சனி, 5 மே, 2012

மே 1 தொழிலாளர் தினம்

ஒரு காலத்தில் 
இயந்திரங்களோடு இயந்திரங்களாய் 
இயங்கிய இயந்திரங்களின் பெயர் உங்களுக்கு 
தெரியுமா ?
அதன் பெயர் தான்  தொழிலாளர்கள்.

ஹீமோகுளோபின் கச்சாவில்
18 மணி நேரம் இயங்கிய
முதுகெலும்பு இயந்திரம் அது.



சேமித்து வைக்க ஏதுமில்லை- 
உழைப்பை தவிர.
உற்பத்திக்கு மட்டுமே
உண்டாக்கப்பட்டவை அவை.

அந்த இயந்திரங்களுக்கு
வியர்வையே பெருங்குளியல் 
வெற்றுடம்பே பட்டாடை 
பன்றித் தொழுவங்களே
ஒன்றிப் படுக்கும் சேரிகள். 

' ம்' 
கஜானாவிற்கு தெரியுமா 
கருணையின் வாசனை 
அடச் ... சீ..

மனிதர் நோக மனிதர் பார்க்கும் 
வழக்கமினியும் உண்டோ என 
ஆயுதங்களின் அர்த்தத்தை 
காலம் 
தொழிலாளர்களின் காதில் ஓதியது. 

அவர்கள் உயர்த்திப் பிடித்தனர் 
அரிவாளும் சுத்தியலும். 
அப்போது முளைத்தது வெள்ளி. 

சிகாகோ வானத்தில் கர்ஜித்தது 
8 மணி நேர உழைப்பு 
8 மணி நேர ஓய்வு 
8 மணி நேர சமுதாயப் பணி

கார்ல் மார்க்ஸின் தீர்க்கதரிசனம். 
சமூக முன்னேற்றத்திற்கான 
முன்னணி
ப்படைகள் தொழிலாளர் வர்க்கமே 
அந்த வர்க்க விடுதலையே 
சமூக விடுதலை.
 
தொழிலாளர்களின் தீக் கனல் மூச்சில் 
காற்று மண்டலம் வழியே 
காலத்தின் முகம் கடுகடுத்து 
சிவக்கும் போதெல்லாம் 
காலம்
உருமாறுகிறது ஒரு கம்யூனிஸ்டாக.
உழைப்பை உறிஞ்சும் 
கல்லாப்பெட்டியை 
உடைத்து தகர்க்கும் சுத்தியலாக. 
அவசியம் ஏற்பட்டால் சம்மட்டியாகவும். 



எந்த அதிநவீன யுகத்திலும் 
எங்கள் பாட்டாளி வர்க்கத்தின் 
ஒரே சீதனம் இந்த சாதனம்.


ஒளியுடைய மனிதனும் 
கறைபடியாத உள்ளமும் 
பாட்டாளிக்கு மட்டுமே சாத்தியம் 


பூமியின் புதுப்பித்தலுக்கு 
அவன் மட்டுமே மூலதனம் 
பண முதலைகள் 
வெறும் முதலைகளே 
காய்ப்பேறிய கைகளே 
கட்டுமான கருவிகள்.


ஜனநாயக‌ சட்டங்களை காட்டிக் கொண்டு
நம்மை 
மறைந்திருந்து இயக்கும் 
மாலுமி எவனென அடையாளம் காண்போம். 

சுதந்திரமாய் பட்டினி கிடக்கலாம்
ஏனென்று கேட்கமாட்டார்கள் எவரும்
முழுச் சுதந்திரம் அதற்குண்டு.


ஏன் நாம் பட்டினி கிடக்க வேண்டும்?
கேள்வியோடு வீதிக்கு வந்தால்
துப்பாக்கி ரவைகள் பதில் சொல்லும்.

வெறும் பேச்சு சுதந்திரம் 
நம் இழிவுகளுக்கு 
தீர்வாகாது தோழர்களே.

ஒரு யுகப்புரட்சியின் முண்டுதல்
நம் ஆன்மாவிற்குள் 
வளர்சிதை மாற்றம் அடையாமல்
வெள்ளி முளைக்காது. 


ஆச்சார கம்பளி போர்த்தி 
மதப்போர்வைக்குள் சுருண்டு 
ஜாதிய கவசமிட்டு உறங்கும் 
துருப்பிடித்து போன மனிதர்கள்,
கவசம் உடைக்க சம்மட்டி 
கம்பளி போர்வை,கிழித்தேடுக்க அரிவாள்!
இன்னும் என்ன தாமதம் தோழா ? 


இந்தப் போராட்டம் ஓயப்போவதில்லை 
அது வரை 
தொழிலாளர் ஒற்றுமை ஓங்குக ! 
மேதினம் ஓங்குக‌ !



..கவிஞர் அறிவுக்கரசு


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்