திங்கள், 20 ஆகஸ்ட், 2012

டேவிட் ஹார்வியின் இனிப்பு தடவப்பட்ட ஒரு நஞ்சு – ஜீவா



டேவிட் ஹார்வியின் “மார்க்ஸின் மூலதனத்திற்கு வழிகாட்டி“ தமிழில் இலக்குவன் நூலைப் படிக்கிற போக்கில் எதிர்கொண்ட விபரங்களைத்தான் என்னுடைய கட்டுரையில் பதித்துள்ளேன்.

நூலின் அறிமுகத்திலேயே டேவிட் ஹார்வி மார்க்ஸுடன் முரண்படுவதை பட்டவர்த்தனமாகத் தெரிவிக்கிறார். மூலதனத்தின் முதல் அத்தியாயத்தை சரக்கு குறித்த கோட்பாட்டுடன் ஏன் மார்க்ஸ் துவங்கினார்? என்ற கேள்வியை எழுப்புவதுடன் அதைத்  தேர்வு செய்வதற்கான காரணத்தையும் விளக்க முயற்சிக்கவில்லை என்று  மார்க்ஸை குறை கூறுகிறார். ஆக மூலதன நூலின் அடிப்படை ஆய்வையே சந்தேகத்துள்ளாக்குகிறார். அதேபோல் மூலதன நூல் கம்யூனிசப் புரட்சியை எவ்வாறு உருவாக்குவது என்பது பற்றி பேசவில்லை என்றும், கம்யூனிச சமுதாயம் எவ்வாறு தோற்றமளிக்கும் என்று விளக்கவில்லை என்றும்   கூறுவதன் மூலம் வாசகர்களை மூலதன நூலை வாசிப்பதற்கான  முயற்சியை முறியடிக்க விரும்புகிறார் என்று கருத இடமளிக்கிறது.


மார்க்ஸ் புரிந்து கொண்ட முதலாளித்துவ உலகம் மாறிவிட்டது. எனவே நமது காலத்திற்கு இந்த நூல் எந்த விதத்தில் பயன்பாடு உடையதாக இருக்கும் என்ற கேள்வி எப்பொழுதுமே எழுப்பப்பட வேண்டும் என்று பறை சாற்றுவதன்  மூலம், தர்க்கவியல் வரலாற்றுப் பொருள்முதல்வாத அடிப்படையில் எழுதப்பட்ட மார்க்ஸின் மூலதன நூலை மறுதளிக்க முயற்சிக்கிறார். மூலதன நூல் “உழைக்கும் வர்க்கத்தின் பைபிள் என்று 1886-ல் மூலதன ஆங்கிலப் பதிப்பிற்கு எழுதிய முன்னுரையில் ஏங்கல்ஸ் பிரகடனப் படுத்துவதை கொச்சைப் படுத்த டேவிட்  ஹார்வி எத்தனிக்கிறார்.

மூலதன  நூலில் சில இடங்களில் மார்க்ஸ் தன்னுடைய கருத்தை வாசகர்களுக்கு புரிய வைப்பதற்காக கையாண்டுள்ள சில அனுமானங்களையும், சில அனுபவங்களையும் டேவிட் ஹார்வி கேள்விக்குள்ளாக்குகிறார். பண்டங்களில் பொதிந்துள்ள மதிப்பு என்பது பருப்பொருள் தன்மையற்றது. ஆனால் அது மெய்யானது. மார்க்ஸின் இந்த வாதம் வியப்பளிப்பதாகத் தெரிவிக்கிறார். ஆக மார்க்ஸ் சிரமப்பட்டு ஆய்வை மேற்கொண்டு அதன் அடிப்படையில் எழுதியுள்ள சரக்குகளின் மாய்மாலமும் அதன் ரகசியமும்” என்ற அத்தியாயத்தை ஆசிரியர்  கேலி செய்வதுடன், மார்க்ஸின் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தை சந்தேகிக்கிறார். அதாவது மார்க்ஸை கருத்துமுதல்வாதியாகச் சித்தரிக்க முயற்சிக்கிறார். வேறொரு இடத்தில், சரக்குகளின் மாய்மாலமும் அதன் ரகசியமும் கற்பனை நிறைந்ததாய், மந்திர தந்திரம், மாயவித்தைகளைக் கொண்டதாக இருப்பதாக  மார்க்ஸை கிண்டலும் கேலியும் செய்கிறார்.

சரக்குப் பரிவர்த்தனை படிப்படியாக பல்கிப்பெருகும் போது மனிதகுல வரலாற்றில் முதலாளித்துவம்  தவிர்க்க முடியாத ஒன்றாக உருவாகிறது. மார்க்ஸ் பல இடங்களில் இது போன்ற “தவிர்க்க முடியாத மற்றும் “இன்றியமையாத என்ற வார்த்தைகளை தனது பொருளாதார ஆய்வின் முடிவுகளாக வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் டேவிட் ஹார்வியால் இந்த முடிவுகளை சீரணிக்க முடியவில்லை. முதலாளித்துவ வர்க்கம் மனிதகுல வளர்ச்சிப்  பரிமாணத்தில் உதயமாகிறது. அதேவேளையில் தனது கர்ப்பப் பையில் உழைக்கும் வர்க்கத்தையும் படைத்திடுகிறது. வர்க்கப்பகைமை  இயல்பாக வர்க்கப் போராட்டத்திற்கு இட்டுச் செல்கிறது. அதன் விளைவாக சோஷலிஸ சமுதாய மாற்றம் ஏற்படுகிறது என்ற உண்மையை டேவிட் ஹார்வி ஏற்க மறுக்கிறார். எதோ முதலாளித்துவம் அந்தரத்தில் இருந்து குதித்தது போல் சித்தரிக்க முயற்சிக்கிறார்.

எந்திரங்கள் (தொழில்நுட்பம்) பிரச்சினையல்ல. மாறாக முதலாளித்துவமே (சமூக உறவுகளே) பிரச்சினை என்ற மார்க்ஸின் தீர்க்கதரிசனமான முடிவின் மூலம், தொழிலாளர்கள் புதிய எந்திரங்களால் தங்களது வேலைக்கு ஆபத்து என்று எண்ணி அதை உடைத்தெறிவதற்கு பதிலாக அந்தக்கோபம் முதலாளித்துவ வர்க்கத்திற்கு எதிராக அமைப்பு ரீதியில் அணி திரட்டப்பட வேண்டும் என்று மார்க்ஸ் வேண்டுகோள் விடுப்பதை டேவிட் ஹார்வி மாறுபட்ட தோற்றமாகப் பார்க்கிறார். புரட்சியானால் கொண்டுவரப்படும் சமூக உறவுகளின் உருமாற்றம்தான் அடிப்படையில்  முக்கியமானது என்ற வாதத்தை மார்க்ஸ்  முன் வைத்தார்.  இந்த வாதத்தை அபாயகரமான தளத்தில் பயணிப்பதாக டேவிட் ஹார்வி குறிப்பிடுகிறார். தொழிற்சாலையை அடிப்படையாகக் கொண்ட அமைப்பு முறையை நோக்கித்தான் முதலாளித்துவ சமூகம் முன்னேறுகிறது என்ற கருத்தை டேவிட் ஹார்வி ஏற்க மறுத்து தனக்கு அதில் கருத்து வேறுபாடு இருப்பதாகத் தெரிவிக்கிறார்ர்.

மார்க்ஸின் பொருளாதார ஆய்வின் முக்கிய அம்சமே உபரி மதிப்பு குறித்த கோட்பாடுதான். இதுதான் தொல்சீர் பொருளாதாரவாதிகளான ஆதம் ஸ்மித், டேவிட் ரிக்கார்டோ ஆகியவர்களின் பண்டங்களின் மதிப்பு குறித்த விளக்கத்தினை முழுமையடையச் செய்தது. ஆனால் மார்க்ஸின் உபரி மதிப்பு குறித்த கோட்பாடு குறுகிய வட்ட ஆய்விலிருந்து விரிவான தள ஆய்விற்குச் செல்வதற்கு வாய்ப்பை அளிக்கிறது என்ற போதிலும் அவர் அதனைச் செய்யும் விதம் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதல்ல என்று வாதிடுவதன் மூலம் மூலதனத்தின்  பிரதான அம்சமான உபரி மதிப்புக் கோட்பாட்டை முதலாளித்துவ வாதிகளின் தரப்பிலிருந்து ஒப்புக்கொள்ள மறுக்கிறார்.

ஆக மூலதனத்தை படிப்பதற்கான ஆர்வத்தை தூண்டுவதுதான் நோக்கம் என்று பறைசாற்றி விட்டு தன்னுடைய பாணியில் மார்க்ஸை கிண்டலும் கேலியும் செய்து, மூலதன நூலை விமர்சித்துள்ளார். தன்னுடைய நூலை வாசகர்கள் படிக்கும் போது தன்மீது சந்தேகம் வராமல் இருப்பதற்காக சில  இடங்களில் மார்க்கிசின்  போக்கில் சென்று சில அத்தியாயங்களை விளக்கியுமுள்ளார். பணம் பற்றிய அத்தியாயம் மற்றும் உழைப்பு நிகழ்முறையும் உபரி மதிப்பின் உற்பத்தியும்  மற்றும் மூலதனத்திரட்டல் பற்றியும்   விளக்கியிருப்பதை நாம் மறுப்பதற்கில்லை.

நூலில் தொடர்ந்து பல இடங்களிளில் பரவலாக தன்னுடைய விமர்சனத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவைகள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன.

மூலதனம் பாகம் I பகுதி VI- ல் கூலி குறித்த அத்தியாயங்களில்  டேவிட் ஹார்வியின் மாறுபட்ட கருத்து.

1.     “ வறட்டுத்தனமான கோட்பாடுகளைக் கொண்ட ஒரு பிடிவாதக்கார, சிந்தனையாளராக மார்க்ஸ் பல நேரங்களில் சித்தரிக்கப் படுகிறார்.” (ஹார்வி நூல் பக்கம் 352)
2.      கூலி விகிதங்களிலும் அவற்றுக்கிடையே தேச அளவில் வேறுபாடு உண்டு. உண்மையில் பல நேரங்களில் பிராந்தியங்களுக்கிடையேயும் குறிப்படத்தக்க கூலி விகித வேறுபாடு உண்டு. ஆனால் அவற்றையெல்லாம் மார்க்ஸ் இங்கே பரீசீலிக்கவில்லை. – ஹார்வி நூல்  பக்கம் 355

ஆனால் மார்க்ஸ் தன்னுடைய மூலதனம் நூல் அத்தியாயம் 22-ல் நாடுகளுக்கிடையிலான கூலி வேறுபாடுகள் குறித்து தெளியாக விளக்கியுள்ளார். “ அதிக உற்பத்தித்திறனுள்ள தேச உழைப்பு அதன் சரக்குகளின் விற்பனை விலையை அவற்றின் மதிப்பின் அளவுக்குக் குறைக்குமாறு போட்டியால் நிர்ப்பந்திக்கப் படும்வரை, அதிக உற்பத்தித்திறனுள்ள தேச உழைப்பு உலகச் சந்தையில் அதிக மும்முரமுள்ள தேச உழைப்பாகவும் செயல்படுகிறது என்ற உண்மையும் மதிப்பு விதியின் சர்வதேசப் பிரயோகத்தில் தாக்கம் உண்டாக்குகிறது”.

“ ஆகவே, ஒரே வேலை நேரத்தில்  வெவ்வேறு நாடுகளில் உற்பத்தி செய்யப்படும் ஒரே வகைச் சரக்குகளின் வெவ்வேறு அளவுகளது சர்வதேச மதிப்புகள் சமமற்றவவை. இம்மதிப்புகள் வெவ்வேறு விலைகளின், அதாவது சர்வதேச மதிப்புகளுக்கேற்ப மாறுபடும் பணத்தொகையில் தெரிவிக்கப்படுகின்றன.” – மார்க்ஸ்

3.     கூலி விகிதம் குறித்த இந்த அத்தியாயங்கள் குறித்து உணர்ச்சி வயப்படுவது எனக்கு இயலாததாக இருக்கிறது. அவை பாமரத்தனமாக எழுதப்பட்டுள்ளன என்பதை நான் கூறியாக வேண்டும் ( ஹார்வி பக்கம்  356 )

மூலதனம் பகுதி vii அத்தியாயம் xiv பிரிவு 4 – மூலதனத் திரட்டல் நிகழும் முறை :-

மார்க்ஸின் முடிவுகள் எல்லாம் அனைத்து நிலைகளுக்கும் பொருந்தக் கூடிய கூற்றுகள் அல்ல. அவரது அனுமானங்களின் அடிப்படையிலும் அவற்றின் வரம்புக்குள்ளும் அமைந்த நிச்சயமற்ற ஆய்வு முடிவுகள். இதனை நாம் மறந்தோம் எனில் அது நமக்குப் பாதகமாகவே முடியும் ( ஹார்வி பக்கம் 356 )
“தொழில் முதலாளிகள் மட்டும் அடங்கிய ஒரே வகையிலான முதலாளி வர்க்கம் இருப்பதாக நடைமுறையில் மார்க்ஸ் அனுமானிக்கிறார்”. ( ஹார்வி பக்கம் 358)
“ தொழிலாளி வர்க்கம் தொடர்ந்து துன்பச் சூழல் அதிகரிக்கும் நிலையில் வைக்கப்பட்டு முதலாளிகளால் எப்படி ஒரு சந்தையைக் காண முடியும் ? சொல்லப்போனால் மூலதனம்” இரண்டாம் பகுதியில் தொழிலாளி வர்க்கம் துன்பச் சூழலில் வைக்கப்படுவது பற்றிய குறிப்பு எதுவும் காணப்படவில்லை ( ஹார்வி 359 )

ஒப்பீட்டு உபரி மக்கள் தொகை  ( மூலதனம் I அத்தியாயம் xxv )

இந்தப் பிரிவின் கீழ் வரும் “ ஊர் சுற்றிகள், குற்றம் புரிவோர், விபசாரிகள் – சுருக்கமாகக் குறிப்பிட்டால் புரட்சியில் அக்கறையில்லாத பாட்டாளி வர்க்கப் பிரிவினர் இப்பிரிவில் அடங்குவர். இவர்கள் மீது மார்க்ஸுக்கு சிறிதளவும் நேச உணர்வு இல்லை ( ஹார்வி பக்கம் 407) )

மேற்கூறிய கூற்றின் மூலம் டேவிட் ஹார்வி மார்க்ஸின் நேர்மையை சந்தேகிக்கிறார். ஆனால் மார்க்ஸ் ஒப்பீட்டு உபரி மக்கள் தொகை என்ற அத்தியாயத்தில் இந்த வர்க்கம் முதலாளித்துவத்தின் விளைவு என்று தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். வர்க்கப் போராட்டத்தின் விளைவாக ஏற்படும் சமுதாய மாற்றத்தில் இந்தப் பிரிவினர் மறைந்து விடுவர் என்பது கண்கூடு. மார்க்ஸ் கூறுவதை பார்ப்போம். “மூலதனத் திரட்டலோடு கூடவே துன்ப துயரங்களையும் அதே அளவுக்குத் திரளச் செய்கிறது. ஆகவே, செல்வமெல்லாம் ஒரு முனையில் திரள, எதிர் முனையில். அதாவது எந்த வர்க்கத்தின் உற்பத்திப் பொருள் மூலதனமாக வடிவெடுக்கிறதோ அந்த வர்க்கத்தின் முனையில் துன்ப துயரமும் ஓயாமல் பாடுபடுவதன் வேதனையும் அடிமை இயல்பும், அறியாமையும் மிருகத்தனமும், ஒழுக்கச் சீர்கெடும் திரளக் காண்கிறோம் – மார்க்ஸ்

மார்க்ஸின் நூலை கவனமாகப் படிப்பது மற்றும் அவரது வழிமுறைகளை ஆழமாகப் புரிந்து கொள்வதன் மூலம் நோய்க்கான காரணத்தைக் கண்டறிவதற்கான ஆற்றலைக் குறிப்பிடத்தக்க வகையில் நாம் பெற முடியும். அதன்மூலம் நுண்ணறிவுத்திறப்பார்வை நமக்குக் கிடைக்கும் என்ற போதிலும், முழுமையான திருப்தியுணர்வை நாம் பெற முடியாது ( ஹார்வி  பக்கம் 419 )

ஆக டேவிட் ஹார்வியின் நோக்கம் நமக்குப் புரிந்து விட்டது. இன்றைய வளர்ச்சியடைந்த முதலாளித்துவ உலகில் மார்க்ஸின் படைப்புகளை மறுதலிக்க மார்க்சிய போர்வையில் மார்க்சிய அறிஞர்கள் என்று வேடமிட்டுத்திரியும் இத்தகைய “முதலாளித்துவ பணியாளர்கள்” குறித்து தொழிலாளி வர்க்கம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மொத்தத்தில் டேவிட் ஹார்வியின் நூல் இனிப்பு தடவப்பட்ட ஒரு நஞ்சு.” இனிப்பு இருக்கிறது என்று இத்தகைய நச்சு வலையில் தொழிலாளி வர்க்கத்தை விழச் செய்யும் சில இயக்கங்களின் சதியை முறியடிப்பதும் தொழிலாளி வர்க்கத்தின் வரலாற்றுக் கடமையாகும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------
இக்கட்டுரையின் ஆசிரியர் ஜீவா மார்க்சின் மூலதனம் முதல் தொகுதி முழுமையும் வகுப்பு எடுத்தவர்.

மீண்டும் வகுப்பு எடுக்கும்படி பலர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க தற்போது மூலதன முதல் தொகுதியை வகுப்பெடுக்க திட்டமிட்டுள்ளார்.

3 கருத்துகள்:

  1. மார்க்சியத்தின் அரசியல் ​பொருளாதாரத்​தை படிக்க ​​வேண்டும் என்ப​தையும், அது குறித்த விவாதத்​தை தமிழகத்தில் தூண்டும் வ​கையில் ஒரு சர்ச்​சை​யைக் கிளப்பும் வண்ணம் ​வெளிவந்திருக்கும் இம்​மொழி​பெயர்ப்பு நூ​லையும் அதன் பதிப்பகத்தா​ரையும் இந்த அர்த்தத்தில் பாராட்டலாம்.

    ​தோழர் ஈஸ்வரனின் விமர்சனக் கட்டு​ரை​யைத் ​தொடர்ந்து ​தோழர் ஜீவாவின் கட்டு​ரை ​மேலும் ஆழமாக அதில் உள்ள சிக்கல்க​ளை அலசுகிறது. இது ஒரு நல்ல துவக்கமாக​வே ​தோன்றுகிறது.

    ஏங்​கெல்ஸ் குறிப்பிடுவது ​போல் மார்க்சியத்தின் எதிரிகளின் கருத்துக்கள் மீதான எதிர்ம​றை விமர்சனங்கள் மார்க்சியத்திற்கான ​நேர்ம​றை விளக்கங்களாக நம்​மை வந்த​டைகிறது. அப்படியாக ​தோழர்களின் ஆழமான விமர்சனங்கள் மார்க்சியத்தின் திறவு​கோல்க​ளை நமக்களிக்கிறது.

    இத்த​கைய விவாதங்களும், விமர்சனங்களும் ​தொடர​வேண்டும். அது​வே சரியான தி​சைவழிக​ளை கண்ட​டைவதற்கான வாய்ப்புக​ளை ஏற்படுத்தும். நன்றி ​தோழர் ஜீவாவிற்கு

    பதிலளிநீக்கு
  2. நான் இப்போது தான் டேவிட் ஹார்வியின் புத்தகத்தைப் படித்து முடித்தேன். முன்னுரையைப் படிக்கும் போது ஏற்பட்ட வியப்பு, புத்தகத்தின் 20-30 பக்கத்தைத் தாண்டும் போது தகர்ந்து போனது.

    இக்கட்டுரை குறிப்பிடுவது போல் இனிப்பு கரைந்து போகிறது.

    மூலதன புத்தகத்தின் ஆங்கில பதிப்புக்கு எழுதிய முன்னுரையில் எங்கெல்ஸ் முதலாளித்துவத்தின் நெருக்கடிக்குக் காரணமாக மிகைவுற்பத்தியும், இந்த முதலாளித்துவ முரணே சமூக மாற்றத்துக்கு இட்டுச் செல்வதையும் கூறியிருக்க, டேவிட் ஹார்வி நெருக்கடிக்கு குறைநுகர்வு காரணம் என்கிறார். இத்தோடு நில்லாமல் கம்யூனிசப் புரட்சி எவ்வாறு உருவாகும் என்று மூலதனப் புத்தகம் பேசவில்லை என்று டேவிட் ஹார்வி தனது முன்னுரையில் அப்பட்டமாக பொய்யுரைக்கிறார்.

    டேவிட் ஹார்வி எங்கெல்ஸ் மார்க்ஸ் லெனின் போன்றவர்களின் பாட்டாளி வர்க்கப் பார்வையில் மூலதனத்தை அணுகவில்லை என்பதே உண்மை.

    மார்க்சிய சமூகவியல் கோட்பாடான வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தை ஏற்றுக் கொள்ள முடியாத டேவிட் ஹார்வி இந்த முடிவுக்கு வந்திருப்பதில் ஆச்சரியம் ஏதும் இல்லை. இதனை வெளியிட்டுள்ள பாரதி புத்தகாலயமும் அதனைச் சார்ந்த கட்சியும் டேவிட் ஹார்வியின் முடிவுகளோடு ஒத்துப் போய்யிருப்பது பலருக்கு ஆச்சரியத்தையே தரும்.

    இக்கட்டுரை ஆசியரியர் எச்சரித்துள்ளது போல் இது போன்று மார்க்சிய அடிப்படைகளை சிதைக்கின்ற இயக்கங்களின் நச்சு வலையில் தொழிலாளி வர்க்கம் விழாமல் காப்பது மார்க்சியத்தை ஏற்றுக் கொண்டவர்களின் வரலாற்றுக் கடமையாகும்.

    குமார் tamilkumarlenin@gmail.com

    பதிலளிநீக்கு
  3. ​டேவிட் ஹார்வி தன்னு​டைய புத்தகத்தின் "Introduction" ல் சரக்கு குறித்து ஏன் முதலில் தான் ​பேசத் துவங்கி​னேன் என்பது குறித்த ​கேப்பிடலின் முதல் அத்தியாயம் பற்றி காரல் மார்க்சின் எந்த விளக்கமும் இல்​லை என்பதாகக் குறிப்பிடுகிறார்:

    "Marx's starting point is the concept of the commodity. At first blush this seems a somewhat arbitrary if not strange place to start. When thinking of Marx, phrases like the Manifesto's "all history is the history of class struggle" come to mind. So why doesn't Capital start with class struggle? In fact it takes about three hundred pages before there's more than a hint of that, which may frustrate those looking for an immediate guide to action. Why doesn't Marx start with money? Actually, in his preparatory investigations, he wanted to start there, but after further study he concluded that money needed to be explained rather than assumed. Why doesn't he start with labor, another concept with which he is deeply associated? Why does he start with the commodity? Interestingly, Marx's preparatory writings indicate that there was a long period, about twenty or thirty years, during which he struggled with the question of where to begin. The method of descent brought him to the concept of the commodity, but Marx makes no attempt to explain that choice, nor does he bother to argue for its legitimacy. He just starts with the commodity, and that is that." (A Companion to Marx's Capital, Page 9 2nd Paragraph)

    ஆனால் மார்க்ஸ் தன்னு​டைய ​ஜெர்மன் பதிப்பின் "1867 Preface to the First German Edition"ல் மூன்றாவது பத்தியில் கீழ்க்கண்டவாறு மிக அற்புதமாக இது குறித்து விளக்குகிறார்:

    "Every beginning is difficult, holds in all sciences. To understand the first chapter, especially the section that contains the analysis of commodities, will, therefore, present the greatest difficulty. That which concerns more especially the analysis of the substance of value and the magnitude of value, I have, as much as it was possible, popularised. [1] The value-form, whose fully developed shape is the money-form, is very elementary and simple. Nevertheless, the human mind has for more than 2,000 years sought in vain to get to the bottom of it all, whilst on the other hand, to the successful analysis of much more composite and complex forms, there has been at least an approximation. Why? Because the body, as an organic whole, is more easy of study than are the cells of that body. In the analysis of economic forms, moreover, neither microscopes nor chemical reagents are of use. The force of abstraction must replace both. But in bourgeois society, the commodity-form of the product of labour — or value-form of the commodity — is the economic cell-form. To the superficial observer, the analysis of these forms seems to turn upon minutiae. It does in fact deal with minutiae, but they are of the same order as those dealt with in microscopic anatomy. " (Capital Volume 1, Prefaces and Afterwords By Karl Marxc and Frederick Engels To the German and French Editions Preface to the First German Edition, Page 18-19, 3rd Paragraph)

    பதிலளிநீக்கு

முகப்பு

புதிய பதிவுகள்