வெள்ளி, 11 மே, 2012

இந்த சமூக அமைப்பை பட்டவர்த்தனமாக தோலுரித்துக் காட்டுகிறது 'வழக்கு எண் 18 \9 '

உண்மையை பட்டவர்த்தனமாக சொல்லும்  கலை இலக்கியங்கள் மாபெரும் புரட்சிக்கே வித்திடும். தமிழில் அபூர்வமாக சில படங்கள் அப்படி வருவதுண்டு, ரங்கநாதன் தெருவில் வேலை செய்யும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் எப்படி சுரண்டப்படுகிறார்கள் என்பதை உலகத்திற்கு  வெளிச்சம் போட்டுக் காட்டியது வசந்த பாலன் இயக்கிய அங்காடி தெரு படம். அந்த படம் வந்த பிறகு ரங்கநாதன் தெருவில் உள்ள கடைகளில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் சுரண்டப்படுவதை கண்டித்து பல தொழிற்சங்கங்கள் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தின. அப்படி சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் படங்களே இந்த காலத்திற்கு தேவை.அதை உணர்ந்து இந்த சமூக அமைப்பை பட்டவர்த்தனமாக தோலுரித்து காட்டும் ஒரு அருமையான படைப்பை (வழக்கு எண் 18 \9 ) தந்திருக்கிறார் இயக்குனர் பாலாஜி சக்திவேல். 

தனது ஒவ்வொரு பிரேமிலும் நம்முடைய அசல் வாழ்க்கையை குறிப்பாக ஏழை மக்கள் படும் துன்பங்களை அப்படியே  செதுக்கி இருக்கிறார் பாலாஜி சக்திவேல். சிறு , குறு நிலங்களை கொண்ட விவசாயிகள் குத்தகை கொடுத்து ,கடன் வாங்கி விவசாயம் செய்து நஷ்டப்பட்டு போகின்றனர் அதை அசலும் நகலுமாக படம் பிடித்துக் காட்டியுள்ளார்.  கிராமப்புற மக்களை ஏமாற்றி சுரண்டி பிழைப்பவர்கள் கந்து வட்டி கடைக்காரர்களும் , கமிசன் ஏஜெண்டுகளும் தான் ,இவர்களிடம் அவசரத் தேவைக்கு கடன் வாங்கி வாழ்க்கை முழுவதும் அவர்களின் கடனை அடைப்பதற்காகவே உழைத்து மடிகின்றனர் ஏழை விவசாயிகள்.இது போன்ற விவசாயம் பார்ப்பவர்கள் கடனில் பிறந்து கடனில் வாழ்ந்து கடனிலையே மடிகின்றனர். அந்த மக்களின் சந்தோசங்கள் அனைத்துமே கந்து வட்டிக்  கடைக்காரனிடம் அடைமானம் வைக்கப்படுகிறது. 

 சுரண்டலை யார் செய்தாலும் சுரண்டல் தான்.அதில் தேசிய முதலாளி செய்தால் மட்டும் சுரண்டல் அல்ல என்று சிலர் சொல்கிறார்கள், அந்த தேசிய முதலாளிகளின் சுரண்டலுக்கு விதிவிலக்கு அளிக்கின்றனர் சிலர் அதுவும் கம்யூனிசத்தின் பெயரால். அந்த தேசிய முதலாளிகளின் முறுக்கு கம்பெனியில் சிறுவர்கள் எப்படி காட்டுத்தனமாக சுரண்டப்படுகிறார்கள் என்பதை பட்டவர்த்தனமாக காட்டியுள்ளார் , முறுக்கு கம்பனி முதலாளி தனது லாபம் குறையக்கூடாது என்பதற்காக தொழிலாளியின் தாய் தந்தை இறந்து போனதைக் கூட அந்த தொழிலாளிக்கு சொல்லாமல் மறைப்பது என்பது  முதலாளிகளின் கோரமுகமே அவர்களின் ஈவிரக்கம் அற்ற சுரண்டல் தான் என்பது சாட்டையடி போல சொல்கிறார்.இது போன்ற காட்டுத்தனமான சுரண்டல் வடமாநிலங்களில் செயல்படும் முறுக்கு கம்பெனிகளில் மட்டுமல்ல, இங்குள்ள சிவகாசி தீப்பெட்டி தொழிற்சாலைகளிலும், ஈரோடு, திருப்பூர் நூற்பாலைகளிலும் சுமங்கலித் திட்டத்தின் பெயராலும், குஜராத்தில் உள்ள மீன் பண்ணைகளிலும் நடைபெறுகிறது.

 ஏழை விபச்சார பெண்களின் வாழ்வியல் எவ்வாறு இருக்கிறது என்பதும் , கலைகள் அனைத்துமே பெருமுதலாளிகளின் கைகளில் சிக்கிய பிறகு அவர்கள் எடுப்பது தான் சினிமா ,அவர்கள் காட்டுவது தான் கலை என்றாகி விட்டது. எளிமையை அடிப்படையாக கொண்ட  கிராமப்புற கலை என்பது இருந்த இடம் தெரியாமல் அறவே அளிக்கப்பட்டு விட்டது. அந்த உண்மையான கலைஞர்கள் தெருக்களில் நாடோடிகளாக ஆகிவிட்டனர். சினிமாவில் திறமை அற்றவர்களும் எவ்வாறு ஜோடிக்கப்பட்டு வல்லவர்களாக ரசிகர்கள் கண் முன்னே நிறுத்தப்படுகிறார்கள் ,என்பதும் நம் கண்முன்னே உலவ விட்டுள்ளார்.

குறைந்த ஊதியமே கிடைப்பதால்  மூன்று நான்கு வீடுகளுக்கு வேலைக்கு செல்லும்  வீட்டு வேலை செய்யும் பெண்கள் சுரண்டப்படுவதும்,எந்த
சலனமும்   இல்லமால் அவர்கள் கடுமையாக உழைப்பதும்,அவர்கள் வேலை பார்க்கும் சூழல்  எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் இருப்பதும், அந்த பெண் ஏழை என்பதாலையே அந்த பெண்ணுக்கு மிகப்பெரிய அநீதி இழைக்கப்பட்ட போதும் எந்த நிவாரணமும்   இந்த சட்டத்தால் கிடைக்காமல் போவதும், ஒரு கம்யூனிஸ்டின் மகளான அந்த பெண் தனக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய அநீதிக்கு தக்க பதிலடி கொடுப்பதும், இந்த சமூக அமைப்பின் அவலத்திற்கு அவர்  சாட்சியாக இருக்கிறார்.


 நகர்புற அப்பர் மிடில் கிளாஸ் பெண்களின் கனவுகள்,எல்லா இடங்களிலும் பழியாவது ஏழைகள் மட்டுமே என்ற யதார்த்தம் , கள்ளச்சாராயம் காட்சுபவனும், கஞ்சா விற்றவனும், விபச்சாரம்  செய்தவர்களும் கல்வி முதலாளிகளாக இன்று உலாவருவதும் ,
கள்ளத்தனமாக சம்பாதிக்கும் பணத்தில் அவர்களின் பையன்கள் அடிக்கும் கூத்துகள், பணம் படைத்தவர்களின் மகன்கள்  என்பதால் எதையும் விலை கொடுத்து வாங்கிவிடும் போக்குகள்,  அரசியல்வாதிகளின் அட்டகாசம்,  பணம் படைத்தவர்கள் எப்படியாவது தப்பிவிடும் சாமர்த்தியம் அதற்கு துணை போகும் காவல் துறை , நீதி துறையின் போக்குகள் அனைத்தும் இந்த சமூகத்தில் நடக்கும் பட்டவர்த்தனமான உண்மைகள் ஆகும்.

 காவல் துறை என்பது அரசின்  ஒடுக்குமுறையின் கருவி என்பதோடு அதற்கு இட்ட பணியான முதலாளிகளின் நலன்களை காக்கும் வேலையை காவல் நாய் போல எந்த தொய்வும் இல்லாமல் செய்துவருகிறது. அநீதிக்கு எதிரான நடவடிக்கை, குற்றங்களை தடுத்தல் என்பது எல்லாமே அது போட்டு கொள்ளும் பொய் வேடம் என்றால் அது மிகை இல்லை. காவல் துறையால் பாதிக்கப்பட்ட மக்கள்  எல்லாம் காவல் துறை நாய்கள் மீது ஆசிட் வீசினால்  எந்த காவல் துறையினருக்கும் முகமே இருக்காது என்பது தான் உண்மை ஆகும். நீதிமன்றம் காவல் துறைக்கு ஒத்து ஊதும் வேலையை மிகச்சரியாகவே என்றும் செய்து வருகிறது. என படம் முழுக்க சிறுதும் மிகை படுத்துதல் இன்றி எதார்த்தத்தை மட்டுமே கொண்டு மிகச்சிறந்த படைப்பை கொடுத்திருக்கிறார் பாலாஜி. இது போன்ற உண்மைகளை சிறிதும் தயக்கமின்றி பேசும் படங்கள் வருமேயானால் சமூக மாற்றம் என்பது எட்டும் தொலைவிலையே இருக்கும்.

3 கருத்துகள்:

முகப்பு

புதிய பதிவுகள்