திங்கள், 6 பிப்ரவரி, 2012

நேபாள மண்ணில் அரங்கேறுவது ஆக்கபூர்வ மார்க்சிஸமா? திருத்தல்வாதமா?


சி.பி.ஐ.(மாவோயிஸ்ட்)களின் சிந்தனைக்கு சில கேள்விகள்
நமது இதழில் நாம் ஏற்கனவே எழுதியிருந்த இரு தொடர் கட்டுரைகளில் இன்றைய சமுதாயமாற்ற இயக்கங்கங்கள் எவையும் எந்தவொரு குறிப்பிடதக்க உற்சாகத்தையும் கொடுக்கும் விதத்தில் இல்லாதிருக்கும் நிலையில் நேபாளத்தில் தோன்றியிருக்கக் கூடிய வளர்ச்சிப் போக்குகள் எவ்வாறு இருண்ட சூழ்நிலையில் ஒளிக்கீற்று போல் தோன்றியுள்ளன என்பதை குறிப்பிட்டிருந்தோம்.
அதே சூழ்நிலையில் நாம் வேறொரு விசயத்தையும் கோடிட்டுக் காட்டியிருந்தோம். ஆயுதம் ஏந்திய போராட்டத்தை நிறுத்திவிட்டு ஜனநாயகத்திற்கானப் போராட்டத்தில் தன்னை ஏழு கட்சிக் கூட்டணியில் அங்கமாக்கி கொண்டு செயல்படும் யு.சி.பி.என்.(மாவோயிஸ்ட்)களைத் தவிர பிற அனைத்துக் கட்சிகளும் பெயரளவில் தங்களை எப்படி அழைத்துக் கொண்டாலும் உழைக்கும் வர்க்க அரசு ஒன்று அமைவதை எந்த சூழ்நிலையிலும் ஜீரணிக்க முடியாதவையே. அத்தகைய சூழ்நிலையில் அவை ஏதாவது ஒரு வகையில் உழைக்கும் வர்க்க அரசினை அமைக்கும் பாதையில் மாவோயிஸ்டுகள் முன்னெடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் முட்டுக்கட்டை போட்டுக் கொண்டே இருக்கும்; அவற்றை, அகற்றி அவற்றின் தீய நோக்கத்தை பரந்துபட்ட மக்கள் மத்தியில் அம்பலப்படுத்த இடைவிடாது மக்கள் இயக்கங்களை தட்டியயழுப்ப வேண்டியகட்டாயமும்,அத்தியாவசியமும் யு.சி.பி.என்.(மாவோயிஸ்ட்) களுக்கு தொடர்ந்து இருந்து கொண்டேயிருக்கும்; இதையும் நாம் கோடிட்டுக் காட்டியிருந்தோம்.

ஜனதிபதியின் ஜனநாயக விரோதச் செயல்
நாம் எதிர்பார்த்தது தவறாகப் போகவில்லை. குறுகிய காலத்திலேயே சிவில் நிர்வாகத்தின் மேலாண்மையைக் கட்டுப்படுத்தி ஜனநாயக விரோத முறையில் இராணுவ ஜெனரல் கொத்தவால் பதவிநீக்க விசயத்தில் நேபாள ஜனாதிபதி ராம் பரண் யாதவ் நடந்து கொண்டார். நேபாள பிரதமர் தோழர் பிரசந்தா அவர்கள் கொத்தவாலை அகற்றி இட்ட ஆணையை மீறி அவரது பதவி நீக்கத்தை ஜனாதிபதி ரத்து செய்தார். அவரது இச்செயலுக்கு நேபாளத்தின் யு.சி.பி.என்.(மாவோயிஸ்ட்)கள் தவிர்த்த பிற கட்சிகள், மற்றும் இந்தியா உள்பட நேபாளத்தைச் சுற்றியுள்ள அனைத்து ஏகாதிபத்திய நாடுகளின் ஆதரவு முழுமையாக இருந்தது.
lt;strong>கம்யூனிஸ்ட்கள் ஒருபோதும் பதவிப் பித்தர்களல்ல
இவ்வாறு ஜனாதிபதியின் ஜனநாயக விரோதச் செயல் அரங்கேறிய உடனேயே இந்தப்பதவி ஒரு பொருட்டல்ல என்று அதனைத் துச்சமெனத் தூக்கியயறிந்துவிட்டு தோழர் பிரசந்தா தனது அமைப்பை நாடுதழுவிய அளவிலான பலகட்டப் போராட்டப் பாதையில் இறக்கிவிட்டார். இன்று ஏற்பட்டுள்ள இந்த வளர்ச்சிப் போக்குகளினால் நேபாளத்தின் புதிய அரசியல் சட்டத்தை எழுதி முடிப்பதும் அதனை அமலுக்குக் கொண்டு வருவதும் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளது.இந்நிலையில் அரசியல் சட்டம் அமுலுக்கு வருவதில் ஏற்படவிருக்கும் காலதாமதத்திற்குக் காரணம் யு.சி.பி.என்.(மாவோயிஸ்ட்)களே என்று உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பிற்போக்கு சக்திகளால் தற்போது அங்கு ஆசனத்தில் உருவாக்கப்பட்டு அமர்த்தி வைக்கப்பட்டுள்ள அரசு எந்த நேரமும் பழிபோடக் காத்திருக்கின்றது.
சராசரி முதலாளித்துவ அரசியல் சட்டமாக்கச் சதி
உண்மையிலேயே அக்கட்சிகளின் விருப்பம் தற்போது அமலில் உள்ள யு.சி.பி.என்.(மாவோயிஸ்ட்)களின் முன் முயற்சியால் எழுதப்பட்ட இடைக்கால அரசியல் சட்டத்தின் பல மக்கள் ஆதரவு அம்சங்களை அகற்றி அதனை ஒரு சராசரி முதலாளித்துவ அரசியல் சட்டமாக ஆக்குவதே.
முதலாளித்துவம் இன்று சீரழிந்து நிற்கும் நிலையில் அதன் பெயரளவிலான ஜனநாயகப் போக்கிற்கு உகந்த ஒன்றாக அரசியல் சட்டம் இருப்பதே தங்களுக்கு நல்லது என்ற எண்ணப் போக்கே தற்போது அங்கு ஆட்சியில் உள்ள அனைத்துக் கட்சிகளுக்கும் உள்ளது. இப்போதுள்ள இடைக்கால அரசியல் சட்டத்தின் மக்கள் ஆதரவு ரத்துக்களுக்கு விரோதமான மாற்றங்களைக் கொண்டுவருவதற்கு அவற்றிற்கு கால அவகாசமும் தேவைப்படுகிறது. எனவே அவைதான் உண்மையில் அரசியல் சட்டம் எழுதப்படுவதைத் தாமதிக்க விரும்புமேயன்றி யு.சி.பி.என். (மாவோயிஸ்ட்) களுக்கு அத்தகைய விருப்பம் இருக்க வாய்ப்பில்லை.
உண்மைக்கும் உடைமை வர்க்கங்களுக்கும் வெகுதூரம்
இருந்தாலும் உண்மைக்கும் உடமைவர்க்க சக்திகளுக்கும் உள்ள இடைவெளி இன்றைய காலகட்டத்தில் நிரப்ப முடியாத ஒன்றாக ஆகிவிட்டதால் அவை கூசாமல் யு.சி.பி.என்.(மாவோயிஸ்ட்)கள் மேல் இந்தப் பழி உட்பட எந்தப் பழியையும் போடத் தயங்கப் போவதில்லை.
இந்நிலையில் தான் உரிய சமயத்தில் சரியான அரசியல் சட்டம் நிறைவேற்றப்பட்டு அமலுக்கு வரவேண்டும் என்ற எண்ணத்துடன் யு.சி.பி.என்.(மாவோயிஸ்ட்)களின் தலைமையிலான தேசிய அரசாங்கம் அமைப்பதே இப்போதுள்ள தேக்கநிலையை அதாவது ஜனாதிபதி, கொத்தவால் பதவி நீக்கத்தை ரத்து செய்ததை இடைக்கால நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்ற யு.சி.பி.என். (மாவோயிஸ்ட்)களின் ஜனநாயகபூர்வக் கோரிக்கையை ஏற்க மறுப்பதால் நாடாளுமன்றத்தை நடத்த முடியாமல் இருக்கும் தேக்கநிலையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு உள்ள ஒரே வழி என்பதை முன்வைத்து பலமட்ட மற்றும் பலகட்டங்களிலான போராட்டங்களையும் இயக்கங்களையும் யு.சி.பி.என்.(எம்) நடத்தி வருகிறது.
வழக்கம் போல இந்திய ஆளும் வர்க்கத்தின் கட்டுபாட்டிலுள்ள ஊடகங்களும் பத்திரிக்கைகளும் அத்தகைய மகத்தான இயக்கங்களுக்கு எந்தவொரு முக்கியத்துவமும் தராமல் இருட்டடிப்பு செய்து யு.சி.பி.என். (மாவோயிஸ்ட்)கள் பதவியைவிட்டு விலகிய பின் ஒன்றுமில்லாதவர்களாக ஆகிவிட்டார்கள் என்றதொரு பொய்த் தோற்றத்தை உருவாக்கி அதனைச் சாதுர்யமாக பரவவிட்டு வருகின்றன.
சர்வதேசக் கடமை
இந்நிலையில் உலகெங்கிலும் உள்ள உழைக்கும் வர்க்கக் கட்சிகளும் அமைப்புகளும் மிகுந்த பொறுப்புணர்வுடன் நமது சர்வதேசக் கடமையான நேபாளத்தின் சமுதாயமாற்ற எழுச்சியைப் பாதுகாக்க நம்மால் இயன்ற அனைத்தையும் செய்வது அவசியமாகும். சர்வதேசக் கம்யூனிஸ்ட் அமைப்புகளின் சகோதரத்துவ ஆதரவின் தேவையை உணர்ந்த யு.சி.பி.என்.(மாவோயிஸ்ட்) அமைப்பும் தன்னுடைய தலைவர்களை தங்கள் நாட்டைச் சுற்றியுள்ள இந்தியா போன்ற நாடுகளின் பல பகுதிகளுக்கு அனுப்பி, கூட்டங்கள் நடத்தித் தங்கள் நிலைபாட்டின் நியாயத்தை உணர்த்தி ஆதரவு திரட்டி வருகின்றது.
இந்திய மாவோயிஸ்ட்களின் குற்றச்சாட்டு
ஆனால் துரதிஷ்டவசமாக பல அதிதீவிர கம்யூனிஸ்ட் கட்சிகள் என்று அறியப்படுபவையும் மாவோயிஸப் பாதையைக் கடைபிப்பதாகக் கூறிக்கொள்பவையுமான, இந்திய மண்ணில் செயல்படும் அமைப்புகள் நேபாளப் புரட்சியின் பருண்மையான சூழ்நிலைகளை பொருத்தமாகப் பொறுப்புணர்வுடன் கணிப்பதற்குப் பதிலாக ஒருவகை வறட்டுச் சூத்திரவாதப் போக்கினைக் கடைப்பிடித்து யு.சி.பி.என்.(மாவோயிஸ்ட்)கள் திருத்தல்வாதப் போக்கில் தடம்புரண்டு போய்விட்டனர் என்ற பிரச்சாத்தை முன்னெடுத்துச் செல்கின்றனர்.
வறட்டு வாதத்தை எதிர்த்துப் போராடி மார்க்ஸிசத்தை ஆக்கபூர்வமாக செழுமைப் படுத்துகிறோம் என்ற பெயரில் தடம்புரண்டு போய்விட்டதாக யு.சி.பி.என்.(மாவோயிஸ்ட்)கள் மேல் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே யு.சி.பி.என்.(மாவோயிஸ்ட்)கள் தற்போது எடுத்துள்ள நிலைபாடு உண்மையான முறையில் மார்க்சிசத்தை செழுமைப் படுத்துவதா? அல்லது திருத்தல்வாதப் போக்கில் அவர்கள் காலடி எடுத்து வைத்துள்ளதைக் காட்டுவதா? என்பதைப் பார்ப்பது அவசியமாகும். அதாவது ஆயுதப் போராட்டத்தை நிறுத்தி வைத்துவிட்டு ஏழுகட்சிக் கூட்டணியுடன் இணைந்து செயல்படத் தொடங்கியதே யு.சி.பி.என்.(மாவோயிஸ்ட்)கள் திருத்தல்வாதப் பாதையில் நடைபோடத் தொடங்கியதை வெளிப்படுத்தும் முதல் நடவடிக்கை என்பது இந்தியாவில் முதன்மையான மாவோயிஸ்ட் குழுவாக செயல்படும் சி.பி.ஐ.(மாவோயிஸ்ட்)களின் குற்றச்சாட்டாகும்.
உண்மையில் நேபாளத்தின் முக்கிய நகரங்கள் தவிர அனைத்து கிராமப்புறங்களிலும் தங்களது செல்வாக்கை உறுதி செய்தபின் அப்போது ஏழுகட்சிக் கூட்டணியினால் பலவீனமான முறையில் நடைபெற்றுக் கொண்டிருந்த ஜனநாயகத்திற்கான போராட்டத்தைத் தன்னிடமிருந்த மகத்தான மக்கள் சக்தியுடன் பங்கேற்று, வலிமைப்படுத்தி அதன் மூலம் பயங்கரவாதிகள் என்றும் வன்முறைவாதிகள் என்றும் தங்களைப் பற்றி நகர்ப்புற நடுத்தர உழைக்கும் மக்கள் மத்தியில் பரவியிருந்த எண்ணத்தை மாற்றி அவர்கள் மத்தியில் வலுவுடன் காலூன்ற வேண்டும் என்பதற்காகவே அப்போராட்டத்தை ஆதரிக்கும் நிலையினை யு.சி.பி.என்.(மாவோயிஸ்ட்)கள் எடுத்தனர்.
பதவி ஆசை வழிநடத்தவில்லை
அதன் மூலம் சம்பிரதாய ஜனநாயக உரிமைகளையும், நடைமுறைகளையும் கூட முழுமையாக அதுவரை அனுபவிக்காமல் இருந்த நேபாள மக்கள் அதனை அனுபவிக்கும் விதத்தில் முதல் கட்டமாக ஜனநாயத்திற்கான இயக்கத்தை வெற்றி பெறச் செய்தனர்.யு.சி.பி.என்.(மாவோயிஸ்ட்)களின் உண்மையான நோக்கமும் இறுதி லட்சியமும் ஞானேந்திராவிடம் இருந்து ஆட்சியதிகாரத்தைப் பிடுங்கி அதில் பிரதமராகவும் ஜனதிபதியாகவும் தங்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் அமர வேண்டும் என்பதல்ல. இது அத்தகைய பதவி ஆசை நோக்கங்களை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு அப்போராட்டத்தில் இறங்கிய யு.சி.பி.என்.(எம்) தவிர்த்த அனைத்து கட்சிகளுக்கும் கூடத் தெரியும். தங்களது அத்தகைய பதவி மோகத்திற்கும் மாவோயிஸ்ட்களே முட்டுக் கட்டைகள் என்பதையும் அவர்கள் அறிவர்.
யு.சி.பி.என்.(எம்)யைச் சேர்க்க வேண்டிய கட்டாயம்
இருந்தபோதிலும் அக்கட்சிகள் யு.சி.பி.என். (மாவோயிஸ்ட்) களைப் போராட்டத்தில் இணைத்துக் கொண்டதற்கானக் காரணம் ஒரு குறிப்பிட்ட அளவிற்குப் போராட்டத்தைக் கொண்டு சென்றபின் அதற்குமேல் அதன் தர்க்கரீதியான முடிவிற்கு அதாவது வெற்றிக்கு அதனை வழிநடத்த முடியாதவர்களாக அவர்கள் ஆகிவிட்டதேயாகும். இவ்வாறு ஒரு போராட்டம் இடையில் தொய்வடைந்து அதன் விளைவாக ஞானேந்திராவின் கை மேலோங்கினால் அவரால் தங்களின் மேல் கட்டவிழ்த்து விடப்படும் தாக்குதல்கள் மிகக் கடுமையானதாக இருக்கும் என்பதை அவர்கள் நன்கறிவர். அதை மனதிற்கொண்டே வேறுவழியின்றி மாவோயிஸ்ட்களை இணைத்துக் கொள்ள அக்கட்சிகள் முடிவு செய்தன.
ஏனெனில் ஞானேந்திரா அத்தகைய அடக்கு முறையைக் கட்டவிழ்த்து விட்டால் இந்தியா போன்ற நேபாளத்தைச் சுற்றியுள்ள நாடுகளும் ஜனநாயகத்தை நிலை நாட்டுவதற்காக ஒரு போதும் நேபாள விசயத்தில் தலையிட்டிருக்கப் போவதில்லை. மாறாக அவை தலையிட்டிருந்தால் அதுவும் அவற்றின் ஏகாதிபத்திய நோக்கங்களுக்காகவும் அந்தந்த நாடுகளின் உடமை வர்க்கத்தின் நலன்களை மனதிற்கொண்டதாகவுமே இருந்திருக்கும். இதுவே உழைக்கும் வர்க்கத்தின் வரலாற்று அனுபவம்.
ஜனநாயகத்திற்கான போராட்டத்தில் ஏற்பட்ட திருப்பம்
எனவேதான் வேறுவழியின்றி ஏழு கட்சிக் கூட்டணியில் யு.சி.பி.என்(எம்)ஐ அவர்கள் இணைத்துக் கொண்டனர். இந்த நிர்ப்பந்தங்களினால் மாவோயிஸ்ட்களை கூட்டணியில் இணைத்துக் கொண்ட பின்னர் தான் மன்னராட்சியை எதிர்த்த ஏழுகட்சிக் கூட்டணியின் ஜனநாயகத்திற்கான இயக்கம் புதிய பரிமாணத்தை எடுத்தது.அதன் விளைவாக அடிபணிவது தவிர மன்னருக்கு வேறு வழியேயில்லை என்ற வகையில் ஏற்பட்டத் திருப்பத்தை தனது உளவு அமைப்புகளின் மூலம் அறிந்து கொண்ட பின்னரே ஜனநாயகத்திற்கான போராட்டத்தை ஆதரிப்பதாக இந்தியா போன்ற நாடுகளும் அறிவித்தன.
இந்த ஜனநாயகப் போராட்டத்தில் பங்கெடுத்ததன் மூலம் யு.சி.பி.என்(எம்) அமைப்பு ஏறக்குறைய நேபாளம் முழுவதுமே ஒரு மகத்தான மக்கள் சக்தியாக உருவெடுத்தது. ‘தேர்தல் அரசியல் நமது களம்; எனவே போராட்ட அரசியலில் பெரும் பகுதி தங்களது காலத்தைச் செலவிட்டவர்கள் தங்களுக்குச் சாதகமான தேர்தல் களத்தில் சோபிக்க முடியாது’ என்ற அடிப்படையில் பிற கட்சியினர் கட்டியிருந்த மனக்கோட்டையைத் தகர்த்துத் தவிடுபொடியாக்கி ஒரு பிரமிக்கத்தக்க வெற்றியினை தேர்தல் மூலமும் மாவோயிஸ்ட்கள் சாதித்தனர்.
சீன வழி முன்னிறுத்திய சிக்கல்

இந்திய மாவோயிஸ்ட்கள் கூறுவது போல் இந்தப் பாதையை தேர்ந்தெடுக்காதிருந்திருந்தால், அதாவது யு.சி.பி.என்(எம்) கட்சி கிராமப் புறங்களில் விடுதலைபெற்ற மையங்களைத் தங்களது அடித்தளங்களாக ஏற்படுத்திக் கொண்டு நகர்ப் புறங்களைத் தாக்கிக் கைப்பற்றும் சீனப் புரட்சியின் போர்த்தந்திர அணுகுமுறையை விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டிருந்திருக்க வேண்டும்.
ஆனால் நேபாளத்தில் நிலவும் யதார்த்த சூழ்நிலையில் கிராமப் புறங்களில் தங்களது ஆதிக்கத்தை யு.சி.பி.என்(எம்) நிலைநாட்டிவிட்ட போதிலும், அதைப் போல் அந்நாட்டின் நகர்ப் புறங்களைத் தாக்கி கைப்பற்றி புதிய ஜனநாயகத்தை நிலைநாட்டுவது அத்தனை சுலபம் அல்ல. ஏனெனில் நேபாளத்தின் நகர்ப்புறப் பகுதிகளில் இந்தியர்களின் வியாபார மற்றும் தொழில் நிறுவனங்கள் ஏராளமாக இருக்கின்றன. அவற்றிற்குப் பாதகம் ஏற்படும் என்ற நிலைவந்தால் இந்திய அரசு இராணுவ ரீதியாகக் கூட அந்நாட்டின் உள் விவகாரத்தில் தலையிடத் தயங்காது. மேலும் நேபாள நகர்ப்புற மக்களின் பெரும்பான்மை ஆதரவு இல்லாத நிலையில் அவ்வாறு நகர்ப்புறங்களைத் தாக்கிக் கைப்பற்றி ஆட்சியை நிலைநாட்டுவதும் கடினம்.
ஒரு சூழ்நிலையில் இந்தியா போன்ற நாடுகளின் இராணுவ ரீதியான தலையீடு வந்தால் ஏகோபித்த மக்கள் ஆதரவின்றி அதனை எதிர்கொண்டு முறியடிப்பதும் கடினம். மேலும் பிற நாடுகளின் தலையீடைத் தட்டிக் கேட்கவல்ல சோசலிச முகாம் அல்லது சோசலிச நாடுகள் என்று எவையுமே இன்றில்லை. இந்தச் சூழ்நிலையில் யதார்த்தத்தில் கிராமப்புறங்களில் உள்ள தங்களது செல்வாக்குப் பகுதிகளிலிருந்து நகர்ப்புறங்களைத் தாக்கிக் கைப்பற்றுவது என்ற மாவோவின் சீன யுக்தி நேபாளத்தின் சூழ்நிலைக்கு ஒத்துவராத ஒன்று.
மேலும் பரந்துபட்ட நகர்ப்புற மக்கள் ஆதரவின்றி அப்படியே தாக்கிக் கைப்பற்றினாலும் வெற்றியைப் பாதுகாத்துப் பராமரிப்பதும் மிகமிகக் கடினம். அந்நிலையில் நகர்ப்புறங்களைக் கைப்பற்றி நேபாளம் முழுவதிலும் தங்களது ஆட்சியை நிறுவ முடியாவிட்டால் கிராமப் புறங்களில் தாங்கள் ஏற்படுத்தியுள்ள விடுதலைபெற்ற பகுதிகளை யு.சி.பி.என்(எம்) அமைப்பினர் அப்படியே தொடர்ச்சியாகத் தங்களது கட்டுப்பாட்டில் உள்ளவைகளாக மிகவும் சிரமப்பட்டு பலகாலம் பராமரிக்க வேண்டிவரும். அதையும் தாண்டி ஒருபடி மேலே சென்று அப்பகுதிகள் அனைத்தையும் ஒன்று சேர்த்துத் துண்டாடி ஒரு தனி அரசை அவர்கள் அமைத்தால் கூட அதனை அங்கீகரிக்க இன்றைய நிலையில் எந்தவொரு நாடும் முன்வராது.
உலகத் தொடர்புகளும் தொழில்மயமும் இன்றி மிகவும் பின்தங்கிய பகுதியாக பல காலம் அது தொடர்ந்து கொண்டிருக்க வேண்டிய நிலை ஏற்படும்.
இந்த நிலையை மாற்றி இன்று நேபாளம் முழுவதும் மறுக்கமுடியாததொரு சக்தியாக தனது மாறுபட்ட அணுகுமுறையினால் யு.சி.பி.என்.(மாவோயிஸ்ட்)கள் ஆகியிருப்பது திருத்தல்வாதப் போக்கா? அல்லது ஒரு சூழ்நிலையைச் சரியாகக் கணித்து அச்சூழ்நிலையைப் பயன்படுத்தும் வகையில் தங்களது வழிமுறைகளை வகுத்தெடுத்து அதன் மூலம் உழைக்கும் வர்க்கத்தின் அமைப்பு ரீதியான வளர்ச்சிக்கும் உழைக்கும் வர்க்கக் கருத்துக் கருவூலத்திற்கும் செய்துள்ள வழங்கலா?
மக்கள் நிர்வாகம் சாத்தியமானது எவ்வாறு
அடுத்த படியாக யு.சி.பி.என்.(மாவோயிஸ்ட்)கள் தாங்கள் கிராமப்புறங்களில் ஏற்படுத்தியிருந்த மக்களின் நிர்வாகத்தை ஏழுகட்சி ஒப்பந்தத்தின் படி கலைத்தது தற்கொலைக்குச் சமமானதும் திருத்தல்வாதப் பாதையில் அவர்கள் எடுத்து வைத்த அடுத்த அடியுமாகும் என்பது இந்திய மாவோயிஸ்ட்களின் அடுத்த குற்றச்சாட்டு.
இவர்கள் ஒன்றைச் சிந்தித்துப் பார்த்தால் பல உண்மைகளை அறிய முடிந்தவர்களாக இருப்பார்கள். அதாவது ஆயுதம் தாங்கிய போராட்டத்தைத் தொடங்கிய 13 ஆண்டு காலத்திலேயே மிகப் பெரும்பான்மையான பகுதிகளில் மக்கள் நிர்வாகத்தை யு.சி.பி.என்.(மாவோயிஸ்ட்) அமைப்பினர் எப்படி ஏற்படுத்த முடிந்தது? என்ற கேள்வியையும் அதைக் காட்டிலும் அதிக காலம் அவர்கள் கூறும் அதே மாவோயிஸக் கண்ணோட்டத்தைக் கூறிக் கொண்டு செயல்படும் சி.பி.ஐ.(மாவோயிஸ்ட்)கள் அவர்கள் கொண்டுவந்துள்ளது போன்ற மக்கள் நிர்வாகத்தை தாங்கள் செயல்படும் இந்திய வனப் பகுதிகளில் கூட ஏன் பிசிறின்றி செய்ய முடியவில்லை என்ற கேள்வியையும் ஒருமுறைக்குப் பலமுறை தமக்குத்தாமே கேட்கவேண்டும். அப்போது அதற்கான காரணம் அவர்களுக்குப் புரியும்.
யு.சி.பி.என்.(மாவோயிஸ்ட்)கள் அதனைச் செய்ய முடிந்ததற்கான காரணம் ஒன்று நேபாளச் சூழ்நிலையையும், அடுத்து தங்களது பலத்தையும்,எதிரியின் பலவீனத்தையும் மிகச் சரியாகக் கணித்ததாகும். நேபாளத்தின் ஏறக்குறைய மூன்றில் இரண்டுபங்குப் பகுதிகள் இதைப் போன்ற கிராமப்புறப் பகுதிகள் தான். அங்குள்ள நிலங்களைப் பெயரளவில் அவற்றின் உரிமையாளர்களாக இருக்கக் கூடியவர்கள் தாங்களே சென்று அதிக விவசாயத் தொழிலாளர் உதவியின்றி நவீன முறைகளைப் பயன்படுத்தி விவசாயம் செய்வது இந்தியாவில் அதைச் செய்வதைப் போல் அத்தனை எளிதல்ல.
ஒன்று நவீன விவசாயம் மேற்கொள்ள உழவடை எந்திரங்கள் வாங்க மூலதனத் திரட்சி வேண்டும். அடுத்து அவ்வாறு மிகச் சிரமப்பட்டுச் செய்தாலும் அவ்விவசாய விளைபொருட்களுக்குக் கட்டுபடியான விலை வேண்டும். இல்லாவிடில் லாபகரமாக விவசாயத் தொழிலை நடத்த முடியாது. எனவே அங்குள்ள நிலையில் அந்நிலவுடைமையாளர்கள் முழுக்க முழுக்க அந்தந்தப் பகுதி மக்களைக் கொண்டு மட்டுமே விவசாயம் செய்ய முடியும்.
எனவே அந்த நிலத்தில் கைபடாத பலரே பெயரளவில் அவற்றிற்கு உரிமையாளர்களாக இருக்கும் நிலை நிலவுகிறது. அடுத்து சராசரி ஜனநாயக உரிமைகளைக் கூட அனுபவித்திராத அந்த மூன்றில் இரண்டு பங்கிற்கு மேலான கிராமப்புற மக்களுக்கு முதலாளித்துவ ஜனநாயக உரிமைகள் குறித்த பிரமையும், சபலமும், இருக்கவில்லை. அவ்வாறு சிறிதளவு இருந்தாலும் அதனைத் தர்க்கப்பூர்வ வாதங்கள் மூலமும், புரட்சிகர நடைமுறை அனுபவங்களை எடுத்துரைத்தும் எளிதில் களைய முடியும். அடிப்படையில் அங்கிருக்கும் கொஞ்ச நஞ்ச அரசு நிர்வாகத்தையும், அது யாருக்காக இருக்கிறது என்பதையும் அதுகுறித்த பிரமையில்லாத மக்களிடம் அம்பலப்படுத்தித் தனிமைப் படுத்துவது மிகவும் சுலபம்.
எனவே மாவோ சீனத்தில் கடைபிடித்த யுக்தியின் ஒரு பகுதியாக இருந்த கிராமப் புறங்களில் விடுதலை பெற்ற பகுதிகளை அமைப்பது என்பதைச் செய்வது நாட்டின் மிகப் பெரும்பாலான பகுதிகளைப் பொறுத்தவரை சாத்தியமான ஒன்றாகவே இருந்தது.
மாறுபட்ட இந்தியச் சூழ்நிலை
ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை சி.பி.ஐ.(மாவோயிஸ்ட்)கள் நிலை கொண்டுள்ள பகுதி இந்தியாவின் ஒட்டுமொத்த நிலப் பகுதியில் 10 சதவீதத்திற்கும் குறைவானதாகவே இருக்கிறது. முழுக்க முழுக்க வனங்களாக இருக்கும் அப்பகுதியில் மக்கட்தொகை விகிதம் இன்னும் குறைவானதாக உள்ளது. மேலும் வனப் பகுதிகளாக இருந்தாலும் நேபாளத்தில் இருப்பதைக் காட்டிலும் சாலை வசதிகள் மேலான விதத்தில் இப்பகுதிகளில் உள்ளன.
இந்தியாவின் இராணுவ மற்றும் காவல்துறையின் வலிமையோ நேபாள இராணுவம் மற்றும் காவல்துறையின் வலிமையோடு ஒப்பிடுகையில் எண்ணிப்பார்க்க முடியாத அளவு இராட்சதத் தன்மை வாய்ந்தது. அதனால் இந்த வனப் பகுதிகளில் ஒரு அசைக்க முடியாத நிர்வாகத்தைத் தன்னால் நிறுவ முடியாவிட்டாலும், மாவோயிஸ்ட்கள் மக்கள் நிர்வாகத்தை ஏற்படுத்துவதைச் சாத்தியமற்றதாக்க இந்திய அரசால் முடிகிறது.
மேலும் நேபாளத்தில் மாவோயிஸ்ட்கள் செய்ய முடிந்தது போல் ஒரு ஒருமித்த மனநிலையை கிராமப்புற மக்கள் அனைவரிடமும் இந்திய மாவோயிஸ்ட்களால் ஏற்படுத்த முடியவில்லை. குறைந்தபட்சம் வனப் பகுதி மக்கள் அனைவரிடமும் கூட அதனைக் கொண்டுவர முடியவில்லை.
அதனால் தான் இந்து மதவாதத்தை மதவாத சக்திகள் இந்து மலைவாழ் மக்களிடம் கிறித்தவ மலைவாழ் மக்களுக்கு எதிராகத் தூண்ட முடிகிறது. இடஒதுக்கீட்டுக் கண்ணோட்டம் மலைவாழ் மக்களையே இரு பிரிவாக்கி ஒருவரை மற்றொருவர் எதிரியாகப் பாவிக்கும், ஒரு பிரிவினருக்கெதிராக மற்றொரு பிரிவினர் கொலை வெறித் தாக்குதல்களில் ஈடுபடும் சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் மலைவாழ் கிராமப் புற மக்களின் பிரச்னைகளை ஒட்டு மொத்த நேபாள மக்களின் நலனோடு ஒருங்கிணைத்து நேபாள மாவோயிஸ்ட்கள் செயல்படுவது போல் இந்திய மாவோயிஸ்ட்களால் செய்ய முடியவில்லை. அதன் காரணமாகவே மலைவாழ் மக்களின் மொழி, கலாச்சாரம், மதம் சார்ந்த மூட நம்பிக்கைகள் ஆகிய அனைத்தையும் உயர்வுபடத் தூக்கிப் பிடித்தே இந்திய மாவோயிஸ்ட்களால் அவர்களைத் தங்களோடு நிறுத்த முடிகிறது.

ஒட்டுமொத்த இந்திய மக்களின் நலனோடு இணைக்க முடியாத போக்கு
ஒட்டு மொத்த இந்திய மக்களின் நலனோடு ஒருங்கிணைத்து அவர்களின் அப்போராட்டத்தைக் கொண்டு செல்ல முடியவில்லை. இதனால் ஒரு வகையான மீள முடியாத சிக்கலில் இந்திய மாவோயிஸ்ட்கள் சிக்கியுள்ளனர். அதாவது வனங்களைத் தங்களது செல்வாக்குப் பகுதிகளாக எந்த விலை கொடுத்தாவது பராமரிக்கும் ஒரு கட்டாயம் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் சாலை வசதி உட்பட எந்த நவீன வசதிகளும் இல்லாத பின்தங்கிய பகுதியாகவே அதனைப் பராமரித்து வைத்திருக்க வேண்டிய ஒரு கட்டாய நிலைக்கு அவர்கள் தள்ளப் பட்டுள்ளனர்.
ஒரு வலிமை மிக்க இராணுவத்தை எதிர் கொண்டு அப்பகுதியை அவ்வாறு பராமரிக்க வேண்டியுள்ளதால் ஆயுதந்தாங்கிச் செயல்படும் போக்கிற்கு, மக்கள் இயக்கத்திற்குக் கொடுப்பதைக் காட்டிலும் பல மடங்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய கட்டாயத்தை அவர்கள் தேர்ந்தெடுத்துள்ள தவறான அடிப்படை அரசியல் வழி உருவாக்கியுள்ளது. அதற்காக ஆயுதம் வாங்குவது போன்றவற்றிற்காகத் தங்களது நிதி ஆதாரங்களை எப்படியாவது பராமரிக்க வேண்டிய நிலை அவர்களுக்கு ஏற்படுகிறது. அதற்கான நிதியாதாரத்தைத் திரட்டுவதற்காக நியாயப்படுத்த முடியாத வழி முறைகளையும் அவர்கள் பின்பற்ற நேர்கிறது. அது பல சமயங்களில் அவர்களைப் பயங்கரவாதிகள் என அரசு நிர்வாகம் சித்தரிப்பதற்கு இடம் கொடுக்கிறது.
இந்தியாவின் பரந்துபட்ட வனம் தவிர்த்த பகுதிகளில் வாழும் மக்கள் குறித்த, தர்க்க ரீதியாக நிறுவி அணிதிரட்ட முடிந்த திட்டத்தையும் அதனை மையமாகக் கொண்ட அமைப்புகளையும் இந்திய மாவோயிஸ்ட்கள் கொண்டிருக்கவில்லை. அது அவர்கள் போராட்டத்தை இலக்கற்றதாக்கி, அதன் தொண்டர்களிடையே அவ்வப்போது விரக்தி மனநிலையை ஏற்படுத்துகிறது. மிகப் பெரும்பான்மை மக்களனைவரையும் தங்களது ஆதரவாளர்களாக மாற்றும் குறிக்கோளை மையமாகக் கொண்டு நம்பிக்கையுணர்வுடன் நேபாளத்தில் யு.சி.பி.என்.(மாவோயிஸ்ட்)கள் ஏற்படுத்தியதைப் போன்ற மக்கள் நிர்வாகங்களை சி.பி.ஐ.(மாவோயிஸ்ட்)கள் இந்தியாவில் ஏற்படுத்துவதற்கு இந்தச் சூழ்நிலையே குறுக்கே நிற்கிறது.
இவையே நேபாளத்தில் மக்கள் நிர்வாகத்தை யு.சி.பி.என்.(மாவோயிஸ்ட்)கள் ஏற்படுத்த முடிந்ததற்கும் சி.பி.ஐ.(மாவோயிஸ்ட்)கள் அவர்கள் நிலை கொண்டுள்ள பகுதிகளில் அதனை ஏற்படுத்த முடியாததற்குமான வெளிப்படையான காரணங்களாகும்.
பூகோள ரீதியான சாதக அம்சம்
மேலும் இராணுவமோ காவல்துறையோ அத்தனை எளிதில் அணுகமுடியாத கரடுமுரடான ஏற்ற இறக்கங்கள் கொண்ட மலையகப் பகுதிகள் உள்ள ஒரு சூழல் இருப்பது அங்கு யு.சி.பி.என்.(மாவோயிஸ்ட்) அமைப்பினர் மக்கள் நிர்வாகத்தை ஏற்படுத்த முடிந்ததற்கு பூகோள ரீதியில் உதவும் மற்றொரு முக்கியக் காரணமாகும். அதனால் தான் யு.சி.பி.என்.(மாவோயிஸ்ட்)கள் போக்குவரத்து வசதிகளை மையமாக வைத்து ஒரு வகையில் நேபாளம் இந்தியாவை விடப் பரந்தநாடு என்று கூறுகின்றனர்.
ஏனெனில் இந்தியாவில் கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரைக்கும் புகைவண்டியில் சென்றால் கூட இரண்டு நாட்களில் சென்றுவிட முடியும். ஆனால் நேபாளத்தின் ஒரு மூலையிலிருந்து மற்றொரு மூலைக்குச் செல்வதற்கு மாதக் கணக்கில் ஆகும். எனவே இந்த பூகோளரீதியான சாதகத்தையும் பயன்படுத்தியே யு.சி.பி.என்.(மாவோயிஸ்ட்) அமைப்பினரால் வெற்றிகரமாக மக்கள் நிர்வாகத்தை கிராமப் பகுதிகளில் ஏற்படுத்த முடிந்தது.
மக்கள் நிர்வாகம் மணல் வீடல்ல
இவ்வாறு ஏற்படுத்தப்பட்ட உண்மையான ஒரு மக்கள் நிர்வாகத்தை ஏற்படுத்துவதோ அவ்வாறு ஏற்பட்டபின் அதனைக் கலைத்து விடுவதோ ஒரு நாளிரவில் நடைபெறக் கூடிய காரியமல்ல. உழைக்கும் மக்களை அணிதிரட்டி அவர்களின் எதிரிகளை அடையாளம் காட்டி, அவர்களை எதிர்த்துப் போராடி அங்கு இருந்த நிலங்களை அனைவருக்கும் பொதுவானதாக்கி அங்குள்ள மக்களுக்கான கல்வி உட்பட அனைத்துத் துறை சார்ந்த நடவடிக்கைகளையும் மேற்கொண்டு உருவாக்கப்பட்ட நிர்வாகம் நினைத்த மாத்திரத்தில் கலைத்துவிடக் கூடியதல்ல. உழைக்கும் மக்கள் தங்களுக்குச் சாதகமான தங்களது நிர்வாகம் எவ்வாறு நடக்க வேண்டும் என்பதை அனுபவப் பூர்வமாக அறிந்து அதனை நேபாளத்தில் நடைபெற்ற விதத்தில் நடைமுறைப் படுத்திவிட்டால் அதன் கூறுகளும் சுவடுகளும் அங்குள்ள மக்கள் ஒவ்வொருவரிடமும் இருக்கும்;அவர்களை அணிதிரட்டி வழிகாட்டிவரும் ஊழியர்களின் ஒவ்வொரு அணுவிலும் இருக்கும்.
அந்த அனுபவத்தையும், அந்த உணர்வையும் வைத்து நினைத்த மாத்திரத்தில் மக்கள் நிர்வாகத்தை ஏற்படுத்தும் திறனையும் அவர்களிடமிருந்து அகற்றிவிட முடியாது. எனவே மக்கள் நிர்வாகங்களைக் களைக்கிறோம் என்பது பெயரலவிலான ஒன்றே தவிர முழுமையாக நிறைவேற்றப்படக் கூடிய ஒன்றல்ல. இது ஏழுகட்சிக் கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளுக்கும் கூட நன்றாகத் தெரியும். இருந்தும் அதனை அவர்கள் அத்தனை தூரம் வலியுறுத்தி அதைச் செய்யவில்லை என்று பெருமளவு குற்றம் சாட்டாததற்குக் காரணம் அதனை வலியுறுத்தி அது முழுமையாக நடந்தால் தான் ஒப்பந்தம் என்று கூறுமளவிற்கு மக்கள் செல்வாக்கு கொண்ட திராணியுள்ளவர்களாக அவர்கள் இருக்கவில்லை என்பதே.
மேலும் இன்னும் கம்யூனிசக் கபடவேடத்துடன் அலையும் யு.எம்.எல்(மார்க்ஸிஸ்ட் லெனினிஸ்ட்) கட்சியினருக்கும் மக்கள் நிர்வாகத்தை முற்றாகக் கலைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைப்பதில் சிக்கல் உள்ளது. ஏனெனில் ஆங்காங்கே பெயரளவிற்கு கிராமங்களில் இருக்கக் கூடிய சிற்சில தங்களது உழைக்கும் வர்க்க ஆதரவாளர்களைக் கூட இதனால் அவர்கள் இழக்க நேரிடும்.
தலை நரைத்துவிட்ட தத்துவ நண்பன்

இக்காரணங்களாலேயே இவ்விசயத்தை இக்கட்சிகள் பெரிதுபடுத்தாமல் இருக்கின்றன. எனவே ஒப்பந்தத்தின் சரத்துக்களை மட்டும் வைத்து மக்கள் நிர்வாகத்தைக் கலைத்துவிட்டார்கள் என்று அபயக்குரல் எழுப்பும் சி.பி.ஐ.(மாவோயிஸ்ட்)களுக்கு பதிலாக லெனின் முன்வைத்த கதேயின் ஒரு மேற்கோளைத்தான் கூற வேண்டியிருக்கும். அதாவது ‘எனது தத்துவ நண்பனே தத்துவம் பேசிப்பேசி உன்தலை நரைத்து விட்டது. ஆனால் வாழ்க்கை என்னும் நிரந்தர விருச்சத்தின் பசுமை என்றும் மாறாதது’ என்ற அவரது ஏப்ரல் ஆய்வுரைகளின் வரிகளையே மீண்டும் வலியுறுத்திக் கூற வேண்டியிருக்கும்.
சிலி, இந்தோனேசிய அனுபவங்கள்
மேலும் இந்திய மாவோயிஸ்ட்கள் முன்வைக்கும் இன்னொரு கேள்வி இந்தப் பாராளுமன்றங்களில் பங்கேற்பது, அதற்கு முன் நிபந்தனையாக மக்கள் விடுதலை இராணுவத்தையும் ஆயுதங்களையும் ஐ.நா.பாதுகாப்பில் ஒப்படைத்து மக்கள் நிர்வாகத்தைக் கலைப்பது ஆகியவை இந்தோனேசியா, சிலி போன்ற நாடுகளில் அங்கிருந்த கம்யூனிஸ்ட் இடதுசாரி அமைப்புகள் பாராளுமன்ற வாதத்தில் நம்பிக்கை வைக்கும் நிலை எடுத்து ஏராளமான கம்யூனிஸ்ட்கள் கொன்று குவிக்கப் படுவதற்கு வழி வகுத்தது போன்றதாகாதா? என்பதாகும்.
முதற்கண் சிலியில் தேர்தல் மூலமாக ஆட்சிக்கு வந்தபின் அதிபர் அலண்டே எடுத்த அமெரிக்க செப்புச் சுரங்கங்களை தேசிய மயமாக்குவது போன்ற நடவடிக்கைகளுக்கு எதிராக உள்நாட்டு பிற்போக்கு சக்திகளுடன் கைகோர்த்த அமெரிக்கத் தாக்குதல்கள் வரும் என்பதனை அவரது ஆதரவாளர்களில் பலர் எதிர்பார்த்தனர்.
அதனை எதிர் கொள்ளப் பயிற்சி பெற்ற தொண்டர் படையினை உருவாக்க வேண்டும் என அவர்கள் அலண்டேயை வலியுறுத்தவும் செய்தனர். ஆனால் முதலாளித்துவ நாடாளுமன்ற ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்டு தற்போதுள்ள நாடாளுமன்ற மரபுகள் மூலமே மாற்றங்களைக் கொண்டுவந்து காட்டுவேன் என்று கூறி அவர் அவற்றிற்குச் செவிசாய்க்க மறுத்துவிட்டார். அதனால் அத்தகைய தாக்குதல் வெற்றிபெற இடம் கொடுத்தார். இந்தோனேசியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் எய்டிட் அவர்களோ குருச்சேவினுடைய கண்ணோட்டமான பாராளுமன்ற வழிமுறையில் சமூகமாற்றத்தைக் கொண்டுவருவோம் என்ற நப்பாசயை முழுக்க முழுக்க மனதில் நிரப்பி ஆளும் வர்க்கத்தின் பலத்தையும் சோசலிச சக்திகளை ஒடுக்கவேண்டும் என்ற அதன் வெறியையும் அலட்சியம் செய்தார்.
நேபாள மக்கள் வாக்களிக்க மட்டும் தயாரானவர்களல்ல
மேலும் சிலி மற்றும் இந்தோனேசிய நாடுகளின் மக்கள் அன்று சோசலிசக் கண்ணோட்டங்களுக்கு மக்களிடம் இருந்த மேலோட்டமான வரவேற்பின் காரணமாகக் கவரப்பட்டு பெரும்பாலும் கம்யூனிஸ்ட்களுக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு மட்டுமே தயாராக இருந்தவர்கள். எனவே ஆளும் வர்க்க அடக்குமுறை எந்திரங்களின் தாக்குதல்கள் அம்மக்கள் எதிர்பாராதவை.
ஆனால் யு.சி.பி.என்.(மாவோயிஸ்ட்)களோ ஆயுதம் தாங்கிய கிளர்ச்சியை நடத்தி அதன் மூலம் பூகோள ரீதியாகப் பல விதங்களில் பிற நாடுகளில் இருந்து வேறுபட்ட நேபாளச் சூழ்நிலையை பயன்படுத்தி அங்கு கிராமப் பகுதிகளில் மக்கள் நிர்வாகங்களை நிலைநிறுத்தி ஜனநாயகத்திற்கான இயக்கம் தோன்றிய போது அதில் தங்களை உரிய மரியாதை மற்றும் கெளரவத்துடன் இணைத்துக் கொண்டு அதனால் நகர்ப்புற மக்கள் மத்தியில் பொதுவாகவும் நகர்ப்புற உழைக்கும் மக்கள் மத்தியில் ஆழமாகவும் வேரூன்றி, அந்தப் பின்னணியில் வந்த தேர்தலில் வெற்றியை எப்படி ஸ்தாபன ரீதியாக வென்றெடுப்பது என்பதையும் அறிந்து ஸ்தாபன ரீதியான நடவடிக்கைகள் மூலம் அந்தத் தேர்தல் வெற்றியையும் சாதித்தவர்கள்.
அது மட்டுமல்ல பதவிக்கு வந்தபின் பதவிமோகம் மற்றும் பதவியினால் கிட்டும் ஆடம்பர வாழ்க்கை ஆகியவற்றினால் சீரழிந்து எப்படியேனும் பதவியில் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும் என்று எண்ணாமல் சிவில் நிர்வாகத்தின் மேலாதிக்கம் பாதிப்பிற்கு ஆளான வேளையில் பதவியையும் துச்சமாகத் தூக்கியயறிந்து மக்கள் சக்தியைத் தட்டியயழுப்பி அத்துடன் ஐக்கியமாகி நிற்பவர்கள். மக்கள் இயக்கங்களைத் தட்டியயழுப்புவதின் பங்கும் பகுதியுமே நாடாளுமன்ற நடவடிக்கைகள் என்ற கருத்தினையும், திடமான திட்டத்தினையும் கொண்ட அவர்கள் மக்களைத் திரட்டி எந்த அந்நிய உள்நாட்டுப் பிற்போக்கு சக்திகளின் தாக்குதலையும் சவாலையும் இனம் கண்டு முறியடிக்கும் வலிமையும் திறமையும் வாய்ந்தவர்கள்.
பிரசந்தா அலண்டேயுமல்ல;எய்டிட் பிரசந்தாவுமல்ல
எனவே சிலி, இந்தோனேசிய அனுபவங்கள் அப்படியே நேபாள மண்ணில் இடம் பெறுமளவிற்கு அனுமதிக்க தோழர் பிரசந்தா, அலண்டேயோ அல்லது எய்டிட்டோ அல்ல;அவர் தலைமை தாங்கும் அமைப்பும் முதலாளித்துவ ஜனநாயகப் பிரமை எதையும் கொண்ட அமைப்புமல்ல.
எனவே சி.பி.ஐ.(மாவோயிஸ்ட்)களின் அச்சம் அடிப்படையில்லாதது. இந்நிலையில் நாம் பொறுப்புடனும் ஆக்கபூர்வமாகவும் சிந்தித்துப் பார்த்தால் இன்றைய தங்களின் ஆதரவுக்கென வருவதற்கு எந்த சர்வதேச சக்தியும் இல்லாத நிலையில், இருக்கின்றப் புறச் சூழ்நிலையைச் சரியாகக் கணித்து, தருணங்களை முறையாகக் கையாண்டு, இன்று சமுதாய மாற்றம் குறித்து நிலவும் காரிருளில் ஒரு சிறு ஒளிக்கீற்றாக வளர்ந்து மலர்ந்து கொண்டிருக்கும் நேபாள யு.சி.பி.என்(மாவோயிஸ்ட்) கட்சியையும் அது முன்னெடுத்துள்ள பாதையையும் இத்தனை கடுமையாக இந்திய மாவோயிஸ்ட்கள் விமர்சிப்பதற்குக் காரணம் என்ன என்ற கவலை நமக்கு ஏற்படுகிறது.
உண்மைக் காரணம்
உண்மையில் அதற்கான காரணம் யு.சி.பி.என்.(மாவோயிஸ்ட்)கள் வகுத்துள்ள வழியும் நேபாளத்தில் ஏற்படுத்தியுள்ள வளர்ச்சியும் பல கேள்விகளை இந்திய மாவோயிஸ்ட் தொண்டர்கள் மற்றும் அனுதாபிகள் முன் நிறுத்தும் வாய்ப்பினைக் கொண்டிருப்பதே என்பதை அறிய முடியும். ஏன் அவர்களைப் போல் தருணங்களைச் சரியாகப் பயன்படுத்தி ஆயுதம் தாங்கிய போராட்டத்தை ஒட்டுமொத்த வழி முறையாகக் கொண்டிராமல் மக்கள் ஆதரவைத் திரட்டும் வண்ணம் இயக்கங்களை முன்னெடுத்து நாமும் செயல் படக் கூடாது?

10 சதவிகித பழங்குடி மக்களோடு மட்டும் முடங்கிவிட்ட செயல்பாடுகளை ஆக்கபூர்வமாக விரிவாக்கி இந்திய மண்ணிற்கு அறவே பொருந்திவராத விடுதலை பெற்ற மையங்களை ஏற்படுத்தி நகர்ப்புறங்களைத் தாக்கிக் கைப்பற்ற வேண்டும் என்ற வறட்டுச் சூத்திர வாதத்தை தூக்கியயறிந்துவிட்டு ஏன் நாம் யு.சி.பி.என் (மாவோயிஸ்ட்)கள் வழியிலிருந்து படிப்பினை எடுத்து செயல் படக்கூடாது? என்று தொண்டர்கள் மத்தியில் எழ வாய்ப்புள்ள அடிப்படையான கேள்விகளுக்குப் பதிலாகவே வறட்டுச் சூத்திரத் தன்மை வாய்ந்த இந்த வாதங்களை அக்கேள்விகள் எழும் முன்பே தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சி.பி.ஐ.(மாவோயிஸ்ட்) கள் முன்வைத்துள்ளனர்.
புறச் சூழ்நிலைக்கு புரட்சியாளர்கள் இரையாவதில்லை

மேலும் அவர்கள் கூறுவது போல் பாராளுமன்றப் பாதையும் பதவியுடன் இணைந்துள்ள ஆடம்பரங்களும், படாடோபங்களும் யு.சி.பி.என்(மாவோயிஸ்ட்)களை சீரழிக்கும் என்றால் காடுகளில் பீடி சுற்றும் இலை சேகரிக்க வருவோர், மரம் வெட்டும் ஒப்பந்தக்காரர்கள், பணக்கார விவசாயிகள், தேர்தல் பிரச்சாரத்திற்கு வரும் வேட்பாளர்கள் ஆகியோரிடமிருந்து பெறப்படும் பணமும் கூட ஒரு வகையான ஆடம்பர மோகத்தைத் தூண்டக் கூடிய தன்மை கொண்டது தானே?
அது சி.பி.ஐ.(மாவோயிஸ்ட்)களையும் கூட ஆடம்பர மோகத்திற்கும், சபலத்திற்கும் இட்டுச் செல்ல வல்லதுதானே. இத்தகைய கேள்விகளை நடுநிலை மனநிலையுள்ள எவரும் கேட்க முடியுமல்லவா?

ஆனால் உண்மை அதுவல்ல எந்தவொரு புறச் சூழ்நிலையும் அதுவாகவே லட்சிய வேட்கை கொண்ட மனிதர்களை எந்திரகதியில் சபலத்திற்கு ஆளாக்கிவிட முடியாது. அவர்களது பொதுநல வேட்கையும், பண்புகளும் எந்த உலோகத்தால் புடம்போடப் பட்டிருக்கின்றன என்பதே அவர்கள் சபலத்திற்கு ஆட்படக் கூடியவர்களா இல்லையா என்பதைத் தீர்மானிக்க வல்லதேயன்றி வெறும் புறச் சூழ்நிலைகள் மட்டுமல்ல.
ஆயுதம் எடுப்பது மட்டுமே போராட்டம் என்றாகிவிட்டால்
மேலும் சி.பி.ஐ.(மாவோயிஸ்ட்)களிடம் இத்தகைய அச்சம் தோன்றியுள்ளதற்கு வேறொரு காரணமும் உள்ளது. அதாவது மக்கள் இயக்கங்கள் இன்றி ஆயுதம் தாங்கிய செயல்பாடே ஓரே செயல்பாடு என்று ஆகிவிட்டால் அது சிவில் சமூகத்தில் நிலவும் பல்வேறு யதார்த்த நிலைகளை பார்க்க முடியாதவர்களாகவும் அவ்வாறு ஈடுபடுபவர்களை ஆக்கிவிடும். அப்படிப்பட்ட ஒரு மனநிலையின் பாதிப்பின் காரணமாகவும் கூட மக்கள் விடுதலைப் படை ஐ.நா. விடம் ஒப்படைக்கப் படுவதால் ‘முழுமையாக மக்கள் நிராயுதபாணி ஆகிவிடுவர். மக்களின் உண்மையான சக்தியே மக்கள் விடுதலைப் படையும் அவர்களிடம் உள்ள ஆயுதங்களும் மட்டுமே தான்’ என்ற எந்திரமய சிந்தனைப் போக்கு சி.பி.ஐ.(மாவோயிஸ்ட்)களிடம் ஏற்பட வாய்ப்புள்ளது.
மார்க்சியச் சித்தாந்தத்தை அந்நாட்டின் புறச் சூழ்நிலைகளுக்கு உகந்த வகையில் செழுமைப் படுத்தி அந்நாட்டின் உழைக்கும் மக்கள் விடுதலை குறித்த அனைத்துக் கேள்விகளுக்கும் எவ்விதப் பிசிறுமின்றி தர்க்க ரீதியாக விடையளித்து அதனடிப்படையில் நடைபெற்ற மக்கள் இயக்கங்களின் வெற்றிகள் மூலம் உருக்குப் போன்ற மனோதிடத்தையும், செறிந்த அனுபவங்களையும் கொண்டவர்களாக உருவாக்கப்பட்டுள்ள யு.சி.பி.என்(மாவோயிஸ்ட்)ன் நகர் மற்றும் கிராமப்புறப் பகுதிகளின் தொண்டர்களும் ஆதரவாளர்களும் ஒப்படைக்கப்பட்ட மக்கள் விடுதலைப் படையினரைப் போல் பல மடங்கு வீரர்களாக உருவெடுக்கக் கூடியவர்கள் என்பதை ஆயுதந்தாங்கிய போராட்டத்தை மட்டுமே முழுக்க முழுக்க நம்பியிருக்கக் கூடிய, தாங்கள் நிலை கொண்டிருக்கும் மலைவாழ் மக்கட்பகுதி தவிர்த்த வேறு மக்களிடையே பெருமளவு தொடர்புகள் இல்லாத சி.பி.ஐ.(மாவோயிஸ்ட்)களால் உள்ளார்ந்து உணர முடியாது.
இத்தகைய எத்தனை போதாமைகள் இருந்தாலும் நேபாளப் புரட்சியின் நலனை மனதிற்கொண்டு ஒன்றை மட்டுமாவது சி.பி.ஐ.(மாவோயிஸ்ட்)கள் கணக்கிலெடுத்துக் கொள்ளத் தவறியிருக்கக் கூடாது.
கேட்கக் கூடாத கேள்விகள்
அதாவது எந்தவொரு சமூகமாற்றப் போரிலும் சில வெளிப்படையாகப் பதில் கூற முடியாத கேள்விகள் இருக்கவே செய்யும். அத்தகைய கேள்விகளை எழுப்புவது சமூகமாற்றப் பணியைத் தங்கள் குறிக்கோளாகக் கொண்டிருப்போரைப் பொறுத்தவரை பொறுப்பற்ற போக்குமாகும். ஏனெனில் சில கேள்விகளுக்கான பதிலை அவை கேட்கப்பட்டுவிட்டனவே என்பதற்காக சமுதாயமாற்றப் பணி ஒரு கட்டத்திற்கு வந்துள்ள நிலையில் அதனை மென்மேலும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்ற பணியை சிரமேற்கொண்டுள்ளவர்கள் கூறிவிடமுடியாது. ஏனெனில் அப்பதில்களை மையமாக வைத்து அவர்கள் பல சர்வதேச அளவிலான விமர்சனங்களையும் அவதூறுகளையும் அநாவசியமாக எதிர் கொள்ள வேண்டிவரும்.
அப்படிப்பட்ட கேள்விகளே சி.பி.ஐ.(மாவோயிஸ்ட்)கள் எழுப்பும் மக்கள் நிர்வாகத்தை யு.சி.பி.என்(எம்) கலைத்து விட்டது. மக்களின் விடுதலைப் படையையும், ஆயுதங்களையும் ஐ.நா. வசம் ஒப்படைத்துவிட்டது. இது போன்ற தற்கொலைக்குச் சமமான இந்நடவடிக்கைகளால் நேபாளப் புரட்சியே முடிவுக்கு வந்துவிட்டது என்பது போன்ற கூற்றுகளாகும்.
கூற முடியாத பதில்கள்
இந்த எளிமையான அனுபவம் சார்ந்த விசயம் கூட இந்திய மாவோயிஸ்ட்களுக்கு தெரியாது என்று யாரும் நம்ப முடியாது. அப்படியிருந்தும் அக்கேள்விகளை அவர்கள் எழுப்பியுள்ளதற்குக் காரணம் தற்போதுள்ள இந்நிலையில் யு.சி.பி.என்(எம்) அமைப்பினர் இதற்குப் பதில் கூறப் போவதில்லை என்பதை நன்கறிந்து கொண்டதேயாகும். ஏனெனில் ‘மக்கள் நிர்வாகத்தை எந்த நேரத்திலும் ஏற்படுத்த முடியும், உழைக்கும் வர்க்க அரசியல் தத்துவத்தால் புடம் போடப்பட்டுள்ள நேபாள மக்கள் மத்தியிலிருந்து ஒப்படைக்கப் பட்டுள்ளதைப் போல் பல மடங்கு மக்கள் விடுதலைப் படையினரை எந்நேரமும் தங்களால் உருவாக்க முடியும்’ என்ற பதிலை அவர்களால் கூறமுடியாது. ஏனெனில் அவர்கள் நடத்திக் கொண்டிருப்பது சொற்போரல்ல. வாதத்தில் கூறக் கூடாதவற்றையும் கூறுவதற்கு மேலும் சமூகமாற்றப் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளக் கூடியவர்கள் எந்தவகைப் பாரபட்ச மனநிலைக்கும் குருட்டுத் தனங்களுக்கும் ஒரு போதும் இடமளிக்கக் கூடாது. ஒரு சூழ்நிலையில் தவறானதொரு அடிப்படை அரசியல் வழியைத் தேர்ந்தெடுத்துவிட்டால் கூட நடைமுறை அனுபவங்கள் உணர்த்தும் போது அதிலிருந்து படிப்பினை எடுத்துக் கொண்டு வழிமுறையை ஒட்டுமொத்தமாகவோ அல்லது தேவைப்படும் அளவிற்கோ மாற்றிக் கொள்ளத் தயங்கக் கூடாது.
மாவோயிஸம் மார்க்சிஸப் பார்வையில்
உள்ளபடியே மாவோயிஸம் என்ற சொற்பிரயோகமே அடிப்படை மார்க்சிஸத்தின்படி சரியானதல்ல. அனைத்து சமூகமாற்றச் சிந்தனைகளுக்கும் அடிப்படையானது மாமேதை மார்க்ஸ் முன்வைத்த சமூகமாற்றக் கண்ணோட்டமே. முதலாளித்துவச் சுரண்டலை முடிவுக்குக் கொண்டுவருவதை அடிப்படையாகக் கொண்டிருந்த அக்கண்ணோட்டம் முதலாளித்துவம் ஏகாதிபத்தியமாக வளர்ந்து சமூகமாற்றச் சிந்தனைப் போக்கிலும், நடைமுறைகளிலும் தீவிரமான செழுமைப் படுத்துதலை வேண்டிய தருணத்தில் அதற்குகந்த வகையில் மாமேதை லெனினால் செழுமைப்படுத்தப்பட்டது. லெனினது அந்தப் பங்களிப்பு கணக்கிலெடுத்துக் கொள்ளப் படவில்லையயனில் சமூகமாற்றப் போரே, மாறிய சூழ்நிலையில் சாத்தியமல்ல என்ற சூழ்நிலை உலகக் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு ஏற்பட்டது.
அவ்வேளையில் அதுவரை மார்க்சிஸமாக இருந்த கம்யூனிஸக் கண்ணோட்டம் மார்க்சிஸம் லெனினிஸமாக ஆயிற்று. அதாவது ஏகாதிபத்தியக் காலட்டத்தின் மார்க்சிஸமே மார்க்சிஸம் லெனினிஸம் என்றாயிற்று. இன்றுவரை சமூகத்தின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக இருப்பதும் ஏகாதிபத்தியமாக வளர்ச்சி யடைந்துள்ள முதலாளித்துவமே. அதனைத் தாண்டிய முதலாளித்துவத்தின் வளர்ச்சிப் போக்கு எதுவும் இன்றுவரை இல்லை. மேலும் ஏகாதிபத்தியமே முதலாளித்துவத்தின் இறுதிக் கட்டம் என்பதால் இன்றைய காலகட்டப் புரட்சியின் சாராம்சமே ஏகாதிபத்தியமும் பாட்டாளி வர்க்கப் புரட்சியும் என்பதாக ஆகிவிட்டது. எனவே மார்க்சிஸமும் லெனினிஸமும் உலகம் முழுவதும் பொருந்தக் கூடிய அடிப்படைத் தன்மை வாய்ந்தது.
ஆனால் இந்த நிலையிலும் கூட நாட்டிற்கு நாடு பல செழுமைப் படுத்தல்கள் அந்தந்த நாடுகளின் கம்யூனிஸ்ட் தலைமைகளால் நிச்சயம் செய்யப்படும். அதாவது அந்தந்த நாடுகளின் கம்யூனிஸ்ட் கட்சிகளின் கூட்டு சிந்தனைப் போக்கின் நிதர்சன வெளிப்பாடுகளாக இருக்கக் கூடிய தலைவர்கள் மூலம் அந்த செழுமைப் படுத்துதல்கள் நடைபெறும். கம்யூனிஸ ரீதியிலான சமூக மாற்றங்கள் சர்வதேசத் தன்மை பொருந்தியவை. எனவே அத்தகைய செழுமைப் படுத்துதல்கள் பிறநாடுகளின் கம்யூனிஸ்ட் கட்சிகள் எடுத்துக் கொள்ளும் தன்மையையும் தகைமையையும் ஓரளவு கொண்டிருக்கும். ஆனால் மார்க்சிஸம் லெனினிஸத்தைப் போல் உலகம் முழுவதும் பொருந்திவரக் கூடிய அடிப்படைத் தன்மை வாய்ந்தவையாக அவை இராது. அதனால் அத்தகைய சிந்தனைகள் அனைத்தும் ‘இஸ’மாக ஆகிவிடாது.
மாவோவின் வழங்கல் மாவோ சிந்தனையே
அந்த அடிப்படையில் மகத்தான சீனப் புரட்சி அனுபவங்கள் மூலம் மாபெரும் தலைவர் மாவோ வழங்கியது ஒரு அருமையான சிந்தனையாகும். இருந்தாலும் லெனினிஸத்தைப் போல் உலகப் புரட்சிக்கு வழிகாட்டும் பொதுத்தன்மையைக் கொண்டதல்ல அது. எனவே சீனாவில் அமல் செய்யப்பட்டதும் மார்க்சிஸம் லெனினிஸம் மற்றும் மாவோவின் சிந்தனைகளே தவிர மாவோயிஸம் அல்ல.
தன்னடக்கத்தின் இலக்கணம் தோழர் மாவோ அவர்களே தன்னுடைய வழங்கலை மாவோயிஸம் என்று கூறுவதை வரவேற்கவில்லை. மாவோவின் ஒரு காலத் தோழராகவும் அதன் பின்னர் துரோகியாகவும் மாறிய லின்பியாவோவே மாவோயிஸம் என்ற கண்ணோட்டத்தை முன்வைத்தார். மாவோ அதன் பின்னர் அது தவறு என்பதைச் சுட்டிக் காட்டியதோடு தன் வழங்கல் குறித்து புரட்சியாளர்களுக்கே உரித்தான ஒரு இலக்கணம் வகுத்தாற் போன்ற தன்னடக்கத்துடன் கூறினார்: ‘நான் என்னைப் பற்றி ஏதாவது கூற முடியுமானால் நான் கூற முடிந்தது இதுதான். அதாவது நான் ஒரு நல்ல ஆசிரியன் என்பது தான்’ என்றார். அவ்வாறு மாவோ அவர்களால் முன்வைக்கப் படாத மாவோயிஸம் என்ற கண்ணோட்டத்தை அடிப்படை வழியாக ஏற்றுச் செயல் பட்டாலும் யு.சி.பி.என்(மாவோயிஸ்ட்)கள் யதார்த்த சூழ்நிலை அதன் அமலாக்கலுக்கு ஒத்து வராத தன்மையை முன்நிறுத்திய போது அதிலிருந்து படிப்பினை எடுத்துக் கொண்டு தங்கள் வழியைச் சரிசெய்து கொள்ளத் தயங்கவில்லை.
ஒருங்கிணைந்த எழுச்சி
அதனால் தான் கிராமப்புறங்களில் விடுதலை மையங்களை அதன் உண்மையான அர்த்தத்தில் ஏற்படுத்த முடிந்த அவர்களுக்கு நகர்ப் புறங்களைத் தாக்கிக் கைப்பற்றுவது என்ற அதன் அடுத்த பகுதி நடைமுறை சாத்திய மற்றதாகத் தோன்றிய போது அதனை மாற்றிக் கொண்டது மட்டுமின்றி கிராமப் புறங்களில் நடக்கும் இயக்கத்தோடு கூடவே நகர்ப்புற எழுச்சியை உருவாக்கும் ஒருங்கிணைந்த எழுச்சிக் கண்ணோட்டத்தைப் பின்பற்ற வேண்டியதே இன்றைய தேவை என்பதையும் தயங்காமல் முன் வைத்தனர். சி.பி.ஐ.(மாவோயிஸ்ட்)களின் கடும் தாக்குதலுக்கு இந்த ஒருங்கிணைந்த எழுச்சிக் கண்ணோட்டமும் இலக்காகியுள்ளது. அதாவது தாங்கள் கடைப்பிடிக்கும் குருட்டுத்தனத்தைக் கடைப்பிடிக்காத அனைவரையும் அந்தக் குருட்டுத்தனத்துடன் ஒத்துப் போகாத அனைத்தையும் விமர்சிப்போம் என்ற அளவிற்கு அவர்களின் போக்கு அதிதீவிரமடைந்துள்ளது.
முழக்கங்களின் முக்கியப் பங்கு
எந்தவொரு இயக்கத்திலும் சமுதாய மாற்றப் பணியைச் செயல்படுத்தும் சக்திகளால் தருணங்களுக்கு ஏற்ற வகையில் எழுப்பப்படும் முழக்கங்கள் முக்கியப் பங்கினை வகிக்கின்றன. எவ்வாறு முதல் உலகப் போர் சூழ்நிலையில் ரஷ்யாவின் அனைத்து அமைப்புகளும் அனைத்துச் சக்திகளையும் போர் முனையை நோக்கித் திருப்புவோம் என்று முழக்கமிட்ட வேளையில் லெனினால் தலைமை தாங்கப்பட்ட ஆர்.எஸ்.டி.எல்.பி.(போல்ஷ்விக்) ‘அமைதியும் ரொட்டியுமே’ இன்றைய தேவை என்பதை முன்வைத்ததோ அதைப்போல் யு.சி.பி.என்(மாவோயிஸ்ட்)கள் ‘சிவில் நிர்வாகத்தின் மேலாண்மை’ என்ற கண்ணோட்டத்தைத் தற்போது மிகச் சரியாக முன்வைத்துள்ளனர். அதைப்போல் பதவியைத் தூக்கியயறிந்த பின் மீண்டும் யாருடன் எந்த சந்தர்ப்பவாத உடன்பாட்டைச் செய்து பதவிக்கு வரலாம் என்ற அனைத்து முதலாளித்துவ நாடாளுமன்ற வாதிகளும் கடைபிடிக்கும் வழியிலிருந்து 100 சதவீதம் மாறுபட்டு மக்கள் அதிகாரத்தை நிலைநாட்டும் பணியில் நேபாள சமூகத்தின் பிரத்யேகத் தன்மைகளை மையமாக வைத்து சுயாதிகாரம் கொண்ட மாநிலப் பகுதிகளை அறிவித்துக் கொண்டுள்ளனர்.
சுயாதிகார மாநிலங்கள் அடையாளப்பூர்வ அமைப்புகள்
ஆட்சியதிகாரம் மாதவ் குமார் நேபாள் தலைமையில் ஷேக்ஸ்பியரின் நான்காம் Hendri நாடகத்தில் வரும் பால்ஸ்டாப்பின் படைகளைப் போல் தலையயது முண்டமெது என்று அறியாமல் நகைப்பிற்கிடமாகி நிற்கும் வேளையில் உண்மையான மக்கள் அதிகாரத்தை நேபாளத்தின் பல பிராந்தியங்களில் இருக்கும் பெரும்பான்மை இனப்பிரிவுகளைக் கணக்கில் கொண்டு உருவாக்கிச் செயல்படும் உயிர்த்துடிப்புள்ள மக்கள் அதிகாரத்தை நிலைநாட்டும் பணியில் யு.சி.பி.என்(மாவோயிஸ்ட்)கட்சி மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டுள்ளது. அதையும் மக்களைத் திரட்டி அவர்களின் மகத்தான ஆதரவோடு செயல்படுத்திக் கொண்டுள்ளது.
இரண்டு அதிகார மையங்களின் உதயம்
இந்தப் போக்கும் உருவாக்கப்படும் மக்கள் அதிகார அமைப்புகளும் இரண்டு அதிகாரமையங்கள் தோன்றியுள்ளதைப் புலப்படுத்துகின்றன. வரலாற்றில் இச்சூழ்நிலைக்கான முன்மாதிரியைப் பார்க்க வேண்டுமானால் புரட்சியின் போது ரஷ்யாவில் லெனினால் தலைமை தாங்கப்பட்ட கட்சி முன்னுரிமை கொடுத்து உருவாக்கி, டூமா என்ற பெயரலவிலான அதிகாரம் கொண்ட நாடாளுமன்றத்திற்கு எதிராக நிறுத்திய சோவியத்துகளையே நாம் நினைவுகூற வேண்டியிருக்கும்.யு.சி.பி.என் (மாவோயிஸ்ட்) கள் கடைப்பிடிக்கும் இந்தச் சரியான அணுகுமுறை , வர்க்க ரீதியான பிளவினை சமூகம் முழுவதுமே ஏற்படுத்தவல்லதாக உள்ளது. இது இடதுசாரி என்று வார்த்தையிலும் வலதுசாரியாக நடை முறையிலும் உள்ள பல்வேறு கட்சிகளிலும் கூட செங்குத்தான பிளவினை ஏற்படுத்திக் கொண்டுள்ளது. மஸ்ஸால் அமைப்பின் இணைப்பு பிற்போக்குத் தனத்தின் பிரதிபலிப்பா மேலும் யு.சி.பி.என்(எம்)ன் ஆக்கபூர்வ அணுகுமுறை சி.பி.என்(மஸ்ஸால்) கட்சியினர் போன்ற மாவோயிஸம் என்பதை ஏற்றுக் கொள்ளாத கட்சிகள் யு.சி.பி.என்(மாவோயிஸ்ட்) உடன் இணையும் ஒரு ஆரோக்கியமான போக்கையும் ஏற்படுத்தியுள்ளது. நடைமுறையிலிருந்து படிப்பினை எடுத்துக் கொண்டு நேபாளப் புரட்சியையும் அதன் செறிந்த அனுபவங்கள் மூலம் மார்க்சிஸக் கருத்துக் கருவூலத்தையும் ஜாம் ஜாமென முன்னெடுத்துச் செல்லும் யு.சி.பி.என்(மாவோயிஸ்ட்) அமைப்பு ஒரு கட்டத்தில் மாவோயிஸ்ட் என்ற பெயரைக் கட்சியின் பெயருக்குப் பின்னால் வைத்திருப்பது பொருத்தமுடையது தானா என்ற அளவிற்குக் கூட மிகச் சரியான அடிப்படை மார்க்சிஸ வழியின்படி சிந்திக்கத் தொடங்கியது. அதாவது குருட்டுப் பிடிவாத வாதங்களுக்கு இடமளிக்காத விதத்தில் அந்த அளவிற்குச் செல்லக்கூட அக்கட்சி தயாராக இருந்தது.
அந்த அளவிற்குத் திறந்த மனநிலையோடு மார்க்சிஸ்டுகள் இருப்பதே இன்றைய காலகட்டத்தின் தேவை. இதை உணராது மஸ்ஸால் குழுவினர் போன்ற பிற்போக்கு வாதிகளைத் தங்களோடு இணைத்துக் கொண்டது இன்னுமொரு தவறான நடவடிக்கை என சி.பி.ஐ.(மாவோயிஸ்ட்)கள் யு.சி.பி.என்(மாவோயிஸ்ட்) களைக் குறை கூறுகின்றனர். மஸ்ஸால் குழுவினரைப் பிற்போக்குப் பிரிவினர் என்று மட்டும் கூறுகின்றனரே தவிர அவர்கள் எடுத்த எந்ததெந்த நடவடிக்கைகளில் அவர்கள் பிற்போக்காளர்கள் என்று கூறவில்லை.
அத்துடன் நாடாளுமன்ற அரசியலில் யு.சி.பி.என்(மாவோயிஸ்ட்) அமைப்பினர் தனது அத்தனை முக்கியத் தலைவர்களையும் ஈடுபடுத்துகின்றனர் என்றும் சி.பி.ஐ.(மாவோயிஸ்ட்) கள் குறை கூறுகின்றனர்.
ஏகாதிபத்தியப் போக்கே விரிவாக்கவாதம்
அதாவது நேபாளத்தைப் போன்ற இந்தியாவைவிடப் பற்பல மடங்கு தொழில் ரீதியாகப் பின் தங்கிய நாட்டிலேயே மாவோவின் வழிமுறைகள் அப்படியே அசலும் நகலுமாகக் கடைப்பிடிக்க முடியாதவை என்று யு.சி.பி.என்(மாவோயிஸ்ட்)கள் கருதும் வேளையில் முதலாளித்துவம் வளர்ச்சியடைந்து அது ஏக போகங்கள் பல வளர்வதற்கு வழிவகுத்து இன்று ஏகாதிபத்தியமாக மாறி நேபாளம் போன்ற நாடுகளை தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கோடு செயல்படும் இந்தியாவை விரிவாக்க வாதம் கொண்ட நாடு என்று அழைத்துக் கொண்டே இங்கு தாங்கள் நடத்த விரும்புவது மாவோவின் வழிமுறையிலான புரட்சியே, அதாவது தங்களது போர்த் திட்டம் கிராமப் புறங்களில் விடுதலை மையங்களை அமைத்து நகர்ப்புறங்களைத் தாக்கிக் கைப்பற்றுவதே என்று எந்தவகைப் பகுப்பாய்வாலும் நிறுவ முடியாத குருட்டு மற்றும் வறட்டுச் சூத்திர வாதத்தினைக் கடைப்பிடிப்பவர்களாக இருக்கும் சி.பி.ஐ.(மாவோயிஸ்ட்)கள் தாங்கள் யு.சி.பி.என்(மாவோயிஸ்ட்)கள் இடத்தில் இருந்தால் என்ன செய்திருப்போம் என்ற அடிப்படையில் முன்வைக்கும் வாதமே இது.
இந்தியா ஏகாதிபத்தியம் என்ற கருத்தை முன்வைத்தால் தாங்கள் கூறும் அடிப்படை அரசியல் வழியான மக்கள் ஜனநாயகப் புரட்சி இந்தியாவிற்கு ஒத்துவராமல் போய்விடும் என்பதால் சி.பி.ஐ.(மாவோயிஸ்ட்)கள் விரிவாக்க வாதம் என்ற சொல்லைப் பயன்படுத்துகின்றனர். இன்று உலகில் நிலவுவது மன்னராட்சி அல்ல. எனவே அனைத்து விரிவாக்க வாதங்களுமே ஏகாதிபத்தியப் போக்கை அடிப்படையாகக் கொண்டு உருவாகின்றனவே தவிர, முதலாளித் துவம் ஏகாதிபத்தியம் ஆகியவற்றோடு தொடர்பில்லாத விரிவாக்கவாதம் என்று எதுவும் இன்றைய உலகச் சூழ்நிலையில் இருக்க முடியாது.
எவரை, எதற்கு நியமிப்பது என்பது யாரின் உரிமை
இந்நிலையில் தன்னுடைய தலைவர்களில் யாரை, எதற்கு நியமிப்பது என்பதை அந்த நாட்டில், நிலவும் சூழ்நிலையையயாட்டி அந்த நாட்டின் கம்யூனிஸ்ட் அமைப்புதான் முடிவு செய்ய முடியுமே தவிர வேறொரு நாட்டின் கம்யூனிஸ்ட் அமைப்பு முடிவு செய்ய முடியாது. இந்த வாதத்தின் மூலம் சி.பி.ஐ.(மாவோயிஸ்ட்)கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கூற வருவது ஒன்றே ஒன்றாகத்தான் இருக்க முடியும். அதாவது நாடாளுமன்ற வாதமும், பதவி ஆசையும் யு.சி.பி.என்.(மாவோயிஸ்ட்) அமைப்பை ஆட்டிப் படைக்கத் தொடங்கிவிட்டன. எனவே தான் அனைத்துத் தலைவர்களும் நாடாளுமன்ற அரசியலில் ஈடுபடுவதில் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதாகத்தான் அது இருக்க முடியும்.
பதவி விலகல் அளிக்கும் பகிரங்கப் பதில்
அப்படியானால் ஏன் ஜனாதிபதியின் ஜனநாயக விரோத நடவடிக்கையான கொத்தவாலை பதவியில் நீடிக்கச் செய்வது என்ற நிலையினை எதிர்த்து பிரசந்தா முதல் அனைவரும் பதவி விலக வேண்டும்? பதவி ஆசையும் நாடாளுமன்ற வாதமும் தான் அவர்களை வழி நடத்துகிறதென்றால் யாராலும் மறுக்க முடியாத வகையிலான அத்தகைய சிறந்த முடிவை எப்படி அவர்கள் எடுக்க முடியும் என்ற கேள்விகளை சி.பி.ஐ.(மாவோயிஸ்ட்) அமைப்பினர் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். உண்மையில் சில பதவி விலகல்கள் பல பதவி ஏற்புகளை விட மக்கள் இயக்கத்தில் மகத்தான பங்கினை வகிக்கின்றன என்பதை யு.சி.பி.என்.(மாவோயிஸ்ட்)களின் பதவி விலகல் நிரூபித்துள்ளது. அனைத்து அதிகாரமும் கொண்டது என்று தூக்கி வைத்துக் கொண்டாடப்படும் நாடாளுமன்றம் முடங்கிப் போயுள்ளது. திருடர்களுக்குத் தேள் கொட்டியதைப் போல் பதவிப்பித்துப் பிடித்துத் தற்போது பதவி நாற்காலிகளைக் கட்டிப்பிடித்துக் கொண்டிருப்போர் எந்த விவாதத்தையும் பரந்துபட்ட மக்கள் மத்தியில் நிறுவ முடியாதவர்களாக பேச்சு மூச்சற்றுக் கிடக்கின்றனர். பதவி விலகியவர்களால் மக்கள் மத்தியில் உருவாக்கப்படும் எழுச்சி பலகட்டப் பிரச்சார கட்டங்களைத் தாண்டி தற்போது அடையாளப் பூர்வமாக சுயாதிகார மாநிலங்கள் அமைக்கும் பணியை வெற்றிகரமாகச் செய்து கொண்டிருக்கிறது.
மார்க்சிஸம் ஒரு உன்னதமான தத்துவம். ஏனெனில் அது சமூகத்தில் அடிப்படை நீதியையும் நியாயத்தையும் கொண்டுவருவதை குறிக்கோளாகக் கொண்டுள்ளது. அது விஞ்ஞானபூர்வமானது. ஏனெனில் சமூகத்தில் தோன்றும் அனைத்து வளர்ச்சிப் போக்குகளையும் கணக்கிலெடுத்துக் கொண்டு அது தன்னை வளர்த்துக் கொள்கிறது. எனவே அது காலாவதியாகும் என்ற பேச்சுக்கே இடமில்லாத வகையில் நின்று நிலவுகிறது. மார்க்சிஸம் மட்டுமே இன்றைய கால கட்டத்தில் உண்மையை உயர்த்திப் பிடிக்கிறது. மார்க்சிஸம் மட்டுமே நிகழ்வுகளை அதன் ஓட்டத்தில் கணிக்கிறது. இந்தத் தன்மைகளால் ஒவ்வொரு நாட்டிலும் அவற்றின் சூழ்நிலைகளுக்கு உகந்த வகையில் பல்வேறு போர்த்திட்டங்களை வகுத்தெடுக்கவும், செயல்படுத்தவும் மார்க்சியப் பார்வை உதவுகிறது. அதன் கருத்துக் கருவூலத்தில் மாவோ கனவுகண்ட நூற்றுக் கணக்கான புத்தம் புது மலர்களை அது பூத்துக் குலுங்கச்செய்து கொண்டுள்ளது.
அவ்விதத்தில் மிக நீண்ட காலத்திற்குப் பின் நேபாள மண்ணில், இந்த சமூகம் மாறாதா? அநீதிகள் அழிவதற்கு வாய்ப்பே இல்லையா? சுரண்டல் மனிதகுல வறலாற்றில் என்றென்றும் அழித்தொழிக்க முடியாமல் நிலைபெற்று விடுமா? என்று சோவியத் யூனியன் மற்றும் பல சோசலிஸ்ட் நாடுகளின் மறைவிற்குப்பின் ஏங்கிக் கொண்டிருந்தவர்களின் மனதில் பால் வார்ப்பதாக யு.சி.பி.என்.(மாவோயிஸ்ட்)களின் பல நடவடிக்கைகள் அமைந்துள்ளன. இன்று அதன் உதவிக்கு வர சோசலிச நாடு என்று எதுவும் இல்லாத நிலையில் உலக முதலாளித்துவ சக்திகளின் அவதூறுப் பிரச்சாரங்கள் பலவற்றிற்கு இடமளிக்காத விதத்தில் சாதுர்யமாக அக்கட்சியினர் செயல்பட்டுக் கொண்டுள்ளனர். ஏகாதிபத்திய நாடுகளின் தலையீடு அங்கு ஏற்பட்டால் அந்நாடுகள் உலக அரங்கில் அப்பட்டமான விதத்தில் ஆக்கிரமிப்பாளர்கள், ஜனநாயக விரோதிகள் என அம்பலமாகும் விதத்தில் சாதுர்யமாக தங்கள் நடவடிக்கைகளை வகுத்தெடுத்து அவர்கள் செயல்பட்டுக் கொண்டுள்ளனர். எப்படியிருந்தாலும் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இன்றைய உலக முதலாளித்துவம், நெருக்கடியிலிருந்து மீள நேபாளம் முன்னிறுத்தும் அடிப்படையில் சோசலிசத் தன்மை வாய்ந்த வழியிருக்கிறது என்பதை உழைக்கும் மக்கள் உணர்ந்து அந்தப் பதாகையின் கீழ் அணிதிரள்வதை எப்பாடு பட்டும் தடுக்கவே முயலும்.
ஆதரவாக அணிதிரள்வோம்
எனவே உலகத் தொழிலாளி வர்க்கம் நேபாளப் புரட்சிக்கு ஆதரவாக ஒருமித்த குரலில் அணிதிரளவேண்டும். அதன் பங்கும் பகுதியுமாக இருக்கக் கூடிய இந்திய உழைக்கும் வர்க்கத்திற்கு இதில் கூடுதல் பங்கிருக்கிறது. அதாவது அதற்கு மிக அருகாமையில் உள்ள நாட்டின் உழைப்பாளிகள் என்ற ரீதியில் இன்னும் தீவிரமாகவும் தீர்க்கமாகவும் நமது குரலை நேபாளப் புரட்சிக்கு ஆதரவாக நாம் ஒலிக்கச் செய்ய வேண்டும். தாங்கள் கடைப்பிடிக்கும் குருட்டுத்தனம் வறட்டுச் சூத்திர வாதம் போன்ற வண்ணக் கண்ணாடிகள் மூலம் நேபாள நிகழ்வுகளைப் பார்த்து சி.பி.ஐ.(மாவோயிஸ்ட்)கள் முன்வைக்கும் உண்மைக்கு புறம்பான படப்பிடிப்புகளை, மார்க்சிய ரீதியான வாதங்களை முன்வைத்து அம்பலப்படுத்தி அவற்றின் செல்வாக்கில் தேங்கி நின்று விடாமல் இந்திய உழைக்கும் வர்க்கத்தைக் காக்கவும் செயல்பாட்டில் இறக்கிவிடவும் நாம் இடைவிடாது பணியாற்ற வேண்டும். அதன் மூலம் மட்டுமே வரலாறு நம் தோள்களில் சுமத்தியுள்ள கடமையைச் செய்தவர்களாக நம்மால் ஆக முடியும்.
பயங்கரவாதிகள் என சித்திரிக்கப்பட இடம் கொடுக்கும் போக்கு
அதே சமயத்தில் சி.பி.ஐ.(மாவோயிஸ்ட்) அமைப்பிலுள்ள நேர்மையான தோழர்களும் யு.சி.பி.என்.(மாவோயிஸ்ட்) இயக்கம் மார்க்சியத்தை ஆக்கபூர்வமாக அவர்களது நாட்டில் அமுலாக்கும் போக்கிலிருந்து படிப்பினை எடுத்துத் தங்களது பிடிவாதவாதப் போக்கை அடையாளம் காண வேண்டும். மக்கள் இயக்கப் பாதையைக் கடைப் பிடிக்காது பரந்துபட்ட மக்களிடமிருந்து தனிமைப்பட்டு நிற்பதோடு கம்யூனிஸ்டுகளே பயங்கரவாதிகள் என்று சித்தரிக்கப் படுவதற்கு ஏதுவான ஒரு சூழ்நிலையை உருவாக்கும் அக்கட்சியின் போக்கை மாற்ற முயல வேண்டும். மேலும் ஒரு தவறான அடிப்படை அரசியல் வழியை விடாப் பிடியாகக் கடைப்பிடிப்பதால் எத்தனை அரிய உயிர்கள் வீணாகப் பலியாகிக் கொண்டுள்ளன; பொது வாழ்க்கையில் ஈடுபடத் தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் முன்வரும் நிகரற்ற இளைஞர்களைக் கொண்டு இன்று இந்திய முதலாளித்துவம் முன்னிறுத்தும் அனைத்து அவலங்களையும் எதிர்த்து மகத்தான மக்கள் இயக்கங்கள் கட்ட முன்வந்தால் இந்திய உழைக்கும் மக்களின் பிரச்னைகளுக்குத் தீர்வாக அமையும் மகத்தான சோசலிச சமூக மாற்றம் எத்தனை விரைவில் ஏற்படும் என்பதையும் எண்ணிப் பார்த்து மார்க்சிய அடிப்படையில் சரியான முடிவுகளை தயங்காது எடுக்க அவர்கள் முன்வரவேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்