வெள்ளி, 20 ஏப்ரல், 2012

வடசேரி மக்களின் தீரம் மிக்க போராட்டம் தொடர்கிறது

காவிரி நதிநீர் பாயும் தஞ்சாவூர் மாவட்டத்தில்  உள்ள வடசேரி மிகவும் வளமான பகுதி. இன்றும் இங்கு விவசாயம் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது. அந்த பகுதியில் உள்ள தண்ணீர் வளத்தை பயன்படுத்தி சாராய ஆலை நிறுவி கொள்ளை லாபம் சம்பாதிக்க ஆசைப்பட்ட  டி.ஆர். பாலு கிங்ஸ் இந்தியா கெமிக்கல் கார்ப்பரேஷன்  லிமிடேட் என்ற எரிசாராய ஆலையை பல்வேறு முறைகேடுகளை அரங்கேற்றி ,மோசடியாக அனுமதி பெற்று 2010ல் துவங்க முயற்சி செய்தார்.  

அந்த ஆலை இயங்க ஆரம்பித்தல் வடசேரி உட்பட அருகில் உள்ள பகுதிகள் அனைத்தும் பாலைவனம் ஆகிவிடும் என்று அந்த பகுதி வாழ் மக்கள் சாராய ஆலை திறக்க கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது தி.மு.க ஆட்சியில் இருந்ததால் அரசு இயந்திரம் முழுவதையும் பயன்படுத்தி எப்படியாவது சாராய ஆலையை திறந்துவிட வேண்டும் என்று பகிரங்கமாக வேலை செய்தார் டி.ஆர்.பாலு. 09 .04 .2010 அன்று கருத்து கேட்பு கூட்டம் நடத்துவதாக மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அறிவித்தனர். ஆனால் அந்த ஊருக்கே சம்பந்தம் இல்லாத குண்டர்களை பல்வேறு இடங்களில் இருந்து கொண்டு வந்து குவித்திருந்தது கிங்ஸ் இந்திய கெமிக்கல் கார்ப்பரஷேன் நிர்வாகம். அதை தட்டி கேட்ட கிராம மக்களை ( பெண்கள் ,குழந்தைகள் உட்பட )ரத்த வெறி பிடித்த  செந்தில் வேலன் எஸ்.பி. தலைமையில் திரண்டிருந்த காவல் துறை விரட்டி விரட்டி தாக்கியது. 

காவல் துறையின் காட்டுமிராண்டி தனமான தாக்குதலில் பலருக்கு மண்டை உடைந்தது.   அத்தோடும் அடங்காத காவல் துறை கடுமையாக காயமடைந்திருந்த மக்கள் மீதே பல்வேறு வழக்குகளை போட்டது . இவ்வாறு பல்வேறு அராஜகங்களை அரங்கேற்றி எப்படியாவது சாராய ஆலையை நடத்திவிட வேண்டும் என்று முயன்றது அப்போது ஆட்சியில் இறந்த தி.மு.க. அடுத்தடுத்து பல்வேறு போராட்டங்களை நடத்தியும், நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுத்தும் சாராய ஆலையை அந்த பகுதியில் வரவிடாமல் தடுத்தனர் வடசேரி மக்கள். 

இதை ஒட்டி 'வடசேரி கிராம விவசாயிகள் சங்கம்' தொடங்கப்பட்டு இன்று வரை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தங்களுக்கு அநீதி இழைக்கப்படுவதற்கு எதிராக போராடிய வடசேரி கிராம மக்கள்  மீது காவல் துறை காட்டுமிராண்டி தனமாக தாக்குதல் நடத்திய நாளான ஏப்ரல் 9 ஐ கருப்பு நாளாக கடந்த இரண்டு ஆண்டுகளாக அனுசரித்து வருகின்றனர். தி.மு.க ஆட்சியில் போடப்பட்ட பொய் வழக்கு அ.தி.மு.க ஆட்சிக்கு வந்த போதும் வாபஸ் பெறமால் இன்றும் நிலுவையில் உள்ளது அந்த வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறப்பட வேண்டும்.  அநீதிக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் வடசேரி மக்களுக்கும் அவர்கள் வெற்றிகரமாக நடத்தி வரும் வடசேரி கிராம  விவசாயிகள் சங்கத்திற்கும் கரம் கொடுப்போம். 

1 கருத்து:

  1. நன்றி திரு கதிரேசன் எங்களது உணர்வுகளை எழுத்துக்களாக இணைய உலகிற்கு எடுத்துரைத்ததற்கும்
    உண்மையை தெளிவாக வெளியிட்டதற்கும்

    பதிலளிநீக்கு

முகப்பு

புதிய பதிவுகள்