வெள்ளி, 1 ஏப்ரல், 2011

தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படலாம் - சென்னை உயர் நீதிமன்றம்




திமுக பணப்பட்டுவாட செய்வதை தேர்தல் ஆணையம் பல இடங்களில் பறிமுதல் செய்தது, பணம் கடத்தபடுவது தெரிந்தால் சோதனை நடத்தியது. இதனால்  இந்த தேர்தலில் வெற்றி பெறுவது கடினம் என்றுணர்த்த தி.மு.க.பல வழக்குகளை தாக்கல் செய்தது . தேர்தல் ஆணைய அதிகாரிகளின் வாகன சோதனைக்கு தடை விதிக்க கோரி தில்லை நடராசன் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். திமுக அமைச்சர் கே.பி.பி.சாமியும், தேர்தல் அதிகாரிகள் தனது வீட்டில் சோதனை நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தேர்தல் ஆணையத்துக்கு எதிராக மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் தர்மாராவ், வேணுகோபால் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், நம்பத் தகுந்த ஆதாரங்கள் கிடைத்தால், அதை உறுதி செய்த பிறகே தேர்தல் ஆணையம் வாகன சோதனை செய்ய வேண்டும் என்று இடைக்கால உத்தரவிட்டிருந்தது.தமிழகத்தில் வாகன சோதனைக்கு தடை இல்லை என்று தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம், சட்டப்பேரவைத் தேர்தலை நியாயமாகவும் நேர்மையாகவும் நடத்த தேர்தல் ஆணையத்துக்கு முழு அதிகாரம் உள்ளது என்று தெரிவித்துள்ளது.

தேர்தலையொட்டி மாநிலம் தழுவிய அளவில் நடத்தப்படும் வாகன சோதனை தொடர்பான வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் கொண்ட பெஞ்ச், தேர்தல் ஆணையத்துக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவை இன்று நீக்கியது. 

பின்னர் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில், "தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை நியாயமாகவும் நேர்மையாகவும் நடத்துவதற்கு தலைமை தேர்தல் ஆணையத்துக்கு முழு அதிகாரம் உள்ளது. தேர்தல் முடியும் வரை பணம் பட்டுவாடா மற்றும் பொருள் வினியோகம் செய்வதை அனுமதிக்க முடியாது. நேர்மையான தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் செலவு கணக்கை கண்காணிக்கும் வழிமுறைகளை தேர்தல் ஆணையம் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

வாகன சோதனை நடத்துவதற்கு எந்தவித தடையும் இல்லை. அதே நேரத்தில் சோதனையின் போது பிடிபடும் பணம் மற்றும் பொருட்களுக்கு உரிய ஆவணங்களைக் காட்டினால், அவற்றை பறிமுதல் செய்யக்கூடாது. அவற்றை உரியவர்களிடம் தேர்தல் ஆணையம் திருப்பி கொடுக்க வேண்டும்.பறக்கும் படையினர் நடத்தும் சோதனைகளை வீடியோ கருவியில் பதிவு செய்ய வேண்டும். சோதனையின் போது பறக்கும் படையினர் கண்ணியத்துடனும் கரிசனத்துடனும் நடந்து கொள்ள வேண்டும். பறக்கும் படையினருக்கு தேர்தல் ஆணையம் தகுந்த பாதுகாப்பு கொடுக்க வேண்டும்.
பெருவாரியான குற்றங்களை தடுக்க அதிகப்படியான பாதுகாப்பு நடவடிக்கைகளை தேர்தல் முடிவு அறிவிக்கப்படும் வரை தேர்தல் ஆணையம் எடுக்க வேண்டும். தேர்தலுக்காக பணி இடமாற்றம் செய்யப்படும் அரசு அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகளின் நடவடிக்கைகளை அவர்களது பணி புத்தகத்தில் குறையாக காட்டக்கூடாது. இதை வைத்து அதிகாரிகளின் பதவி உயர்வின் போது கருத்தில் கொள்ளக் கூடாது," என்று நீதிபதிகள் தீர்ப்பில் கூறினர்.இந்த தீர்ப்பின் மூலம்  தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்பட இந்த உயர் நீதிமன்றம் வழிவகுத்துள்ளது , ஆனால் தேர்தல் ஆணையம் நேர்மையான தேர்தலை நடத்துமா , வெறும் கண்துடைப்பிற்காக சோதனை செய்யுமா என்பது இனி வரும் நாட்களில் தெரிய வரும்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்