வியாழன், 1 மார்ச், 2012

தியாகி பகத்சிங் சிலை மதுரையில் அமைக்க வேண்டும்: மதுரை மாவட்ட அச்சகத் தொழிலாளர்கள் சங்கம் கோரிக்கை


சமூக வளர்ச்சியின் படிக்கட்டுகளில் அச்சுத்தொழிலுக்கு எப்போதும் ஒரு தனி இடம் உண்டு. இந்த சமூக வளர்ச்சிக்கு பாடுபட்ட பல்வேறு அறிஞர்களின் கருத்துகளை அழகாக தொகுத்து இந்த உலகம் முழுவதும் கொண்டு செல்வதற்கு உறுதுணையாக இருந்தது அச்சுத் தொழிலே ஆகும். அச்சு இயந்திரங்களில் தொழில்நுட்பமும், அச்சக முதலாளிகளும் முன்னேறிய அளவிற்கு அதில் காலம் காலமாக பணிபுரியும் தொழிலாளர்கள் முன்னேறவில்லை. சிறிதும், பெரிதுமாக அச்சகங்கள் இருந்த போதும் அதில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு மிகவும் குறைவான ஊதியமே தரப்படுகிறது, புதிய இயந்திரங்கள் வரும் போது எந்த வித இழப்பீடும் தரமால் தொழிலாளர்கள் வேலையை விட்டு நிறுத்தப்படுகிறார்கள், தொழிலாளர்களுக்கு சட்டப்படி உள்ள 8 மணி நேர வேலை, பி.எப்., இ.எஸ்.ஐ.,எதுவும் வழங்கப்படுவதில்லை.


 இவ்வாறு சுரண்டப்படும் தொழிலாளர்கள் பல்வேறு தொழில் நிறுவனங்களில் பணிபுரிவதால், இவர்களுக்குள் ஒற்றுமையை கொண்டு வருவது கடினமான பணியாக இருந்தது. தற்போது அந்த நிலையில் ஒரு வரவேற்க தக்க மாற்றமாக மதுரையில் பல்வேறு நிறுவனங்களில் பணிபுரியக்கூடிய தொழிலாளர்கள் ஓன்று சேர்ந்து ‘மதுரை மாவட்ட அச்சகத் தொழிலாளர்கள் சங்கத்தை’ அமைத்துள்ளனர். இவ்வாறு உதயமாகியுள்ள அந்த சங்கம் வெறுமனே தொழிலாளர்களின் பொருளாதார கோரிக்கைகளை மட்டும் முன் வைக்காமல் சமூக கண்ணோட்டத்தோடு தங்களின் கோரிக்கையை 26.02.2012 அன்று சென்ட்ரல் ஆர்கனிசே­ன் ஆஃப் இந்தியன் டிரேடு யூனியன்ஸ் (COITU) நடத்திய "உழைக்கும் வர்க்கத்தின் தொழிற்சங்கம் அமைக்கும் உரிமையினைத் தடுக்கும் போக்கை முறியடிப்போம்"  என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் முன்வைத்தன.

மதுரையில் தொழிலாளர் களம் அமைக்க வேண்டும், தியாகி பகத்சிங் சிலை ,உழைப்பாளர் சிலை ஆகிவற்றை மதுரையில் பிரதான இடத்தில் நிறுவ முன் முயற்சி எடுக்கவேண்டும். என்பதே அந்த கோரிக்கைகள் ஆகும். இவ்வாறு தான் வாழும் சமுகத்தின் மீது அக்கறை கொண்டு , ஆங்கிலேயர்களுக்கு அடிமைப்பட்டு கிடந்த இந்தியாவில் , சோசலிச குடியரசு நிரவப்படும் வரை தனது போராட்டம் தொடரும் என்று அறிவித்து ஆங்கில ஏகாதிபத்தியதிற்கு எதிராக தீரத்துடன்  போராடிய தியாகி பகத் சிங் மற்றும் உழைக்கும் மக்களின் சின்னமான உழைப்பாளர் சிலை ஆகிவற்றை நிறுவ வேண்டும் என்று கோரிக்கை வைக்கும் மதுரை மாவட்ட அச்சகத் தொழிலாளர்கள் சங்கம், சமரசமற்ற போராட்டத்தின் மூலம் அச்சகத் தொழிலாளர்களின் உரிமைகளை முன்னெடுத்துச் செல்வதோடு,  ஒட்டுமொத்த உழைக்கும் மக்களின் விடுதலைக்குமான தனது வரலாற்று கடமையினை சிறப்பாக செய்யும் என்று எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்