ஞாயிறு, 29 மே, 2011

இந்திய முதலாளித்துவ வளர்ச்சியின் வரலாறு ( பகுதி-1 )

                        -- (தோழர்.சிப்தாஸ் கோஷ் - நூல் தொகுப்பிலிருந்து)


கிழக்கிந்திய கம்பனி வியாபாரத்தைத் தொடங்குவதற்கு முன்பும் அதன் பின்பும் சிராஜ் - உத்- தெளலாவின் வீழ்ச்சி வரையிலும் இந்திய மூலதனமானது தனது கைவினைப் பொருள் வணிகத்துடன் பெருமளவிற்கு வளர்ச்சியடைந்தது. இந்திய வணிகர்கள் நம் நாட்டில் மட்டுமின்றி கிழக்காசிய, தென் ஆப்ரிக்கா, கிரேட் பிரிட்டன் உட்பட பல்வேறு ஐரோப்பிய சந்தைகளில் லாபம் கொழிக்கும் வியாபரத்தை நடத்தி வந்தனர்.

 சிராஜ் – உத்- தெளலாவின் காலத்தின் போது வணிக முதலாளிகளுடன்  அவருக்கிருந்த உறவு சீர்கெடத் துவங்கியது. இதன் விளைவாக வணிக முதலாளிகளில் ஒரு பகுதியினர் குறிப்பாக ஜெகத் சேத்,  உமிசந்த் இன்னும் பலரது வணிக இல்லங்கள் தங்களது வியாபாரம் மற்றும் தொழிலுக்கு நல்  ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நவாப்பின் விரோதிகளோடும் கிழக்கிந்திய கம்பனியோடும் சதி திட்டத்தில் கை கோர்த்து கொண்டன. பிளாசிப் போரில்  சிராஜ் விழ்ச்சியடைவதற்கு இது இட்டுச் சென்றது. மேலும் கிழக்கிந்திய கம்பெனியின் கைப்பொம்மையான மீர்ஜாபர் நவாப்பாக பதவியமர்த்தப்பட்டார்.

ஆனால் இதன்பின் வணிக முதலாளிகள் எதற்காக மீர் ஜாபரை நவாப் ஆக்கிட முழு ஆதரவு ஆதரவு அளித்தனரோ அதற்கு, அவர்களின் எதிர்பார்ப்பக்கு நேர்மாறாக  நிகழ்ச்சிகள் நடந்தேறின. சிராஜ் ஆட்சி காலத்தில் பிரிட்டிஷ் வணிகர்களைவிட இந்திய வணிகர்கள் அதிகமாக அனுபவித்து வந்த கூடுதல் வசதி வாய்ப்புகளையும் அனுகூலங்களையும் மீர்ஜாபர் காலத்தில் இழந்ததுவிட்டனர். இது மட்டுமின்றி பிரிட்டிஷ் வியாபாரிகளுக்கு வரி விளக்கு அளிக்கப்பட்டு, இந்திய வியாபாரிகள் மீது உயர்த்தப்பட்ட விகிதத்தில் வரிகள் சுமத்தப்பட்டதின் மூலம் வர்த்தக நடவடிக்கைகளில் பாரபட்சம் திணிக்கப்பட்டது.

மீர்காசீம் ஆட்சிக்காலத்தில் இந்திய வணிகர்கள் தாங்கள் முன்பு அனுபவித்து வந்த கூடுதலான முன்னுரிமையையும், அனுகூலங்களையும்  பெறுவதற்கு கடுமையான முயற்சி மேற்கொண்டனர். இது முற்றிலும் இயலாத பட்சத்தில் குறைந்தபட்சம் பிரிட்டிஷ் வணிகர்களுக்கு சமமாகவாவது தாங்கள் நடத்தப்பட வேண்டும் என்று கோரினர். இதை தொடர்ந்து மீர்காசிம் பிரிட்டிஷ் வணிகர்களைப்  போலவே இந்திய வணிகர்களுக்கும் வரி விக்கு அளித்தார். இது மீர்காசிம்மிற்கும் கிழக்கிந்திய கம்பனிக்குமிடையில் போருக்கு இட்டுச் சென்றது. இப்போரில், மீர்காசிமிற்கு ஏற்பட்ட தோல்வியானது வங்காளத்தில் பிரிட்டிஷ்  ஆட்சிக்கு வலுவான அடித்தளத்தை ஏற்படுத்தியதோடு வியாபாரம் மற்றும் வணிகத்தில் சுதேசி வணிக மூலதனத்தை கிழக்கிந்திய கம்பனியின் முழுமையான அடக்கு முறைக்கு ஆட்படுத்தியது. பிரிட்டிஷ் வணிகர்களின் நலன்களுக்குகாக உள்நாட்டு நெசவுத் தொழிலில் சீரழிவை உண்டாக்குவதற்கு டாட்டா நெசவாளர்களின் கட்டை விரல்கள் துண்டிக்கப்பட்டன.

 படிப்படியாக மற்ற அனைத்து உள்நாட்டு கைத்தொழில்களும் , அழிக்கப்பட்டன. இவ்வாறாக நீண்ட நெடுங்காலமாக உள்நாட்டு வணிக முதலாளிகளால் கைவினைப் பொருள் வணிகத்தால் உருவாக்கப்பட்ட மேலும் ஒரு காலத்தில் கடல் கடந்த சந்தைகளிலும் பரவியிருந்த சக்திமிக்க வியாபார வணிக அமைப்பு முறையானது படிப்படியாக அழிவை எதிர்நோக்கியது. இதன் விளைவாக , எந்த இந்திய வணிக முதலாளிகள் தமது வழக்கமான போக்கில் தொழில் மூலதனத்தையும் தேசிய மூலதனத்தையும் உருவாக்கியிருப்பர்களோ அவர்கள் நம் நாட்டில் பிரிட்டிஷ் நிறுவனங்களின் ஏஜெண்டுகள் என்ற முறையில் வெறுமனே, வெளிநாடுகளின் உற்பத்தி பொருட்களை கையாளும் தரகு வியாபார பூர்ஷ்வாவாக முற்றிலும் தாழ்த்தப்பட்டு விட்டனர்.

தரகு வியாபார பூர்ஷ்வாவின் ஒரு பகுதியினர் நீண்ட காலமாக மூலதனத்தை சேகரித்துக் கொண்டிருந்த செயல்முறைப் போக்கில் படிப்படியாக தேசிய மூலதனத்தை உருவாக்கி ஏறக்குறைய சிப்பாய் கிளர்ச்சி (1857) காலத்தின்போது தேசிய பூர்ஷ்வா  வர்க்கமாக  வளர்ந்து  வருகின்ற  அறிகுறிகளைக் காட்டினர்.  சிப்பாய்  கிளர்ச்சியைப்   பற்றி மார்க்சின் குறிப்புரைகளும் இவ்வுண்மையை உறுதிப்படுத்துகின்றன. தரகு வியாபார பூர்ஷ்வா வர்க்கத்தின் இப்பகுதியினர் தொழில் மூலதனத்திற்கு  உருக்கொடுக்க  முன் முயற்சி எடுத்தபோது , இதனை அடிப்படையாகக்  கொண்டு  தேசியவாத  இயக்கத்தின் புதிய விழிப்புணர்வு மக்களிடம்  உதயமாயிற்று.  இவ்வாறாக தரகு வியாபார பூர்ஷ்வாவின் ஒரு பகுதியினர் படிப்படியாக தொழில் பூர்ஷ்வாவாக உருமாறி விட்டபோது இவர்களோடு எஞ்சியிருந்த பகுதியினர் தங்களது தரகு  வியாபாரா பூர்ஷ்வா குனம்சத்தோடு தொடர்ந்து நீடித்து வந்தனர்.

நமது நாட்டின் விடுதலை இயக்கத்தின்போது 1930 வரையிலும் கூட பூர்ஷ்வா தரகு வியாபார பூர்ஷ்வா என்றும் தேசிய பூர்ஷ்வா என்றும் இரு பகுதியினராக இருந்தனர். கம்யூனிஸ்ட் அகிலத்தின் 6 வது மாநாட்டில் ஸ்டாலின் அவர்களும் இவ்வுண்மையை தனது காலனி குறித்த ஆய்வுரைகளில் தெளிவாக குறிப்பிட்டுள்ளார் . சுதந்திர போராட்டத்தின் பொது காங்கிரஸ் கட்சியிலிருந்த இப்பகுதியினரை இந்த தேசிய பூர்ஷ்வா காலனி குறித்த ஆய்வுரையில் 'சுயராஜ்யவாதிகள்' என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இத்தேசிய பூர்ஷ்வாவின் பங்கும் , பகுதியுமாக இருந்த இன்று ஏகாதிபத்திய குழுமங்களாக முன்னணியில் இருக்கும் டாட்டா - பிர்லாக்கள் விடுதலை இயக்கத்தின் தேசிய பூர்ஷ்வா தலைமையை தொடர்ந்து ஆதரித்து வந்தனர்.

காங்கிரஸ் கட்சியின் தேசிய பூர்ஷ்வா தலைமைக்கும் பிரிட்டிஷ் எகாதிபத்தியத்திற்குமிடையில் ஒரு சமரசம் எட்டப்பட்டதின் மூலம் இந்தியாவின் அரசியல் சுதந்திரம் அடையப்பட்டு இந்திய அரசு அதிகாரம் தேசிய பூர்ஷ்வாவின் கரங்களில் திடப்படுத்தப்பட்டது. இந்திய தேசிய மூலதனத்தின் வளர்ச்சி வெகுகாலத்திற்கு முன்பே தொடங்கி, அரசியல் சுதந்திரம் அடைவதற்கு மிக முன்பே போதுமான அளவிற்கு திடப்படுத்தப்பட்டுவிட்டது என்பது இதன் மூலம் தெளிவாகிறது.
சர்வதேசத்தின்  கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தலைமையும் கூட இதனை மறுக்க முடியவில்லை. எனவே தான் 1925 ல் ஸ்டாலின் புரட்சியாளர்களின்  பல்கலைகழகத்தில் உரையாற்றும் போது அனைத்து  கீழ்த்திசைக்  காலனிகளிலும் இந்தியாவே  அக்காலத்திலையே முதலாலளித்துவ ரீதியில் மிக முன்னேறிய, வலிமைமிக்க நாடு என்றும் இந்திய தேசிய பூர்ஷ்வா ஏற்கனவே  ஒருமுகப்பட்ட ஒரு வர்க்கமாக உருவாகிவிட்டனர் என்றும் சுட்டிக்காட்டினார். இதே தேசிய பூர்ஷ்வா வர்க்கம்  இரண்டாம்  உலக்கப்போரின்  போது  தமது வியாபார வணிகங்களின்  மூலமாக  மேலும்   அதிகமான வளர்ச்சி-யடைந்து   வலுப்பெற்று, தங்களை  ஏகபோக பூர்ஷ்வாவாக மாற்றிக் கொண்டு விட்டனர். 

                                                                                         .....தொடரும்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்