வியாழன், 21 ஏப்ரல், 2011

தொழிலாளர் இயக்கம் மார்க்சியத் தத்துவத்தின் வழிகாட்டுதலின் மூலம் சமுதாய மாற்ற இயக்கமாக உருவானதும் அது எதிர்கொண்ட பிரச்னைகளும்

அன்றாடத் தேவைகளுக்காகப் போராடுவது என்றிருந்த தொழிலாளர் இயக்கம் மார்க்சியத் தத்துவத்தின் வழிகாட்டுதலின் மூலம் சமுதாய மாற்ற இயக்கமாக உருவானதும் அது எதிர்கொண்ட பிரச்னைகளும்

உணர்வு பெற்ற உழைக்கும் வர்க்கம் மே தினத்தை தனது கடந்த கால செயல்பாடுகளை சீர்தூக்கிப் பார்த்து அவற்றிலிருந்து படிப்பினைகள் எடுத்து எதிர்கால செயல்பாட்டிற்கான திட்டத்தினை வகுத்தெக்கவே அனுஷ்டிக்கிறது. எந்தத் திட்டத்திற்கும் ஒரு வழிகாட்டும் குறிக்கோள் அவசியம். அந்த அடிப்படையில் மே தினத்தின் குறிக்கோள் உழைக்கும் வர்க்கத்தின் கூலி அடிமைத் தளையினை உடைத்தெறிந்துவிட்டு அதன் விடுதலையைச் சாதிப்பதே.

முதலாளித்துவ நுகத்தடியிலிருந்தான தொழிலாளிவர்க்க விடுதலையைச் சாதிப்பதற்கு அதனைச் சாதிக்க வேண்டும் என்ற அதன் விருப்பம் மட்டுமே போதாது. ஏனெனில் முதலாளித்துவ ஆட்சி சுரண்டலின் மூலம் ஆதாயம் ஈட்டும் அவ்வர்க்கத்தின் விருப்பத்தின் அடிப்படையில் மட்டும் இயங்கிக் கொண்டிருக்கவில்லை. அது தன் வர்க்க ஆட்சியை தக்கவைப்பதற்காக
ஒரு அரசமைப்பை ஏற்படுத்தி அதன்மூலம் அதன் ஆட்சி தங்குதடையின்றி நடைபெற வழிவகுத்துச் செயல்படுகிறது. அவ்வாறு அமைப்பு ரீதியாக வேரூன்றி நிற்கும் முதலாளி வர்க்க ஆட்சியை அசைத்துப் புரட்டி அதனை வேரோடும் வேரடி மண்ணோடும் தூக்கியயறிவதற்கு உழைக்கும் வர்க்கத்திற்கும் அமைப்புகள் வேண்டும். அமைப்பு ரீதியான செயல்பாடின்றி உழைக்கும் வர்க்க விடுதலை குறித்த பேச்சுகள் யாவும் கற்பனாவாதப் பேச்சுகளாகவே இருக்கும்.

வர்க்க அமைப்புகள் வலிந்து கட்டப்படுபவையல்ல

உழைக்கும் வர்க்க அமைப்புகள் என்று நாம் கூறும் போது அந்த அமைப்புகள் செயற்கையாக உழைக்கும் வர்க்க உணர்வு பெற்றவர்களால் வலிந்து கட்டப்படுபவை என்ற எண்ணம் ஏற்பட்டுவிடக் கூடாது. உழைக்கும் வர்க்க அமைப்புகள் உருவாவதற்கான பின்னணியை முதலாளி வர்க்கமே உருவாக்கிக் கொடுக்கிறது.

முதலாளித்துவம் தொழிலாளரை ஒரு கூரையின் கீழ் வேலை செய்பவர்களாக ஆக்குகிறது. சுரண்டல் அவர்களை ஒன்று படுத்துகிறது. அவர்கள் ஒன்றுபட்டு எதுவும் செய்யாதவர்களாக இருந்தால் நிலவும் சுரண்டலும் அது இருக்கும் நிலையிலேயே இருந்து விடாது. எனவே உழைக்கும் வர்க்கம் தற்போதுள்ள தனது வேலைச் சூழ்நிலையையும் சுரண்டலின் பரிமாணத்தையும் இன்னும் கொடூரமாகாமல் வைத்திருப்பதற்காகக் கூடப் போராடவே வேண்டியுள்ளது. அத்தகைய போராட வேண்டிய நிர்ப்பந்தமே உழைக்கும் வர்க்கத்தை ஒன்றுபடுத்தும் சக்தியாகும். அடிப்படையில் உழைக்கும் வர்க்கத்தின் ஒற்றுமை அதன் வாழ்க்கைத் தேவையை அடிப்படையாகக் கொண்ட போராட்ட ஒற்றுமையாகும். இந்தப் பின்னணியில் தான் உழைக்கும் வர்க்க அமைப்புகள் தாமாகவே தொழிற்சங்கங்கள் என்ற வடிவத்தில் உருவாயின.

அன்றாடப் பிரச்னைகளுக்கான அமைப்பு நிரந்தரத் தீர்வைத் தராது

ஆனால் இத்தகைய தொழிற் சங்கங்கள் தொழிலாளி வர்க்கத்தின் அன்றாட நடைமுறைத் தேவைகளைக் கருத்திற்கொண்டு உருவாக்கப்பட்டவை. தொழிற்சங்கங்கள் அன்றாடத் தேவைகளை அடிப்படையாகக் கொண்ட நடைமுறை ரீதியிலான போராட்டங்களின் மூலம் மட்டும் அதன் பிரச்னைகள் அனைத்திற்கும் நிரந்தரத் தீர்வினைக் கொண்டுவர முடியாது. அதாவது கூலியடிமைத் தளையிலிருந்தான அதன் விடுதலையைச் சாதிக்க முடியாது. அதனைச் சாதிப்பதற்கு பாட்டாளி வர்க்க அரசியல் அவசியம். அந்த அரசியல் உணர்வு தொழிற்சங்க இயக்கத்திற்குள் வெளியிலிருந்துதான் கொண்டு செல்லப்பட வேண்டும்.

மேலும் படிக்க

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்