதாவது நினைவு தினபொதுக்கூட்டம் -சமயநல்லூர்




தியாகி பகத் சிங் 1931 வது வருடம் மார்ச் மாதம் 23  நாள் அன்று வெள்ளை அரசால் தாய் நாட்டின் விடுதலைக்காக போராடியதற்காக துக்கிலிடப்படார். அந்த மாவீரனின் நினைவு நாளான  மார்ச் 23  அன்று ஒவ்வொரு வருடமும் கம்யுனிஸ்ட் வொர்க்கர்ஸ் பிளாட்பாரம் (CWP ) அமைப்பு  பகத்சிங்கின் வாசகங்கள் அடங்கிய ஸ்தூபியை அமைத்தும் ,பொதுக்கூட்டம் நடத்தியும் பகத்சிங் விட்டுச்சென்ற  வரலாற்றுக்கடமையை ஆற்றி வருகிறது. இந்த ஆண்டும் சிவகாசி ,ஆலங்குளம் , சமயநல்லூர் ஆகிய இடங்களில் பகத்சிங் நினைவு ஸ்தூபியை அமைத்து பகத்சிங்கின் நினைவு தினத்தை அனுசரித்ததோடு, கடந்த ஞயிற்றுக்கிழமை (27 .03 .2011 )அன்று சமயநல்லூர் பிஎஸ்என்எல் அலுவலகம் அருகில் உள்ள மைதானத்தில் தியாகி.பகத்சிங்கின் 80 வதாவது  நினைவு தினப்பொதுக்கூட்டம்  நடைபெற்றது. அக்கூட்டத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பே அனுமதி கடிதம் கொடுத்தபோதும் அக்கூட்டம்  நடைபெறாமல் தடுக்க காவல் துறை எல்லா முயற்சியும் செய்தது,இந்திய தேச விடுதலைக்காக போராடிய தியாகி பகத்சிங்கின் நினைவு  தினக்கூட்டதிற்கு அனுமதி கிடைப்பதற்கு கூட நாம் கடுமையாக போராடவேண்டி உள்ளது என்பது ஒன்றே ஒரு பணிக்கு ஒரு சோறு பதமாக இந்த சமுதாயத்தின் அவல நிலையை நாம் பார்க்கலாம்.

கூட்டம் மாலை ஆறுமணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை நடைபெற்றது. கம்யூனிஸ்ட் வோர்கர்ஸ் பிளாட்பர்மின் தோழர்கள், பொதுமக்கள் உட்பட சுமார் நூறுபேருக்கு மேல் கூட்டத்தில் கலந்து கொண்ட  அக்கூட்டம் மிக சிறப்பான ஒழுங்குடன் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாணவர் ஜனநாயக இயக்கத்தின் (SDM) தலைவர் தோழர். டேவிட் வினோத் குமார் தலைமை தாங்கினார். கம்யூனிஸ்ட் வோர்கர்ஸ் பிளாட்பாரம் (CWP) பொது செயலாளர் (தெற்கு) தோழர்.ஆ.ஆனந்தன் , ‘மாற்றுக்கருத்து இருமாத மார்க்சிய இதழின் ஆசிரியரும், பகத்சிங்கின்  கடிதங்கள், கட்டுரைகள் மற்றும் ஆவணங்கள் அடங்கிய கேளாத செவிகள் கேட்கட்டும்புத்தகத்தின் ஆசிரியரும், கம்யூனிஸ்ட் வோர்கர்ஸ் பிளாட்பாரம் (CWP) அமைப்பின் தமிழக மாநில செயலாளருமான தோழர். த.சிவகுமார் , உழைக்கும் மக்கள் கமிட்டியின் மாநில அமைப்பாளர் தோழர். வரதராஜ் , விருதுநகர் மாவட்ட பட்டாசு தொழிலாளர் சங்கத்தின் தலைவர் தோழர். தங்கராஜ் , மாணவர் ஜனநாயக இயக்கத்தை(SDM) சேர்ந்த தோழர் .கோபி , மற்றும் கம்யூனிஸ்ட் வோர்கர்ஸ் பிளாட்பாரம் (CWP) அமைப்பை சேர்ந்த தோழர். இடிமுழக்கம் மகாதேவன், ஆகியோர்கள் கலந்து கொண்டு பகத்சிங்கின் நினைவை அனுசரிப்பதன் நோக்கத்தையும் அந்த வீரத்தியாகிகளின் பாததடங்களில் நாம் நடைபயில வேண்டியதன் வரலாற்றுக்கடைமையும்  எடுத்துரைத்தனர்.

 தோழர்.த. சிவகுமார் தனது உரையில் 1931  அடிமை இந்தியாவில் என்ன நிலைமை இருந்ததோ அதே நிலைமை தற்போதும் நீடிப்பது  என்பதுமான  மோசமான நிலைமையில், பகத்சிங்கின் நினைவு தின  கூட்டத்திற்கு அனுமதி கிடைப்பதற்கு கூட எவ்வளவு போராட வேண்டியிருக்கிறது என்பதை பதிவு செய்தார். தோழர் .ஆ.ஆனந்தன் தனது உரையில் பகத் சிங்கை மாவீரன் என்று ஏன் நாம் குறிப்பிடுகிறோம் என்பதற்கான காரணங்களை குறிப்பிடுகையில் சிறை சாலைகளில் சீர்திருத்தம் கோரி உண்ணாவிரதம் இருந்த போது அந்த மாவீரர்கள் காட்டிய நிதானமும் , உறுதியும் அவர்களின் மனவலிமையை பறை சாற்றுவதாக அமைந்தது என்பதை விரிவாக பேசினார். பரபரப்பான தேர்தல் நேரத்தில் தியாகி.பகத்சிங்கின் நினைவு தினக்கூட்டம் செம்மையாக நடந்து முடிந்தது .

தொழிலாளர்களுக்கு துரோகம் செய்த எஐடியுசியும், ஒட்டுவேட்டையாடப்போகும் சி.பி.ஐ.யும்

நம்முள் பலருக்கு  காலையில் எழுந்தவுடன் தேனீர் அருந்தாவிட்டால் அந்த நாள் இனிமையான நாளாக  துவங்காதுஆனால்  அந்த  அந்த டீத்துகல்களுக்கு பின்னால்  லட்சக்கணக்கான தோட்டத்தொழிலாளர்களின் கடுமையான  உழைப்பும்,அத்தொழிலாளிகளை 
ஈவிரக்கமின்றி  சுரண்டி பெரும் லாபம் ஈட்டும் எஸ்டேட் முதலாளிகளின் கோரமுகமும், இடது சாரிகள் என்று கூறிக்கொண்டு ஒரு கையில் செம்பதாகையகை ஏந்திக்கொண்டு மற்றொரு கையில் அந்த எஸ்ட்டே முதலாளிகளோடு கைகோர்த்து கொண்டு, உழைப்பை தவிர எதுவும் அறியாத அந்த தோட்டத் தொழிலாளர்களுக்கு   துரோகம் இளைத்த எஐடியுஸியும் இருப்பது நம் கண் முன்னாள்    நிழலாடுகிறது.

அந்த மலைவாழ் தோட்டத் தொழிலாளர்கள் வாங்கும் ஒரு நாள் சம்பளம் 150  ரூபாய்க்கு கீழ் தான்.அந்த சம்பளமும் கூட அந்த தொழிலார்களின் நீண்ட நாள் போராட்டத்தினால் கிடைத்ததுதான்.அதுவும் இன்று விலைவாசி உச்சத்தில் ஏறி நிற்கும் நிலையில் அந்த சம்பளத்தை வைத்து வாழ்க்கை நடத்துவதென்பது மிகவும் கடினம். ஒரு புறம் இயற்கைக்கெதிராக   தற்காப்பு போராட்டமும்  ,மறுபுறம்  அத்தோட்ட  முதலாளிகளின்   சுரண்டலுக்கு எதிரான போராட்டமுமாக வாழும்   சூழலில் தொழிலாளர்களின்   நலனை காக்க வேண்டிய செங்கொடி தாங்கிய தொழிற்சங்கமும் தங்களுக்கு துரோகம் இழைக்கும் என்று அத்தொழிலாளர்கள் கனவிலும் கூட நினைத்திருக்க மாட்டார்கள். போராடி பெற்ற கூலியுயர்வை எஐடியுசி நிர்வாகிகள் சிலரின் சுயநலத்திற்காக அத்தோட்ட முதலாளிகளிடம் அடைமானம் வைத்தது, ஏற்கனவே வாங்கிய கூலியில் இருந்து ஐம்பது ரூபாயை குறைத்து சம்பள வெட்டு ஒப்பந்தில் கையெழுத்திட்டது.

இது போன்ற துரோகங்கள்  எஐடியுசிக்கு புதியது ஒன்றும் அல்லபாலுக்கும் காவலன் பூனைக்கும் தோழன் என்பது போல நாடுமுழுவதும் தொழிலார்களின் தோழனாக காட்டிக்கொண்டு முதலாளிகளோடு சேர்ந்துகொள்வது என்பது  அதன் நடைமுறையில் வழக்கமாக உள்ள ஓன்று தான். இந்த தொழிலாளர் துரோக ஒப்பந்தத்தால் பல தோட்டத்தொழிலார்கள் அச்சங்கத்திலிருந்து வெளியேறினார்கள்.  இப்போது அதே தோட்டத் தொழிலாளர்களிடம் குன்னூர் தொகுதியில்  ஓட்டுகேட்டு தொழிலாளர்களுக்கு   தாங்கள் செய்த பச்சை துரோகத்தின்   சாயல் சிறிதும் இன்றி சிபிஐ கட்சி  வளம்   வந்துகொண்டுள்ளது. அக்கட்சிக்கு எஸ்டேட் முதலாளிகள் வேண்டுமானால் தேர்தலுக்கு பண உதவி செய்ய முன்வரக்கூடும். வெற்றி பெற்று அந்த எஸ்டேட் முதாளிகளின் பிரச்சனைகளை சட்டமன்றத்தில் வைக்க கூடும்.தாங்களும் முதலாளித்துவ ஆதரவு பெற்ற தொழிலாளர் விரோதிகள் தான் என்பதை வெளிப்படையாக   சொல்லிக்கொள்ளலாம் .ஆனால் அத்தொழிலாளர்களிடம் தாங்கள் இழந்த நற்பெயரை அக்கட்சி எந்த காலத்திலும் திரும்ப பெற முடியாது.

திங்கள், 28 மார்ச், 2011

எங்கே காமராஜர் - தங்கபாலுவின் மகா மோசடி அரசியல்


தங்கபாலுவை பார்க்கும் போதெல்லாம் 'குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் திருட்டு உலகமடா' என்ற மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் பாடல் தான் நினைவிற்கு வரும்.   கடந்த ஆட்சியில் கருணாநிதிக்கு சாதகமாக நடந்ததன் மூலம் பெரும் பலனடைந்தார் தங்கபாலு.   கடந்த நாடாளமன்ற தேர்தலில் சேலம் தொகுதியில் நின்று எப்படியாவது எம்பியாகி மந்திரியாக வேண்டும் என்ற கனவுடன் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.சொந்த கட்சியிலே கடுமையான எதிர்ப்பை சந்தித்து வரும் தங்கபாலு எப்படியாவது இந்த சட்ட மன்ற தேர்தலில் வெற்றி பெற்று எந்த கட்சியும் பெரும்பான்மை பெறாத பட்சத்தில் மந்திரியாகி பெரும் பொருள் சேர்க்கலாம் என்ற கனவுடனே தான் போட்டியிடப்போவாதாக அறிவித்தால் சொந்த கட்சியிலேயே கடும் எதிர்ப்பை சந்திக்க வேண்டியிருக்கும் என்று எண்ணி தனது மனைவியை வேட்பாளராக்கி அந்த வேட்பு மனுவை தவறாக தாக்கல் செய்து, கொள்ளை புறம்  வழியாக இவர்  இப்போது மயிலாப்பூர் சட்டமன்றத்தில் போட்டியிடுகிறார். சொந்த கட்சியில் செல்வாக்கில்லாமல் குறுக்கு வழியில் முன்னேற துடிக்கிறார் இந்த மகா மோசடி அரசியல் வாதி. இதன் மூலம் கருணாநிதியின் பல கேடுகெட்ட சாதனைகளை முறியடித்துள்ளார். காமராஜர் போன்ற பதவி,புகழ், பணம் ஆசை இல்லாத மக்கள் தலைவர்கள் இருந்த இந்த காங்கிரசில் தான் இப்படி ஒரு கேவலமான ஜந்துவும் இருக்கிறது என்பதை எண்ணி பார்க்கும் போது தமிழகம் அரசியல் அநாகரிகத்தின் உச்சியில் இருப்பதாகவே எண்ணத்தோன்றுகிறது

வியாழன், 24 மார்ச், 2011

மார்ச் 23: பகத்சிங் நினைவு தினத்தில் முதலாளித்துவத்தை முடிவுக்குக் கொண்டுவர உறுதியேற்போம்

தியாகி பகத்சிங்கின் 80வது நினைவு தினம் நாடெங்கும் மார்ச் 23 அன்று அனுஷ்டிக்கப்பட உள்ளது. அவரது நினைவு நாளில் அவரது வீரமும் தியாகமுமே பெரும்பாலும் நினைவுகூரப் படுகின்றன. மரணத்தைக் கூடத் துச்சமெனக் கருதும் மகத்தான வீரமும், சமூகத்தின் நலனுக்கான முழுமையான அர்ப்பணிப்பை அடிப்படையாகக் கொண்ட தியாக உணர்வும் அதாகவே எவரிடமும் வந்து விடுவதில்லை. மாறாக மகத்தான உண்மைகள் அவர்களை வழிநடத்தும் போதே அவை உருவாகின்றன. பகத்சிங் வி­யத்திலும் அத்தகைய மகத்தானதொரு உண்மையுணர்வே அவரை வழி நடத்தியது.
ஆம். விடுதலைப் போரில் ஈடுபட்ட அனைவரும் வெள்ளையரிடம் நாம் அடிமைப்பட்டுக் கிடந்த அந்த வி­யத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு செயல்பட்ட வேளையில் அதையும் தாண்டி வேறொரு முரண்பாட்டைப் பார்க்க வல்லவராக அவர் இருந்தார். அப்போது விடுதலைப் போரைத் தலைமையேற்று நடத்திக் கொண்டிருந்த காங்கிரஸ் அமைப்பின் மூலம் நமது நாட்டின் விடுதலை சாதிக்கப் பட்டால் அது முழுமையான விடுதலையாக இந்தியாவின் மிகப் பெரும்பான்மை மக்களைப் பொறுத்தவரையில் இராது என்பதை அவர் பார்த்தார். அன்னியச் சுரண்டல் இருந்த இடத்தில் உள்நாட்டுச் சுரண்டல் கோலோச்சி கோடானகோடி உழைக்கும் மக்களை வாட்டிவதைக்கும் என்பதை அவர் கண்டு கொண்டார்.
எத்தனையோ மாற்றங்கள் அவர் மறைந்த பின்னர் இந்த 80 ஆண்டுக் காலத்தில் நிகழ்ந்துள்ளன. சமூகத்தில் எந்த மாற்றமுமே திசை வழியின்றித் தன்னிச்சையாக நிகழ்வதில்லை. சமூகத்திற்குத் தேவையான பொருளுற்பத்தி நடைபெறும் தன்மை மற்றும் அதன் போக்கினை அடிப்படையாகக் கொண்டவையாகவே சமூக மாற்றங்கள் நிகழ்கின்றன. 80 ஆண்டுகளுக்கு முன்பிருந்ததைப் போலன்றி எந்திரத் தொழிலுற்பத்தி முறை அனைத்துத் துறைகளையும் தழுவிய ஒன்றாகப் பன்மடங்கு வளர்ந்துள்ளது. பொருள் மற்றும் கருத்து சார்ந்த உற்பத்திகள் அனைத்தும் சந்தைச் சரக்குகளாக ஆகியுள்ளன.
ஆனால் இன்றைய நிலையிலும் நமது சமூகத்தை அரைக்காலனி, அரை நிலப்பிரபுத்துவம் என்று கருதும் ‘சமூகமாற்ற’ சக்திகள் உள்ளன. ஆனால் சமூக அமைப்பு  எது வளரும் தன்மை கொண்டதோ அதைக் கொண்டே கணிக்கப்பட வேண்டும் என்ற விதியின்படி 80 ஆண்டுகளுக்கு முன்பே அன்று சமூகத்தில் வளரும் தன்மை கொண்டதாக இருந்த முதலாளித்துவத்தை இனம் கண்டு, அந்த உற்பத்தி முறையே மக்களின் உண்மையான விடுதலைக்குக் குறுக்கே நிற்கப் போகிறது என்று பகத்சிங் பார்த்தார். சமூகத்தை விஞ்ஞான பூர்வமாகப் பகுப்பாய்வு செய்த மார்க்சியத்தை முழுமையாகக் கற்றதனால் அந்தப் பார்வையினை அவர் கொண்டிருந்தார் என்று கூற முடியாது. ஏனெனில் மார்க்சிய இலக்கியங்கள் ஒன்றிரண்டினைத் தவிர மற்றவை எளிதில் கிடைக்காத காலம் அது. அப்படியிருந்தும் மார்க்சிஸத்தின் அடிப்படையினை அவரால் முழுமையாகக் கிரகிக்க முடிந்தது.
அதன் காரணம் அவரது இலக்கு தெளிவானதாக இருந்தது தான். அதனை விரைவில் அடைய உதவும் கருத்துக்களையும் கண்ணோட்டங்களையும் ஒரு முதல் தரப் புரட்சியாளனாக அவர் தேடியலைந்தார். அந்தத் தேடுதலின் விளைவாக மார்க்சிஸத்தை அவரால் அறிய முடிந்தது. அதன் சாராம்சத்தை அது வழங்கிய உலகப் பார்வையை அவரால் கைக்கொள்ள முடிந்தது. அதைக் கொண்டு சமூக நிகழ்வுகளைத் தெளிவுடன் பார்க்க முடிந்ததால் காந்தியடிகளின் தலைமையிலான தேச விடுதலைப் போராட்டம் முதலாளித்துவ ஆட்சி முறையைக் கொண்டு வருவதிலேயே சென்று முடியும் என்பதை அவர் பார்த்தார்.
எனவே அன்னிய அடிமைத் தளையையும், முதலாளித்துவச் சுரண்டலையும் எதிர்த்துப் போராட வல்லதொரு அமைப்பைத் தேவை அடிப்படையில் உருவாக்க அவர் நினைத்தார். அதுவே அவரை ஒரு முதல்தரக் கம்யூனிஸ்ட் ஆகும் போராட்டத்தில் ஈடுபட வைத்தது. ஆனால் அவர் எடுத்த பணியினை முனைப்புடன் தொடங்குவதற்கு முன்பே அவரும் அவரது தோழர்களும் தூக்கிலிடப்பட்டு விட்டனர். அவர்களது தலைவராக இருந்த சந்திர சேகர் ஆசாத் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டார்.
நாம் பகத்சிங்கிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய முக்கியமான பாடம் இன்றுள்ள சமூக முரண்பாட்டை அவரைப் போன்ற தெளிவுடன் கற்று நமது இலக்கைத் தீர்மானித்து அதனை அடையும் பாதையில் உறுதியுடன் நடை போட வேண்டுமென்பதே. அன்றே கோளாறானது என்றும் பல அடிப்படைப் பிரச்னைகளை உருவாக்க வல்லது என்றும் பகத்சிங்கால் அறியப்பட்ட முதலாளித்துவம் இன்று கோளாறுகளின் ஒட்டுமொத்த உறைவிடமாக ஆகியுள்ளது. முதலாளித்துவ அமைப்பைக் காக்கும் இன்றைய நமது நாட்டின் அரசு இயந்திரம் பெயரளவிற்குக் கூட நடுநிலையானது என்று பாவனை இன்று காட்ட முடியவில்லை. ராடியா ஒலி நாடாக்கள் தனியார் முதலாளித்துவ நிறுவனங்களின் இசைக்கேற்ற விதத்தில் நாட்டியமாடுவதே அது என்பதைப் பட்டவர்த்தனப் படுத்தியுள்ளன.
பொது வாழ்க்கையில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய நெறிகள் அனைத்தும் காற்றில் பறக்கவிடப்பட்டு பொதுச் சொத்துக்கள் அரசியல் வாதிகளால் சூறையாடப் படுகின்றன. அத்தகைய அரசியல் வாதிகளை மூடிமறைத்துக் காப்பதற்கு சமூக நீதிக் கண்ணோட்டங்களும் இன உணர்வுப் பிதற்றல்களும் மூடு திரைகளாகின்றன. அரசியல் வாதிகளும், அதிகார வர்க்கமும் மட்டுமின்றி வாக்கிற்குப் பணம் கொடுப்பது போன்ற நடைமுறைகளின் மூலம் ஏழை எளியவர்களும் ஊழல் அமைப்பின் பங்கும் பகுதியுமாக்கப்பட்டு யாரும் எதையும் தட்டிக் கேட்க முடியாது என்ற நிலை தோற்றுவிக்கப் பட்டுள்ளது. ஓரிரு நாடுகளில் மட்டும் என்ற நிலை கடந்து அமைப்பு என்ற ரீதியில் உலகம் முழுவதுமே முதலாளித்துவம் மீள முடியாத நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றது. இப்போது தோன்றியுள்ள நிலை சில அல்லது பல சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு அவற்றின் மூலம் அமைப்பைச் சரி செய்து விடலாம் என்ற எண்ணத்தைப் பகற்கனவாக்கியுள்ளது.
இந்த நிலையில் பகத்சிங்கும் அவரது தோழர்களும் பயணிக்க விரும்பிய பாதையில் பயணித்து ஆளும் முதலாளி வர்க்க ஆட்சியை அகற்றப் பாடுபடுவதே பகத்சிங்கின் நினைவு நாளில் நாம் அவர்களுக்குச் செலுத்த வேண்டிய உரிய முறையிலான அஞ்சலியாகும். அதனைச் செய்ய முன்வருமாறு அனைத்து உழைக்கும் மக்களையும் குறிப்பாக மாணவர் இளைஞரையும் அறைகூவி அழைக்கிறோம்.

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் முடக்கும் - நீதித்துறை மக்கள் பக்கம் திரும்புமா

தேர்தல் ஆணையம் கடந்த தேர்தல்களின் போது வெறும் பொம்மை போல தான் இருந்து வந்துள்ளது .இந்த தேர்தலில் தான் கொஞ்சம் உருப்படியாக செயல்பட்டுகொண்டிருப்பது போல தெரிகிறது. அதற்கும் மக்களின் உரிமைகளை காக்கும் நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. வாக்காளர்களுக்கு பணம் , சரக்கு  மற்றும் பொருள்கள் கொடுப்பதை தேர்தல் ஆணையம் தடுக்கிறது,கருணாநிதிக்கு அடிவருடியாக செயல்பட்ட மக்கள் விரோத அதிகாரிகளை ஆணையம் துக்கி அடித்ததை பொறுக்க முடியாமல் தோல்வி பயத்தில் அறிக்கையாக வெளியிட்டார் நமது அரசியல் வியாபாரி கருணாநிதி . அதை நீதி மன்றம் அதிமுக்கிய பிரச்சனையாக எடுத்துள்ளது. தினம்தினம் எவ்வளவோ மக்களை பாதிப்பிற்கு உள்ளாக்கும் செய்திகள் வெளிவந்துகொண்டுள்ளன அரசியல் வாதிகளின் மணல் கொள்ளை , போக்குவரத்து காவலாளிகள் லஞ்சம் வாங்குவது, அதிகாரிகளின் அட்டகாசம் ,அரசு மருத்துவர்களின் அலட்சியம் ,ஏழை மக்களை அரசு கிள்ளு கீரையாக விரட்டுவது, ரவுடிகளின் அட்டகாசம் , காவல் துரையின் காட்டு மிராண்டிதனாமான தாக்குதல்கள் , வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாட , கல்லூரிகளில் கட்டணம் அதிகமாக வசூல் செய்வது , தொழிலாளர்களுக்கு  சட்டத்தை மதிக்காமல் முதலாளிகள் செய்யும் கொடுமைகள் என்று பல அடித்தட்டு மக்களை பாதிக்கும் செயல்களை இந்த நீதிமன்றங்கள் சூ -மோட்டாவாக எடுத்தது உண்டா !

இவ்வாறு நீதிமன்றங்கள் அரசியலில் கோடிகளை குவித்து, உல்லாச வாழ்க்கை வாழ்பவர்களுக்கு சாதகமாக இருப்பது தொடருமேயானால் மக்களுக்கு நீதித்துறையின் மீது உள்ள நம்பிக்கை அற்றுப்போய்விடும் என்பதை நீதிபதிகள் உணரவேண்டும்.

பகத்சிங்கை ஓட்டு அரசியலுக்கு இழுக்கும் DYFI-ம் தன் அரசியலுக்கு இழுக்கும் மகஇக-வும்

நேற்று அதிகாலை மணி 3.20. நம்மைக் கேட்காமலேயே நம் உடலில் ஒரு பாகமாக வந்து ஒட்டிக் கொண்டுவிட்ட செல்போனில் முன்நாளிரவு சொல்லி வைத்த அலாரம் சிணுங்கத் துவங்கும் முன்பே அதை சமாதானப் படுத்தி எழுந்தாகி விட்டது. விழித்துக் கொண்ட மனது உடலின் மற்ற அவயவங்களை எழுப்பி உட்கார வைப்பதற்காக வழக்கமாக எடுத்துக்கொள்ளும் 10 நிமிடங்களும் இன்று எடுத்துக் கொள்ளப்படவில்லை. 

இன்று மார்ச் 23. தியாகி பகத்சிங் தூக்கிலிடப்பட்ட நாள். 80 ஆண்டுகளுக்கு முன் இதே நாளின் ஓர் அதிகாலைப் பொழுதில்தானே பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகிய மூன்று உன்னதமான உயிர்கள் ஆங்கில ஏகாதிபத்தியத்தால் பலி கொள்ளப்பட்டன என்ற‌ நினைவு வந்து மனதைக் கனமாக்கியது. பகத்சிங் நினைவு தினச் சுவரொட்டிகள் ஒட்டுவதற்கான ஏற்பாடுகளைச் செய்துவிட்டு இரவு 12 மணிக்கெல்லாம் படுக்கைக்குச் சென்றிருந்தாலும் தூங்கியதுபோலும் இல்லை; தூங்காமல் விழித்துக் கொண்டிருந்தது போலும் இல்லை. பகத்சிங் நினைவு ஸ்தூபி வேலையாகச் சமயநல்லூர் சென்ற SDM மாணவத் தோழர் வினோத்தை எழுப்புவோம் என்று அவருக்குப் போன் செய்தால், அவர் மதுரைக்குள் வந்துவிட்டதாகச் சொன்னார். பின்னர்தான் தெரிந்தது அவர் தூங்கவே இல்லை என்று. சிவகாசி ஆனைக்கூட்டம் பகுதியிலும், ஆலங்குளம் பகுதியிலும், சமநல்லூரிலும் தோழர்கள் இரவு முழுவதும் பகத்சிங் நினைவு ஸ்தூபி எழுப்பிவிட்டு, அதிகாலையில் சுவரொட்டிகள் ஒட்டக் கிளம்பியிருந்தனர். தேனியிலும் சுவரொட்டிகள் ஒட்டும் வேலைகள் துவங்கியிருந்தன. சென்னை, பொள்ளாச்சி, நாகர்கோவில் பகுதித் தோழர்களுக்குச் சுவரொட்டிகள் அனுப்பாமல் விட்டதால் இந்தப் பணியில் அவர்களது பங்களிப்பை மறுத்த குற்றத்திற்காக வருந்தாமல் இருக்க முடியவில்லை.

தோழர் கே.கே.சாமியை மற்றொரு பகுதிக்கு அனுப்பிவிட்டு தோழர் வினோத்தும் நானும் சுவரொட்டிகள் ஒட்டக் கிளம்பிய நேரத்தில் மதுரை மாநகரம் தன் படுக்கையில் இருந்து எழுந்து சோம்பல் முறிக்கத் துவங்கியிருந்தது. வழக்கமான நாட்களிலேயே பகத்சிங் நினைவு தினத்தை மறந்துவிடும் நம் அரசியல் கட்சிகள் இந்தத் தேர்தல் நாட்களில் மறந்து போயிருந்ததில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. எந்த அமைப்புகளின் சுவரொட்டிகளும் கண்ணில் படவில்லை. ஆரப்பாளையம் பகுதிக்குச் செல்லும்போது பகத்சிங்கின் படம் போட்ட DYFI சுவரொட்டி ஒன்றைக் கண்டு நாம் அகமகிழ்ந்து போனோம். ஆனால் அவர்களும் அச்சுவரொட்டி மூலம் பகத்சிங்கை அவர்களது ஓட்டு அரசியலுக்கு இழுத்து வந்து கேவலப்படுத்தியிருந்ததைப் பார்த்தபோது வேதனைதான் மிஞ்சியது. 

அதன் வாசகங்கள் இவைதான்: மார்ச் 23 பகத்சிங் நினைவுதினம்/ 2011-தமிழகத் தேர்தல்/எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல/போரடிப் பெற்ற/வாக்குரிமையை/விற்கமாட்டோம்.

சுனாமியே சுற்றியடித்தாலும் தூண்டில்காரனுக்கு மிதப்பில்தான் கண்ணு என்பதை நிரூபித்துவிட்டனர். வாக்குரிமையை விலைக்கு விற்பதை எதிர்க்கக் கூடாது என்பதல்ல. இன்றய தமிழகத் தேர்தல் நிலவரப்படி ஒரு லட்சம் கோடி ஸ்பெக்ட்ரம் ஊழல் பணத்துடன் களம் இறங்கியிருக்கும் திமுக-வை எதிர்கொள்ள வேண்டுமானால் ஒன்று அந்த அளவிற்குப் பணம் இருக்க வேண்டும்; அல்லது கொள்கை இருக்க வேண்டும். 

போன தேர்தல்வரை ஜெயலலிதாவைத் தோற்கடித்தே தீருவோம் என்று கருணாநிதியுடன் "கை" கோர்த்துவிட்டு, இந்தத் தேர்தலில் கருணாநிதியைத் தோற்கடித்தே தீருவோம் என்று ஜெயலலிதாவுடன் "இலை" போட்டுக் கொண்டிருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜெயலலிதாவுடன் தொகுதிப் பங்கீட்டில் பிரச்னை என்றவுடன் வெட்கமே இல்லாமல் வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு நடிகர் விஜயகாந்த் கட்சி அலுவலகத்திற்கு ஓடிவரும்போதே நமக்குத் தெரியும் இவர்களிடம் கொள்கை எதுவும் இல்லை என்று. திமுகவுக்குக் கிடைத்தது போல் வாய்ப்பு இவர்களுக்கு இதுவரை கிடைக்காததால் இவர்கள் கையில் அந்த அளவிற்குப் பணமும் இல்லை.

ஆனால் அதற்காக பகத்சிங் தூக்கிலிடப்பட்ட நினைவுநாளில் அவரது அரசியலை மக்களிடம் கொண்டு செல்லாமல் அந்த மாபெரும் தியாகியை தங்களது கேவலமான தேர்தல் அரசியலுக்கு ஒரு கருவியாகப் பயன்படுத்தும் DYFI-ன் செயல் எவ்வளவு குறைத்துக் கூறினாலும் மன்னிக்க முடியாத குற்றமே.

அப்படியே சுவரொட்டிகள் ஒட்டிக் கொண்டே பெரியார் பேருந்து நிலையம் பக்கம் போனபோது அங்கே மகஇக-வின் பகத்சிங் நினைவுதினச் சுவரொட்டி ஒன்று கண்ணில் பட்டது. இவர்கள்தான் "தேர்தல் பாதை திருடர் பாதை" என்பவர்களாயிற்றே, இவர்களாவது பகத்சிங்கின் அரசியலை முன்னெடுத்துச் சென்றிருப்பார்களா என்று பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சியது.  

மகஇக-வின் சுவரொட்டி இதுதான்: மார்ச் 23/பகத்சிங் தூக்கிலிடப்பட்ட நாள்/அன்று:கிழக்கிந்தியக் கம்பெனி/ இன்று:பன்னாட்டுக் கம்பெனிகள்/அன்று:எட்டப்பனும் மீர்ஜாபரும்/இன்று:காங்கிரசும் பாஜகவும் அதிமுகவும் திமுகவும்/அன்று: பகத்சிங்/இன்று: நாம்தான் இருக்கிறோம்.

மேலோட்டமாகப் பார்த்தால் பகத்சிங் விட்டுச் சென்ற சுதந்திரப் போராட்டத்தை இன்று இவர்கள் தொடர்வதுபோல் தெரிகிறது. ஆனால் பகத்சிங்கின் அரசியல் இது அல்ல. பகத்சிங் அன்றே சொன்னார்: காங்கிரஸ் தலைமையில் கிடைக்கப் போகும் சுதந்திரம் இந்திய முதலாளிகளின் கைகளுக்கே அரசியல் அதிகாரத்தைக் கொண்டு சேர்க்கும்; இந்திய முதலாளிகளையும் எதிர்த்து சோசலிசக் குடியரசு நிறுவப்படும் வரையிலும் இந்தப் போர் தொடரவேண்டும் என்று. ஆனால் மகஇக-வினரோ பன்னாட்டு நிறுவனங்களே நம் எதிரிகள் என்கிறார்கள். 

இந்திய முதலாளிகளின் மூலதனத்தை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பாதுகாப்பதற்காக தன் அங்கமெல்லாம் ஆயுதம் தரித்து நிற்கும் இந்திய அரசு நிதர்சனமாக நம் கண்ணுக்கு முன்னால் இருக்கையில் பன்னாட்டு நிறுவனங்களே நம் எதிரிகள் என்று சொல்லும் மகஇக-வினரை என்னவென்று சொல்வது. அரசு என்ற அடக்குமுறைக் கருவியைப் பற்றி மார்க்ஸ் முதல் லெனின் வரை படித்துப் படித்துச் சொல்லிவிட்டுப் போனாலும் இவர்கள் அதையெல்லாம் படித்தார்களா இல்லையா என்றே தெரியவில்லை.

ஆனால் ஒன்றுமட்டும் நிச்சயமாகத் தெரிகிறது. இவர்கள், பகத்சிங் அன்று எதிர்த்துப் போராடியது கிழக்கிந்தியக் கம்பெனியையே என்றும்; அதனால் இன்று நாம் எதிர்க்க வேண்டியது பன்னாட்டுக் கம்பெனிகளையே என்றும் வேண்டுமென்றே தங்களது அரசியலுக்காக வரலாற்றையே திரித்துக் கூறக் கூடத் தயங்காதவர்கள். ஏனெனில் பகத்சிங் அன்று எதிர்த்துப் போராடியது ஆங்கில ஏகாதிபத்திய "அரசை"த்தானே தவிர, கிழக்கிந்தியக் கம்பெனியை அல்ல. 

1857ம் ஆண்டு சிப்பாய்க் கலகம் என்று ஆங்கிலேயர்களால் அழைக்கப்படும் முதல் சுதந்திரப் போர் கொடூரமாக அடக்கி ஒடுக்கப்பட்ட பின்னர் கிழக்கிந்தியக் கம்பெனியிடமிருந்து ஆட்சியதிகாரம் பறிக்கப் பட்டு ஆங்கில ஏகாதிபத்திய "அரசின்" நேரடி ஆட்சியின் கீழ் இந்தியா கொண்டுவரப்பட்டு விட்டது என்பது வரலாறு. ஆனால் மார்க்சுக்கும் லெனினுக்கும் உண்மையுள்ளவர்களாக இருந்து அடக்குமுறைக் கருவியான அரசை எதிர்க்காமல், நிறுவனங்களை எதிரியாகக் காட்டும் பரிதாபகரமான நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்ட மகஇக-வினர், தங்களது அரசியல் தேவைக்கேற்ப வரலாற்றையே திருத்தி பகத்சிங் எதிர்த்ததும் அரசை அல்ல; கிழக்கிந்தியக் கம்பெனியைத்தான் என்று கூறி தங்கள் அரசியலின் தரத்திற்கு பகத்சிங்கைத் தாழ்த்திவிட்டனர்.

பகத்சிங் நினைவுநாளில் பகத்சிங்கின் அரசியலை மக்களிடம் கொண்டுசெல்ல ஆளே இல்லாமல் போய்விட்டனரே என்ற மன வேதனையுடன் நாம் ஒட்டிக் கொண்டிருந்த சுவரொட்டியின் வாசகங்களைப் படித்தபோது நாமாவது இருக்கிறோமே என்று ஆறுதலாக இருந்தது. நமது சுவரொட்டியில் இருந்த "பகத்சிங்கின்" வாசகங்கள் இவைதான்: 
"இந்த நாட்டில் அடிப்படையான மாற்றம் தேவைப்படுகிறது. இதை உணர்ந்தவர்களின் கடமை சமுதாயத்தை சோசலிசத்தின் அடிப்படையில் புதிதாக‌ மாற்றியமைப்பதே ஆகும்".

மதுரை மாநகரின் பொதுக் கழிப்பிடங்கள் எல்லாம் மாநகராட்சி வரிவசூல் மையங்களாகிப் போனதால் ஆத்திர அவசரத்திற்கு சாலையோரச் சுவர்களை நாறடித்திருந்த மதுரை மக்களின் அவலநிலையை நினைத்து நொந்து கொண்டே சுவர்களை சுத்தம் செய்து நாம் அந்த சுவரொட்டிகளை ஒட்டிவிட்டுப் பார்த்தபோது, பகத்சிங்கின் அரசியலைத் தாங்கியிருந்த அந்தச் சுவரொட்டியை இப்போது தாங்கியிருக்கும் அந்தச் சுவர்களும் கூட நமக்கு அழகாகத்தான் தெரிந்தன.

புதன், 23 மார்ச், 2011

தேர்தல் அறிக்கைகள்! , இலவச திட்டங்கள்!, மீளுமா தமிழகம்!

தமிழக அரசியல் கட்சிகள் அனைத்துமே இலவச திட்டங்களை அறிவித்துள்ளன. முன்பு பெரிய அணைக் கட்டை கொண்டுவருவோம் ,மருத்துவமனை கொண்டு வருவோம் என்றாவது இந்த கட்சிகள் அறிவிப்பதுண்டு. இப்போது அனைத்துமே மருத்துவ காப்பீடு , இலவச திட்டங்கள் என்று இவர்கள்  அறிவிப்பதெல்லாம்   தனிமனிதனை  ,குடும்பத்தை சுற்றி சமூக கண்ணோட்டத்திலிருந்து  சுருங்கி தான் வாழ்ந்தால் போதும் , இந்த சமுதாயம் எக்கேடு கெட்டுப்போனால் போகட்டும் என்பது போன்ற சுயநல வட்டத்திற்குள்  நம்மை முடக்க இந்த அரசியல் கட்சிகள்  சுத்திவருவது கண்டும் நாம் விழித்தேளாவிட்டால் இந்த சமூகம் அழிந்து போவதை நம்மால் தடுக்க முடியாது, என்பதை நினைவில் நிறுத்துவோம். சமூகத்தில் உழைக்கும் மக்கள் தங்கள் சுய மரியாதையை   இழந்துவிடாமல் காப்பாற்ற  கொள்ள  வேண்டும்  எனெனில்  அது தான் நம்மிடம் உள்ள மதிப்பு  மிக்க  சொத்து ஆகும்.  

செவ்வாய், 22 மார்ச், 2011

மார்ச் 23 பகத் சிங் ,ராஜகுரு, சுகதேவ் நினைவு தினத்தை அனுசரிப்போம்

தியாகிகள் பகத் சிங், ராஜகுரு , சுகதேவ் போன்ற சமரசமற்ற சுதந்திர போராட்ட வீரர்கள் அடிமை இந்தியாவை  பிரிட்டிஷ் அரசிடம் இருந்து விடுவிப்பதோடு , நில்லாமல் அது இந்திய முதலாளிகளிடம் அரசின் அதிகாரம் சென்று சேராமல் தொழிலாளிகளும் ,விவசாயிகளுமான பாட்டாளி வர்க்கத்திடம் கைகளில் சுதந்திரம் சென்று சேர வேண்டும் என்று பாடுபட்டனர்,வெள்ளை அராசாங்கத்தின் கடுமையான அடக்குமுறையால் அந்த இளம் சிங்கங்களின் போராட்டம் ஒடுக்கப் பட்டதோடு அந்த இளம் குருத்துகள்  தாய்  நாட்டின்  விடுதலையை முழங்கியவாறு  துக்கில் ஏற்றப்

பட்டனர்  .அவர்கள் தாங்கள் இவ்வாறு மாரணம் அடைவதன் மூலம் இந்தியாவில் இளைஞர்கள் எழுச்சி பெற்று  பாட்டளி வர்க்கதை  அணிதிரட்டுவார்கள், அதன் மூலம் உழைக்கும் வர்க்கம் ஆட்சியை  பிடிக்கும்   என்று நம்பினார்.

 அவர்களின் உன்னதமான  லட்சியத்திற்கு   மாறாக  இந்திய முதலாளிகளின்  கைகளில் இந்திய சுதந்திரம் அடைமானம்    வைக்கப்பட்டது. அதற்கான பலனை  நாம்  அனுபவித்து  வருகிறோம். ஒப்பற்ற அந்த தியாகிகளை நினைவு கூறுவோம் புரட்சிவீரர்களின் உயர்ந்த   லட்சியத்தை சோஷலிச சமுதாயத்தை நிர்மாணிக்க   அந்த தியாகிகளின்   பாதசுவடுகளில்  நடை பயில்வோம் ,  பாட்டாளி வர்க்க அரசை நிர்மாணிக்க இயக்கம் அந்த மாவீர்களின் மறைந்த   மார்ச் 23    நினைவு நாளில்   அறை கூவி அழைக்கிறது.

புரட்சி என்பது இரத்த வெறிகொண்ட    மோதலாகத்தான் 
இருக்க வேண்டுமென்ற கட்டாயமில்லை. தனிமனிதர்கள்  வஞ்சம் தீர்த்துக் கொள்ளவதற்கும் அதில் இடமில்லை. அது வெடி குண்டுகள்துப்பாக்கிகள் மீதான  வழிபாடல்ல.  'புரட்சி' என்பதன்  மூலம் ,வெளிப்படையான  அநீதியை  அடிப்படையாகக் கொண்ட   இந்த சமூக அமைப்பு மாற்றப் படவேண்டும்  என்று நாங்கள் கூறுகிறோம் .

விரல் விட்டு எண்ணி விடக்கூடிய  சில  ஒட்டுண்ணிகளால்      இந்திய உழைக்கும் மக்களும் அவர்தம்   இயற்கை வளங்களும் சுரண்டப்பட்டுக் கொண்டிருக்கும் வரை இந்தப் போர் தொடரும்; தொடர வேண்டும். அவ்வொட்டுண்ணிகள் கலப்பற்ற  பிரிட்டிஷ்  முதலாளிகளாக இருக்கலாம் அல்லது பிரிட்டிஷ் முதலாளிகள் மற்றும் இந்திய   முதலாளிகளின்  கலப்பாக இருக்கலாம் அல்லது கலப்பற்ற  இந்திய முதலாளிகளாகக் கூட இருக்கலாம். அவர்கள் தங்களது நயவஞ்சகமான சுரண்டலை பிரிட்டிஷ் மற்றும் இந்தியக் கலப்பு அரசு இயந்திரத்தைக் கொண்டோ கலப்பற்ற இந்திய அரசு இயந்திரத்தைக் கொண்டோ நடத்தி வரலாம்.. இந்தப்போர் தொடர்ந்தே தீரும்.. அது ஒரு புதிய உத்வேகத்துடனும் பின்வாங்காத உறுதியுடனும் சோஷலிசக் குடியரசு   நிறுவப்படும்   வரையிலும் ஓயாது   தொடுக்கப்பட்டுக் கொண்டே  இருக்கும்  ... இந்தப்போர் எங்களோடு தொடங்கவுமில்லை; எங்கள் வாழ்நாளோடு முடியப் போவதுமில்லை.  வரலாற்று நிகழ்வுப் போக்குகளினதும் இன்று நிலவும் சுழ்நிளைகளினதும் தவிர்க்க முடியாத விளைவே இப்போர்".

                                                     - தியாகி பகத் சிங்,



 

முகப்பு

புதிய பதிவுகள்