சனி, 11 ஜூன், 2011

எம் எப் ஹுசேனின் மறைவும் ,இந்திய அரசு அவருக்கு தந்த மரியாதையும்



அறிவியல்  தொழில்நுட்பத்தின் வளர்ச்சியில் சிற்பக்கலை, நாடகங்கள், தெருகூத்துகள் ஆகிய அனைத்தும் இருந்த இடம் தெரியாமல் அழிந்து  போய்  விட்டது என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு தொழிநுட்ப ரீதியாக அனைத்தையும் இணைக்கும்,   கலையாக சினிமா மட்டுமே இன்று விஞ்சி நிற்கிறது. அந்த சினிமாவும் வணிகரீதியாக என்ற போர்வையில் எந்த விதமான கலையுணர்ச்சியும் இல்லாதவர்களின் கைகளில் மாட்டிக்கொண்டுள்ளது.

எவ்வளவோ புகைப்பட கருவிகள் வந்த பின்பும் இன்றும் ஓவியங்கள் தனக்கென்று ஒரு இடத்தை தக்க வைத்துக்கொண்டுள்ளது என்றால் அது கால சூழ்நிலைக்கு ஏற்றவாறு தனது வடிவமைப்பை மாற்றிக்கொண்டதே காரணம் என்று கூறலாம். ஓவியங்கள் இன்று கேலிச்சித்திரங்களாக , கோட்டோவியங்களாக, சூழ்நிலையை பிரதிபலிக்கும் நவீன ஓவியங்களாக , கணினியில் வரைவதுமாக அது உலகம் முழுக்க தனது சந்தையை உருவாக்கி கொண்டுள்ளது. இது போன்ற துறையில் ஒரு கலைஞன் புகழ் பெறுவது என்பது குதிரை கொம்பே ஆகும். இந்தியாவில் தலைசிறந்த ஓவியரான எம்.எப்.ஹுசைன் உள்ளபடியே தலைசிறந்த ஓவிய கலைஞராக திகழ்தார். அவர் இந்திய அரசின் பல பதக்கங்களையும்,உலகம் முழுவதும் பல விருதுகளை பெற்றவராக இருந்தும், இந்து கடவுளை நிர்வாணமாக வரைந்தார் என்று குற்றம் சாட்டிய சிவசேன ஆர்.எஸ்.எஸ். போன்ற ஹிந்து வெறிவாத  அமைப்புகள் அவருக்கு பல வகையிலும்  தொல்லை கொடுத்து வந்தது. அவர் மீது பல வழக்குகளை இந்த அமைப்புகள் தொடுத்தன. முதலாளித்துவ இந்திய அரசோ அவரை பாதுகாப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. முதலாளித்துவ  பத்திரிக்கைகள் இதை மிகப்பெரிய தேச அவமானம் என்று  துற்பிரசாரத்தை  மேற்கொண்டன. 

இந்த நிலையில் இந்தியாவில் வாழமுடியாது என்ற நிலையில் அவர் வெளிநாடுகளில் நிரந்தரமாக தங்க ஆரம்பித்தார். கத்தாரின் குடிமகனாக தன்னை பதிவு செய்து கொண்டார். தனது 95 வயதில்  09 .06 .2011 அன்று லண்டன் மாநகரில் அவர் உயிரிழந்தார். இறுதி சடங்குகளுக்கு கூட அவரது உடல் இந்தியா கொண்டுவரப்படாமல் லண்டனிலையே   அடக்கம் செய்யப்பட்டது.

பி.ஜே.பி. இந்து வெறிவாதத்தை துண்டுகிறது என்றால் காங்கிரஸ் அதை ஆதரிக்கிறது. உழைக்கும்  மக்கள் தங்கள் பொது எதிரியான முதலாளியையும், முதலாளித்துவ அரசையும் உணர்ந்து கொள்ளாமல் இருக்க  மத வேறுபாட்டை இந்த கட்சிகள் பேணி வளர்கின்றன. அதன் பங்கும் பகுதியுமாகத்தான் ஒரு புகழ் பெற்ற ஓவிய கலைஞர் தான் வரைந்த கலைநயமிக்க ஓவியங்களை கூட மத வேறுபாடு பார்க்கப்பட்டு கடுமையான சிதரவதைக்குள்ளாகி தனது முதிய வயதில் சொந்த நாட்டில் இருந்து விரட்டப்படுகிறார். அவரது உடல் கூட அவர் பிறந்த நாட்டில் அடக்கம் செய்யப்பட வில்லை  இது தான்  இந்திய முதலாளித்துவ அரசு திறமை மிகுந்த கலைஞர்களுக்கு தரும் மரியாதை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்