புதன், 7 டிசம்பர், 2011

கருத்து சுதந்திரத்திற்கு சமாதிகட்ட கிளம்பிவிட்டார் கபில் சிபல்

இங்கு பேச்சுரிமை உண்டு, எழுத்துரிமை உண்டு, சங்கம் அமைக்கும் உரிமை உண்டு, கூட்டம் போடும் உரிமை உண்டு  என உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று புகழப்படும் இந்தியாவைப்பற்றி முதலாளித்துவ அரசியல்வாதிகள் (சி.பி.எம்., சி.பி.ஐ.உட்பட ) பெருமையாக புகழ்வதுண்டு. ஆனால் இங்கு ஒரு பொது கூட்டத்தையோ, ஒரு கருத்தரங்கத்தையோ நடத்தி பார்த்தால் தான் அதன் கஷ்டம் தெரியும் (காவல்துறையினர் கடைசி வரை அனுமதி தராமல்   அலையவிடுவார்கள்). பத்திரிக்கை நடத்தவேண்டுமெனில்  ஆயிரத்தியெட்டு விதிமுறைகளை கடந்து  பத்திரிக்கை கொண்டு வருவதற்குள் சொல்ல வந்த கருத்துகளே மறந்து போய் விடும்.அந்த அளவிற்கு விதிமுறைகளை உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.

 தற்போது எழுத்தாளர்கள், விமர்சகர்கள், இடதுசாரி அரசியல்வாதிகள் என சமூக முன்னேற்றத்தில் அக்கறையுள்ளவர்கள் அனைவரும் தாங்கள் சொல்ல நினைப்பதை எளிதாக  பதிவு செய்ய வசதியாக உள்ளது வலைப்பூக்களும் ,பேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலை பக்கங்கள் தான். எகிப்து, துனிஷியா மக்கள் எழுச்சிகளில் வலைதளங்களில் தான் கருத்துகள், செய்திகள் உடனுக்குடன் பரிமாறப்பட்டன. அந்த மகத்தான மக்கள் எழுச்சிக்கு  பிறகு உலகம் முழுவதும் முற்போக்கு சமூகசிந்தனை உள்ளவர்கள்  தங்கள் கருத்துகளை ,விமர்சனங்களை, தங்கள் அமைப்பின் போராட்ட செய்திகளை  பேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக இணைய பக்கங்களில் அதிகமாக பகிர்ந்து கொள்கிறார்கள். இது மாணவர்கள் , படித்த தொழிலாளர்கள் மத்தியில் ஒரு புது உத்வேகத்தை தந்து தற்போது ஆளும் அரசுகளின் மீது கடும் அதிர்ப்தியை உருவாக்கி வருகிறது. அரசியல் வாதிகள் ,செய்யும் தில்லுமுல்லுகள் , ஊழல் போன்றவை உடனுக்குடன்  பரிமாறப்படுவதுடன், ஊழல் அரசியல்வாதிகளை அம்பலப்படுத்தும் விதத்தில் கார்டூன்கள் அதிக அளவில் இணைய பக்கங்களில் உலா வருகின்றன.

 இது அனைத்துமே இந்தியாவை சுகபோகத்தொடு ஆண்டு கொண்டிருக்கும் முதலாளித்துவ அரசுகளுக்கு எதிராக ஒருநாள் திரும்பும் என்று பயத்தில் தான் கபில் சிபல் சமூக வலைபக்கங்களுக்கு  சென்சார் வைக்க துடித்து கொண்டிருக்கிறார்.அதன் மூலம் கருத்து சுதந்திரத்திற்கு சமாதி கட்டப்பார்கிறார்.  தடை செய்வதன் மூலமோ , தணிக்கையின் மூலமோ  எதிர் கருத்துகளை வரவிடாமல் அடக்கிவிட நினைக்கிறது இந்திய முதலாளித்துவ அரசு. ஆனால் எத்தனை தடைபோட்டாலும்  மக்கள் எழுச்சியை தடுக்கமுடியாது என்பதே வரலாறு காட்டும் உண்மை ஆகும். கருத்து  சுதந்திரத்திற்கு சமாதி கட்ட புறப்பட்டிருக்கும் கபில் சிபலை வன்மையாக கண்டிப்போம். சமூக ஜனநாயக சக்திகளை ஒன்றி திரட்டி கருத்து சுதந்திரத்திற்கெதிரான இந்த தாக்குலை முறியடிப்போம்.

4 கருத்துகள்:

  1. தோழர்,
    ஏற்கனவே new information technology act endru ஒரு சட்டம் இயற்றி விட்டார்கள்.. இனி அந்தந்த மாநில அரசும் நடைமுறைப் படுத்த வேண்டியது தான் பாக்கி.. சிபல் கூறும் அனைத்தும் அந்த சட்டத்தின் கீழ் ஒரே வரியில் முடித்து விட்டார்கள்... ஆட்சேபகரமான கருத்துக்கள் நீக்கப் பட வேண்டும் என்பதே அது.. எது எது ஆட்சேபகரமான எழுத்துக்கள் என்பதை வரை அரை செய்யாமல், இது தான் இவர்கள் மார் தட்டும் ஜனநாயகம் என்று தெள்ளத் தெளிவாக எடுத்து உரைக்கின்றனர்

    பதிலளிநீக்கு
  2. அன்பிற்கினிய தோழர் அவர்களே,
    The Information Technology Act, 2000 என்ற இந்த சட்டம் முன்பே நடைமுறையில் உள்ள மத்திய சட்டம். இந்த சட்டம் குற்றவியல் நடைமுறை சட்டம்(1973 ) ,இந்திய சாட்சிய சட்டம் (1872 ) ஆகிய சட்டங்களுக்கு உதவி செய்யும் விதமாக கொண்டுவரப்பட்டது தான். அதாவது யாரவது புகார் கொடுத்தால் ( அரசும் புகார் கொடுக்கலாம் ) அவர்கள் மேல் நடவடிக்கை எடுப்பது தான் இது வரை உள்ள நடைமுறை. (ஒரு வலைபதிவு ஒருவரை அவதூறு செய்யும் விதமாக இருக்குமானால் அவர் புகார் செய்யலாம் காவல் துறையும் நடவடிக்கை எடுக்கும்) .ஆனால் இப்போது கபில் சிபல் கொண்டு வரநினைப்பது ஒரு தகவலையே பதிவு செய்ய மறுப்பது ஆகும்.அதாவது ஒரு பதிவர் பதிவு செய்த செய்தியின் மீது நடவடிக்கை எடுப்பது என்பது வேறு. பதிவு செய்யவே மறுப்பது அல்லது அதை சென்சார் செய்வது என்பது வேறு. இது இந்திய அரசியல் அமைப்பு சட்டம் சரத்து 19 க்கு எதிரானது ஆகும். அரசியல் அமைப்பு சட்டப்படி ஒருவருக்கு கருத்து சொல்ல உரிமை உண்டு. அதை பறிப்பற்கான முயற்சியை தான் கபில் சிபல் செய்து வருகிறார். பத்திரிக்கை தணிக்கை என்பதெல்லாம் எமர்சென்சி காலத்தில் மட்டும் தான் நடக்கும். இந்தியாவில் நிரந்தர எமர்சென்சியை கொண்டு வரப்பார்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  3. 30 april 2011
    அன்று வெளியிடப் பட்ட செய்தி குறிப்புகளில் இந்த சட்டத்தில் சில சரத்துக்களை உள் சேர்த்து ஆட்சேபகரமான செய்திகள் ஏதாவது சமூக வலை தளங்களில் வரும் பட்சத்தில் நீக்கப் பட வேண்டும் என்று குறிப்பிடப் பட்டுள்ளது.. இதற்கு அந்த கால கட்டத்தில் கூகிள் தன் அதிருப்தியை தெரிவித்ததாகவும் செய்தி குறிப்புகள் கூறின..இதை கவனத்தில் கொண்டு வரவே அதை எழுதினேன்...

    see the section 79
    http://chmag.in/article/may2011/cybercrimeopedia-new-rules-under-information-technology-act

    under which objectionable matters has to be removed by intermediaries.. or else they are liable..

    இதன்படி சென்ற மே மாதத்திலேயே இந்த சட்டத்தில் இடம் அளிக்கப் பட்டுள்ளது... இது யார் கண்ணுக்கும் தெரியாமல் சென்றது.. ஆனால் இதன்படி ஒரு மாநிலத்திற்கு மட்டுமே இதை நடைமுறைப் படுத்த வாய்ப்பு உள்ளது...

    சட்டம் குறித்து எனக்கு அவ்வளவாக தெரியாது... இருந்தாலும் அந்த கால கட்டங்களில் நடந்த செய்தி குறிப்புகள் அவ்வாறே சொல்கின்றது.. எனக்கும் இது குறித்து தெளிவு படுத்தினால் நலமே..

    பதிலளிநீக்கு
  4. தோழர் சூரிய ஜீவா நீங்கள் அளித்த சுட்டியைப் படித்தோம். //சிபல் கூறும் அனைத்தும் அந்த சட்டத்தின் கீழ் ஒரே வரியில் முடித்து விட்டார்கள்... // என்று நீங்கள் கூறுவது சரிதான். இப்போது அவ்விதியை அமல்படுத்துமாறு வலியுறுத்தித்தான் இணையதள நிறுவனங்களுடன் சிபல் பேசிக் கொண்டிருக்கிறார். தகவலுக்கு நன்றி தோழர்.

    பதிலளிநீக்கு

முகப்பு

புதிய பதிவுகள்